ஜுரிச் விமான நிலையத்தின் வெளியே வரும் பொழுது மாலை நான்கு மணியாகியது. அவர்களுக்காக இந்தரின் நண்பனின் கார் காத்திருந்தது. காரையும், அவர்கள் தங்கப் போகும் விருந்தினர் மாளிகையின் சாவியையும், இந்தரிடம் ஒப்படைத்து விட்டு ஓட்டுனர் கிளம்பிச் சென்றார்.
காரில் ஏறியவுடன் முதலில் ஜிபிஸ் கருவியில் Lungern என்று டைப் செய்து வண்டியை கிளப்பினான். அக்கருவியும் அழகாக வழி காட்டி வந்தது. ஒரு மணிநேர பயணத்தில் அவ்வூரை அடைந்தனர். கடல் மட்டத்தில் இருந்து 2460 அடி உயரத்தில் இருந்ததால், அவர்கள் நவம்பர் மாதத்தில் வந்ததால் அங்கு 11 டிகிரி வெட்ப நிலையே இருந்தது. இன்னும் பனி பொழிவு ஆரம்பமாகவில்லை. ஆனால் குளிர் அதிகமாக இருந்தது. அந்த சிறிய ஊர் லுங்கேன் என்ற ஏரியை சுற்றி அமைந்து இருந்தது.
அந்த ஏரியின் ஒரு கரையில் இருந்த இந்தரின் நண்பன் லெவினின் விருந்தினர் வீட்டை அடைந்தனர். படிக்கும் காலத்தில் அவனுக்கு நல்ல நண்பன் என்பதால், இன்னும் அவர்களது நட்பு தொடர்ந்தது. லெனின் அடிக்கடி மால்டிவ்ஸ் வந்து இந்தரின் ரேசர்டில் தங்கி செல்வது வழக்கம். இது தான் முதல் முறை இந்தர் இப்படி இங்கு வந்து தங்குவது. முன்பு படிக்கும் காலத்தில் லெவினுடன் வந்தது, இந்தருக்கு மிகவும் பிடித்த இடம்.
அந்த வீட்டின் படுக்கை அறையில் இருந்து பார்த்தால், இந்த ஏரி அழகாக காட்சி அளித்தது. சுற்றிலும் மலைகள் பச்சை கம்பளம் விரித்தது போல் காட்சி அளித்தது. சற்று தொலைவில் இருந்த மலைகள் வெண்பனி போர்த்தி குளிரை பறை சாற்றியது. வீட்டின் வெளியே வந்து பத்து படிகள் இறங்கினால் ஏரியின் கரை அமைந்து இருந்தது. அதில் அவர்களுக்கு சொந்தமான படகு நிறுத்தும் இடமும் இருந்தது.
மூன்று படுக்கை அறை கொண்ட வீடாக இருந்தது. சமையல் அறையில் இவர்களே சூடு செய்து சாப்பிட ஏதுவாக அணைத்து பொருட்களும் இருந்தது. குளிர் சாதன பெட்டியில் முழுவது அதுவாகவே இருந்தது. பழங்கள், சாக்லேட்கள், ஜூஸ் வகைகள் என அனைத்தும் இருந்தது.
வீட்டை முழுவதும் சுற்றி பார்த்து பூஜாவிற்கு மிகவும் பிடித்து இருந்தது. ”வீடு ரொம்ப அழகா இருக்கு இந்தர், எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு.” என பூஜா மனதார கூறினாள்.
“இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்த என்னை பிடிச்சு இருக்குன்னு சொல்லவான்னு பார்த்தா!!!!! வீட்டை பிடிச்சு இருக்குன்னு சொல்லி இப்படி ஏமாத்திடியே கண்மணி” என்று வசனம் பேசினான் இந்தர்.
“ஹையோ, இப்படி எல்லாம் பேசறது, கொஞ்சம் கூட உங்களுக்கு பொருந்தல இந்தர்” என கூறி சிரித்தாள் பூஜா........
முதல் இரண்டு நாள் வீட்டினுள்ளேயே சுற்றி வந்து ஒருவரை ஒருவர் ரசித்தனர். மூன்றாவது நாள் அங்கிருந்த படகில் ஏறி அந்த ஏரியை சுற்றி வந்தனர்.
நான்காம் நாள் வெளியே எங்காவது போகலாம் என முடிவு செய்து பக்கத்தில் சுற்றி பார்க்க என்ன இடம் உள்ளது என பார்த்த பொழுது ஒரு மணி நேர பயணத்தில் கிரிண்டல் வால்ட் என்ற இடம் இருந்தது. அது கடல் மட்டத்தில் இருந்து 13015 அடி உயரத்தில் இருந்தது அந்த மலைப் பகுதி. காலை சிற்றுண்டியை முடித்து இருவரும் காரில் அங்கு கிளம்பினர். வழியெங்கும் பசுமையாக, கண்ணனுக்கு குளிர்ச்சியாக இருந்தது. ஒரு மணிநேர பயணத்தில் அந்த மலை அடிவாரத்தை அடைந்து அங்கு காரை நிறுத்தி விட்டு அங்கிருந்து வின்ச்சில் ஏறி மலை முகட்டை அடைந்தனர். அந்த இடத்தில் பச்சை கம்பளம் விரித்தார் போன்று எங்கு பார்த்தாலும் புல்வெளியாக இருந்தது.
முதலில் நடை பயணமாக அந்த மலையின் ஒரு ஓரம் முழுவதும் நடை மேடை அமைத்து அதில் நடந்து சென்றவாறே பக்கத்து மலையை பார்க்கும் வண்ணம் அமைந்து இருந்த மேடையில் நடந்து சென்று அங்கிருந்து இயற்கையை பார்த்து மகிழ்ந்தனர். பக்கத்து மலை இதை விட உயரமாக இருந்ததால் அது முழுவதும் வெண்பனியால் மூடப்பட்டு, எதோ நம்மூர் தார் ரோடில் கோல மாவை கொட்டி வைத்தது போன்று, கருப்பு மலை மீது வென்பனியாக, காட்சி அளித்தது.
அந்த நடை மேடையில் நடக்க பூஜாவிற்கு தான் கால் கூசியது. இந்தரிடம் கூறினால் நிச்சயம் கிண்டல் செய்வான் என்று, அவனிடம் ஏதும் கூறாமல் அவனது கைகளை கெட்டியாக பிடித்தபடி நடந்தாள் பூஜா.
“நமக்கு கல்யாணம் ஆன நாள் முதல் ஒரு முறை கூட நீயாக என்னை அணைக்கவே இல்லைடா. இதுக்காகத் தான் இங்கு உன்னை அழைத்து வந்தேன். இப்போ பார், நீயாகவே என்னை பிடித்துக் கொண்டு வர்ற” எனக் கூறி சிரித்த படி அவளது பயத்தை போக்கும் வழியாக பேசிக் கொண்டே வந்தான்.
முதலில் அவன் கூறியது கேட்டு கோபம் வந்தாலும் அவன் தனது பயத்திலிருந்து திசை திருப்பவே அவ்வாறு பேசுகிறான் என புரிந்து சிறிது பயம் நீங்கி அதிகம் கீழே பார்க்காமல், அடுத்திருந்த மலையையும், அதிலிருந்த பனியையும் பார்த்து ரசித்தபடி நடந்து வந்தாள் பூஜா.......
நடை பயணம் முடிந்து அங்கிருந்த உணவகத்தில் இருவரும் உணவருந்தினர். அங்கிருந்த திறந்த வெளியில் அமர்ந்து அந்த ஆறு டிகிரி குளிரை அனுபவித்தனர். உடைகளும் அதற்கு தகுந்தவாறு இருந்ததாலும், வெயிலின் கதிர்கள் பரவி இருந்ததாலும் அனைத்தையும் ரசிக்க முடிந்தது. அந்த குளிரை அனுபவிக்கும் பொழுது தான் ஏன் இந்த ஐரோப்பியர்கள், அங்கு மால்டிவ்ஸ்ல் வந்து வெயில் குளியல் (சன் பாத்) எடுக்கிறார்கள் என்று புரிந்தது.