ஆனால் காதல் கொண்ட மனம் அவனைத் தவறாகச் சித்தரிக்கவும் விடவில்லை. நன்றாகத்தான் இருப்பான் இரவில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவளுடைய வயிற்றில் இருக்கும் தன்னுடைய குழந்தையிடம் கொஞ்சி கொஞ்சிப் பேசிக் கொண்டிருப்பான். அதிலும் ஐந்தாவது மாதத்திலிருந்து சின்னஞ்ச்சிறு அசைவுகளால் தானும் தன் தந்தைக்கு குழந்தைப் பதில் கொடுக்க ஆரம்பித்ததிலிருந்து அது அவர்களுடைய தினசரி வழக்கமாயிற்று.
தகப்பனும் குழந்தையும் தன்னை விட நெருக்கமாக இருப்பதாக தோன்றும் அவளுக்கு. என்னவோ இருவரும் மட்டும் கொஞ்சிக் கொள்வதாகவும் தன்னை தனியே விட்டு விட்டது போலும் அவளுக்கு ஏக்கமாக இருக்கும். குழந்தையைக் கொஞ்சுகின்ற பொழுதுகள் எல்லாம் இவளுக்கும் தாராளமாய் முத்தங்கள் கிடைக்கும். ஆனாலும், பகலில் அவன் காய்ச்சுகின்ற காய்ச்சலில் அவளுக்கு அந்த முத்தங்கள் அவ்வளவாய் ரசிக்காது.
போடா உன் குழந்தைக்காகத் தானே என்னைக் கொஞ்சுகின்றாய் உன் முத்தங்கள் வேண்டாமென்றுச் சொல்லி விடலாமா? என்றுக் கூட எண்ணுவாள். ஆனால், ஃப்ரீயாக கிடைப்பதை எதற்கு வேண்டாமெனச் சொல்ல வேண்டும் என்று உடனே மனதை மாற்றிக் கொள்வாள்.
தன்னுடைய தாய் தந்தையை எண்ணி உள்ளுக்குள் ஏக்கமாக இருந்தாலும் அவனுக்கு காட்டாமல் மறைத்துக் கொள்வாள். இது அவர்கள் இருவரும் வேண்டி எடுத்த முடிவு தானே? அவளுக்கு எத்துணை வருத்தமோ அவ்வளவு வருத்தம் அவனுக்கும் இருக்கும் தானே? என்றெண்ணி அந்த விஷயத்தை மனதிற்க்குள் போட்டு புதைத்துக் கொண்டாள்.
இதோ இப்போதும் அவன் திட்டிக் கொண்டுதான் இருக்கிறான் இவனுக்கு வேறு வேலையில்லை. பதில் பேசினால் சண்டைதான் வளரும். எனவே முகத்தைத் திருப்பிக் கொண்டு அமர்ந்தாள்.
ஒரு தடவைச் சொன்னாக் கேட்க மாட்டியா சுப்ரி? அவன்தான் கத்திக் கொண்டு இருந்தான். ஆரஞ்சுப் பழங்களைக் கொண்டு குவித்து வைத்து விட்டு அதில் ஒரு பழம் மட்டுமே சாப்பிட்டதற்க்கு தான் இந்த கூப்பாடு. அதைக் கொஞ்சம் அமைதியாகச் சொன்னால் தான் என்ன?
அத்தனைப் பழங்களையும் சாப்பிடுவதற்க்கு அவளென்ன பகாசுரியா? ( பகாசுரன் பெண்பால் பெயர் ஹி ஹி ) ஏற்கெனவே சாப்பாட்டிற்க்கு இணையாக அத்தனை டானிக் மாத்திரை, சிரப் என்று அதிலேயே வயிறு நிறைந்து விடுகின்றது. இதில் இவன் வேறு………
முகத்தை திருப்பிக் கொண்டவளிடம் சற்று இணக்கமாகவே பேசிக் கொண்டிருந்தாலும் கடுமையான தொனி மட்டும் மாறவில்லை.
‘ சுப்ரி நம்ம குழந்தைக்கு இனிமே தான் நிறைய கால்சியம் தேவைப்படும். அந்த சத்தெல்லாம் உன் உடம்பிலிருந்து தான் எடுத்துக்கும். என்னதான் கால்சியம் மாத்திரைச் சாப்பிட்டாலும் அதனால போதுமான அளவுக்கு கால்சியம் தேவையை பூர்த்திச் செய்ய முடியாது. நீ கால்சியம் இருக்கிற ப்ரூட்ஸ், காய்கறி எல்லாம் சாப்பிட்டாதான் நல்லது. இல்லைனா குழந்தை வளர வளர உனக்கு பல்வலி இப்படி நிறைய பிரச்சினைகள் வர வாய்ப்பிருக்கு. அதுக்குத்தான் சொல்றேன் நிறைய ஆரஞ்சஸ் சாப்பிடு.என்று முடித்தான்.
பேசி அவனுக்கே டயர்ட் ஆகியிருக்கும் போல போய் ஃப்ரெஷ் ஆகச் சென்றான். அவன் திரும்பவும் அவன் முதுகிற்கு தன் கோபம் தீர பழிப்புக் காட்டினாள் அவள். வந்துட்டாரு பெரிய டாக்டர் எப்ப பாரு நெட்டிலேயே பழியாகக் கிடக்கிறது. எதையாவது படிச்சிட்டு என் உயிர வாங்குறது, போடா இன்னிக்கு நான் இந்த ஆரஞ்ச் சாப்பிடவே மாட்டேனே.வீம்பிற்காக கட்டாயமாய் படுத்து இமைகளை அழுந்த மூடிக் கொண்டாள்.
அப்படியே சற்று நேரத்தில் தூங்கி விட திரும்ப வந்து அவளை எழுப்பிப் பார்த்தவன் தூங்குபவளை தொந்தரவுச் செய்யாமல் தன் வேலையைப் பார்க்க தொடங்கினான்.
வந்தே விட்டது அவர்கள் இருவரும் எதிர்பார்த்த அந்நேரம். குழந்தையின் வரவு இன்பமுமாய், மனைவியின் உடல் நோவு துன்பமுமாய் ஒவ்வொரு கணவனையும் கலவையான உணர்வுகளால் தாக்கும் மனைவியின் பிரசவ நேரம்.
ஆயிற்று தன்னுடைய செல்ல குட்டிக் குழந்தையைப் பார்த்து மெய் சிலிர்த்தது. என்னை அடையாளம் தெரியுதா? நாம தினம் பேசிப்போமே? நான் தான் உன் அப்பா……. என்று பேனா நண்பர்கள் ஸாரி ஸாரி தற்போதைய ட்ரெண்டிற்க்கு முகம் தெரியாமல் பேசி பழகி பின்னர் நேரில் சந்திக்கும் ஃபேஸ்புக் நண்பர்கள் என்றுச் சொல்வது சரியாகுமோ?.......ஏதோ ஒன்று முதன் முதலில் இருவரும் ஒருத்தரை ஒருத்தர் பார்க்கும் தருணம். மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. குழந்தையின் கை கால் அசைப்பிலும் , ஏதோ சின்னதாய் சொல்லி பேசும் முதல் மொழியான ங்கா விலும், பசியில் வீரிடும் கத்தலிலும் தன்னையே மறந்தான்.
மனைவியை படுக்கைக்கு கொண்டு வர அங்கு விரைந்தான். மிகவும் அசதியாக மயக்கமும் உறக்கமுமாக இருந்தாள். அவளை ஆறுதலாக தொடவும் பயமாக இருந்தது. ஒருவேளை அவளுக்கு வலிக்குமோ என்றெண்ணி மென்மையாக வலியில் சுளித்திருந்த அவள் நெற்றியில் தன் கரத்தை பரவ விட்டு நீவினான். சற்றே அவள் ஆசுவாசப் பட்டது போல தோன்றிற்று.
மனைவியின் வலியில் தானும் பாதியையாவது வாங்கிக் கொள்ள முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று உணர்ந்தான். சற்று நேரத்தில் கண்விழித்தவளிடம் அதே புன்முறுவல். இவ்வளவு வலியிலும் எப்படித்தான் புன்னகைக்கிறாளோ? குனிந்து நெற்றியில் முத்தமிட்டான்.
வாழ்த்துக்கள் சுப்ரி நம்ம குட்டிப் பொண்ணு வந்து விட்டாள், அவ அப்படியே……..