தொடர்கதை - விழிகளிலே காதல் விழா - 27 - தேவி
பொங்கல் ஹாலிடேஸ் முடிஞ்சு அன்று கல்லூரி திறக்க, மாணவ மாணவிகள் கொஞ்சம் உற்சாகம் குறைய இருந்தாலும் புது ஆடை உடுத்தி , பார்ப்பதற்கு பளிச்சென்று வர ஆரம்பித்து இருந்தனர்.
ஹாஸ்டல் மாணவர்கள் அப்போதுதான் திரும்ப ஆரம்பித்து இருந்தனர். அன்று மாலை கல்லூரி முடியும் வரை அவர்கள் ஹாஸ்டல் வரலாம் என்பதால் , நேராக வகுப்பிற்கு வந்து சேர்ந்தனர். ஊர்லிருந்து வருபவர்கள் வீட்டில் கொடுத்து விட்ட பலகாரங்களோடு வந்து இருக்க, அதை பிரித்து மேய ஒரு கும்பல் அவர்களை சுற்றி அமர்ந்து இருந்தனர்.
மார்கழி முடிந்து இருந்தாலும் , இன்னும் பனி குறையாத காரணத்தால் அந்த ஒன்பது மணியிலும் சில்லென்று இருந்தது,
வழக்கம் போல் செழியன் அவன் புல்லட்டில் வர, சரியாக அதே நேரம் மலரும் தன் வண்டியில் வந்து கொண்டு இருந்தாள்.
நேராக பார்கிங் சென்றவர்கள் அங்கே ஒரு சில மாணவர்கள் அரட்டை அடித்து கொண்டு இருப்பதை பார்த்து விட்டு இப்போது எதுவும் பேச முடியாது என்று எண்ணியவனாக செழியன் கிளம்பி விட்டான்.
மாணவர்கள் அவனை பார்த்து வணக்கம் சொல்லி வழி விட,
“என்னப்பா... லீவ் எல்லாம் என்ஜாய் பண்ணினீங்களா?”
“ஆமாம் சார்.. என்ன சார் நீங்க அதுக்குள்ளே வந்துட்டீங்க.. வழக்கமா பொங்கல் டைம்லே மட்டும் ஒரு வாரம் லீவ் எடுப்பீங்களாமே.”
“பசங்களா.. எல்லாம் தெரியுது உங்களுக்கு... இந்த முறை என் ரிசர்ச் வேலை, நம்ம காலேஜ் அன்னுவல் டே வேலை எல்லாம் இருக்கிறதால் லீவ் போடல.. வந்துட்டேன்..” என்று பேசிக் கொண்டு இருக்கும்போதே மலரும் வந்துவிட, அவளை பார்த்து விட்டு ,
“சரி .. நான் கிளம்பறேன்பா.. கிளாஸ்க்கு சீக்கிரம் போங்க.. “ என்ற படி நடந்தான்.
மாணவர்கள் இப்போது மலருக்கு “மோர்னிங் மேடம்.. “ என விஷ் செய்ய, அவளும் பதிலுக்கு அவர்களிடம் வணக்கம் சொல்லி விட்டு வண்டியை பார்க் பண்ணி விட்டு கிளம்பி விட்டாள்.
அவள் ஸ்டாப் ரூம் நோக்கி செல்ல, வழியில் செழியன் கான்டீன் பக்கம் செல்வதை பார்த்து விட்டு, மலரும் பின் தொடர்ந்தாள்.
காண்டீன் இந்த நான்கு நாட்களாக இல்லாமல் இன்று தான் திறந்து இருப்பதால், அவசர டிபன் உப்புமா மட்டுமே.. செழியன் சென்று டிபன் என்ன இருக்கு என்று கேட்க, வந்த பதிலில் தன்னை நொந்தபடி வேறு வழியில்லாமல் அதை வாங்கி கொண்டு அமர்ந்தான்.
காண்டீனில் கூட்டம் இல்லை இன்று.. அவன் ஒரு ஓரமாக அமர, அப்போது அங்கே வந்த மலர் , ஒரு காபி சொல்லி விட்டு, அவன் எதிரில் அமர்ந்தாள்.
அப்போதுதான் பார்ப்பது போல் செழியனை பார்த்து
“மார்னிங் சார்.. “ என்றாள்.
“மார்னிங் மேடம்” என்றான் செழியன்..
கான்டீன் ஸ்டாப் காபி வைத்து விட்டு செல்லும் வரை எதுவும் பேசாமல் இருந்தவர்கள், அவன் சென்றவுடன் இருவரும் ஒரே நேரத்தில்
“மிஸ் யு.. விழிம்மா.. ” மிஸ் யு இளா “ என,
இரண்டு பேருக்கும் புன்னகை தோன்றியது. பிறகு செழியன்
“மலர் .. எப்படி இருக்க ?”
“ஹ்ம்ம்.. நல்லா இருக்கேன்.. நீங்க ?”
“ஓகே மா.. “
“வீட்டில் சாப்பிடலையா ?”
“இல்லை.. அம்மா அப்பா ஊர்லேதான் இருக்காங்க.. நான் மட்டும்தான் வந்தேன்..”
“ஒஹ் .. “ என்றவள் , “உப்புமா பிடிக்கலைனா.. என்னோட லஞ்ச் சாப்பிடறீங்களா “
“இருக்கட்டும்.. பரவாயில்லை..”
“போன வேலை முடிஞ்சுதா..?”
“ஹ்ம்ம்.. ரிசர்ச் வேலை எதிர்பார்த்த அளவு முடிஞ்சுது.. ஆனால் .. “ என்று நிறுத்தினான்
“என்ன ஆச்சு செழியன்..? எதுவும் பிரச்சினையா ?”
“ஆமாம்.. ஆனால் இங்கே வைத்து பேச முடியாது.. மாலை நம்ம கபே காபி டே ஷாப்பிற்கு போகலாமா?”
மலர் சற்று யோசித்தாள். இதுவரை அவள் இதே போல் சென்றதில்லை.. அவளின் யோசனையை பார்த்த செழியன்
“எனக்கு புரியுது மலர்.. நாம பேசி ஆகணும்.. ப்ளீஸ் வேறு வழி இல்லை.. “ என
“சரி.. வரேன்.. ஆனால் ரொம்ப நேரம் ஆக்க வேண்டாம்..”
“சூர்.. நாம பிரச்சினையை பேசிட்டால் , அதன் முடிவுகளை கூட போனில் பேசிக்கலாம்.. “
“சரி.. “
“ஓகே.. நீ இப்போ ஸ்டாப் ரூம் போ... நான் கொஞ்சம் லைப்ரரி வரை போய் விட்டு வருகிறேன்..” என்று விட்டு அவன் வாஷ் பேசின் பக்கம் சென்று விட்டான்.
மலரும் அவனிடம் தலையாட்டி விட்டு, தன் இடம் நோக்கி நகர்ந்தாள்.