'உறக்கமில்லை இது!!!! கண்டிப்பாக உறக்கம் இல்லை.!!!'' 'தன்னையோ அல்லது ரஞ்சனியையோ மது கவனித்து இருக்க வேண்டும், தான் வந்து அமர்ந்த்ததையும் உணர்ந்திருக்க வேண்டும்' என்றே இப்போது தோன்றியது தனாவுக்கு.
'என்னை, என்னுடன் பேசுவதை, தவிர்த்து விடுவதற்கான நாடகம் இது. எத்தனை நேரம் நடத்த முடியும் இந்த நாடகத்தை??? இந்த நாடகத்தை கலைக்கும் வழி நன்றாகவே தெரியும் எனக்கு'.
சட்டென எழுந்து கதவின் அருகில் சென்று நின்றுக்கொண்டான் அவன். அடுத்த சில நொடிகளில் அவன் உதடுகளுக்கு இடையே புகைய ஆரம்பித்தது சிகரெட்.
சரியாக ஒரே நிமிடம். அவன் முன்னால் நீண்டது அந்த கரம். அவன் வாயிலிருந்த சிகரெட்டும், கையிலிருந்த சிகரெட் பெட்டியும் ஒன்றாக சேர்ந்து பறந்து வெளியே சென்று விழுந்தது.
'அறிவு கெட்டவனே. கல்யாணம் ஆயிடுச்சு. இன்னும் திருந்தலையா நீ?'
பேச்சு எழவில்லை. சத்தியமாக வார்த்தைகள் கிடைக்கவில்லை தனாவுக்கு. அவனே அறியாமல் அவன் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு நின்றது
.'சே ... வெட்கமாயில்லே?. இப்போ எதுக்கு தனா அழறே? செய்யறது எல்லாம் செஞ்சிட்டு இப்போ அழுதா செஞ்சது எல்லாம் சரின்னு ஆயிடுமா? காலத்துக்கும் உன்னோட பேசக்கூட கூடாதுன்னு நினைச்சேன். ஆனா உன் முகத்தை பார்த்ததும் அப்படியே தோத்து போயிட்டேன்.... உன் மேலே பாசம் வெச்சி தொலைச்சிட்டேனே.... ' கோபம் கொப்பளிக்க ஆரம்பித்த மதுவின் தொனி கடைசியில் சற்றே இறங்கி முடிந்தது..
கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு பார்வையை இருட்டில் பதித்துக்கொண்டான் கொண்டான் தனா. மதுவின் பார்வையுமே சில நிமிடங்கள் இருட்டை துழாவியது.
'சொல்லி இருக்க வேண்டியதுதானே? எனக்கு ரஞ்சனியை பிடிச்சிருக்கு அப்படின்னு நேரடியா சொல்லி இருக்க வேண்டியதுதானே. நான் விட்டுக்கொடுத்திருக்க மாட்டேனா? கடைசியிலே இத்தனை வருஷம் உன் கூட உயிருக்கு உயிரா பழகின என்கிட்டே கூட சொல்லாம கல்யாணம். எப்படி தனா.??? என்னையும் மொத்தமா அசிங்கபடுத்தி, நீயே உன்னை அசிங்க படுத்திட்டு... அப்படி என்ன? நான் உன் வாழ்க்கைக்குள்ளே புகுந்து அதை அழிச்சிடுவேன்னு பயமா? சே....' மதுவிடமிருந்து வெடித்தன வார்த்தைக்கள்.
மௌனம்!!! சில நிமிடங்கள் மௌனத்தின் அரசாட்சி அங்கே. தன்னை கட்டுப்படுத்தி, கட்டுப்படுத்தி பார்த்துவிட்டு முடியாமல் மதுவின் தோளில் முகம் புதைத்தான் தனா. 'என்னை மன்னிச்சிடு மது. ரொம்ப தப்பு பண்ணிட்டேன். உனக்கு துரோகம் பண்ணிட்டேன்.' குலுங்கினான் அவன்.
'தனா... தனா ப்ளீஸ்.. கண்ட்ரோல் யுவர்செல்ஃப். யாராவது பார்க்க போறாங்க....' எதற்கும் நிற்கவில்லை தனாவின் கண்ணீர்.
'என்னை ... மன்னிச்சிடு மது... ப்ளீஸ் மது ...' மதுவின் தோள்களிலேயே புலம்பி, குலுங்கி தீர்த்து, ஒரு வழியாக சுதாரித்து நிமிர்ந்தான் தனா.
'ஏன் தனா இப்படி பண்றே? சரி முகத்தை துடைச்சிட்டு வா' சொல்லிவிட்டு மது நடக்க, இருவரும் மதுவின் இருக்கையில் சென்று அமர்ந்தனர் இருவரும்.
'இப்போ எங்கே இருக்கே மது?'
'மறுபடியும் பெங்களூர் வந்திட்டேன். 'சரி சிஸ்டர் எப்படி இருக்காங்க?'
'ம்???' நிமிர்ந்தான் தனா.
'சிஸ்டர் எப்படி இருக்காங்கன்னு கேட்டேன். நீ தாலி கட்டின, இல்லை தாலி கட்டணும்ன்னு நினைச்ச நிமிஷத்திலிருந்தே ரஞ்சனி எனக்கு சிஸ்டர்தான் புரிஞ்சதா? தேவை இல்லாம எதையும் குழப்பிக்காதே.' என்ற மதுவின் கரங்களுக்கு வந்திருந்து அந்த கல்யாண பத்திரிக்கை.
'வர இருபதாம் தேதி எனக்கு கல்யாணம். சென்னையிலே. எதையும் மனசிலே வெச்சுக்காம நீயும் சிஸ்டரும் ஒழுங்கா வந்து சேருங்க.' தனாவின் கண்களை பார்த்து உறுதியான குரலில் சொன்னான் மது என்ற மதுசூதனன். தனாவின் உயிர் நண்பன்.
அரை டிராயர் கைலியாக மாறிய காலத்திலிருந்து வேரூன்றி வளர்ந்த நட்பு அவர்களுடையது. எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது, ஒரு நாள் ரஞ்சனியை மது பார்க்கும் வரை!!!
தனாவின் தூரத்து சொந்தம் அவள். அவளை பார்த்ததும் ஏனோ சட்டென பிடித்து போனது மதுவுக்கு. தனாவின் மனதில் இருக்கும் ஆசையை அறியாதவனாக தனது மனதை உடனே தனாவிடம் வெளிப்படுத்திவிட்டிருந்தான் மது.
இதை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை தனாவால். மது அவளை சந்திக்கும் சந்தர்ப்பத்தை மட்டும் ஏற்படுத்திக்கொடுக்கவே இல்லை தனா.
மது சொல்வதற்கெல்லாம், அவன் ஆசைக்கெல்லாம் சரி சரியென தலையாட்டிக்கொண்டே இருந்தவன், அவன் இரண்டு மாதங்கள் வெளிநாட்டு பயணத்தில் இருந்த ஒரு சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு அவசரம் அவசரமாக நடத்திக்கொண்டான் ரஞ்சனியுடனான தனது திருமணத்தை. விஷயம் கேள்விப்பட்டு அதிர்ந்து தான் போனான் மது.
ஒரு கண்ணியமான நண்பனாக எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் அவனை விட்டு அப்படியே விலகி இருந்தான் மது. இந்த நிமிடம் வரை மது என்ற ஒரு நண்பன் தனாவுக்கு இருப்பதை கூட அறியாதவள் ரஞ்சனி.
திருமணம் முடிந்த பிறகுதான் உறுத்த துவங்கியது தனாவின் மனசாட்சி. இதோ இப்போது மதுவின் தோள்களில் எல்லாவற்றையும் கொட்டி தீர்த்த இந்த நிமிடத்தில் ஏதோ மிகப்பெரிய பாரம் இறங்கிய ஒரு உணர்வு.
ஒரு ஆழமான மூச்சுடன் மதுவின் முகம் பார்த்தான் தனா 'ரொம்ப சாரிடா...' என்றான் மறுபடியும்.
'ஏன்டா... திரும்ப திரும்ப அதையே சொல்லிட்டிருக்க. சரி. நீ செஞ்ச தப்புக்கு என்ன தண்டனை தெரியுமா? இனிமே சிகரெட்டை தொடவே கூடாது சரியா?' தோளை அணைத்து வாஞ்சையுடன் சொன்ன நண்பனின் தோளில் கண் மூடி சாய்ந்துக்கொண்டான் தனா.
This is entry #83 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - நட்பு
எழுத்தாளர் - வத்சலா
{kunena_discuss:1083}