18. இவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்
“மனசோட வலியை விட இது ஒன்னும் பெரிசில்லங்க” முதன்முறையாக சிவா இவளிடம் சொன்ன வார்த்தைகள் ஞாபகம். எத்தனை வலிகளை, அவமானங்களை அவன் தனியே சந்தித்திருப்பான், அந்த சுவடுகள் தன் பிஞ்சு மகளிடம் காட்டாது, இப்போது நடந்துகொள்ள, அவன் எத்தனை மன வலிமையுடைவனாக இருக்கக்கூடும், கசப்பான விசயங்களை சகிக்க அவன் எத்தனை வேதனைகளை சந்தித்திருப்பான். பெண் உள்ளம் கரைந்தது. காரினை இயக்கிகொண்டிருந்தவள் இவளை நிமிடத்திற்கு கொருமுறை கவனித்துதான் கொண்டிருந்தாள். தோழியின் மனதில் ஓடும் எண்ணங்களை கலைக்க விரும்பாது அமைதியாக வந்தாள். காதல் ஒரு வற்றாத ஜீவ நதி, ஓடும் திசைகளையெல்லாம் வளம் பெற செய்யும் வலிமைகொண்ட ஆறு, வழித்தடைகளையெல்லாம் தகர்த்து பாயும் அருவி.. பொய்கை..இப்போது அது தர்ஷினியின் மனதில் காட்டாற்று வெள்ளமாக பாய்ந்து கொண்டிருந்தது. இத்தனை உண்மைகளை இவள் மாணிக்கத்திடம் சொன்னால் அதனை அவர் வெறும் கட்டுக்கதையாக நினைக்கக்கூடும், காலத்தை நம்புவதை தவிர வேறொன்றும் வழியில்லை.
கார் நின்றதும், மனம் அந்த தருணத்தை அளந்து இருக்கும் இடத்தை ஆராய்ந்து சூழலை அறிவுக்கு காட்டி, காட்சியை விளக்கியது. இடம் அவள் மனம் அமைதிபெற செய்யும் கல்யாண துர்கை ஆலயம். அவள் காவ்யாவைப்பார்க்க, அவளோ புன்னகையுடன், “போடி, இங்க வந்தா எல்லா பிரச்சனையும் தீரும்னு நீ தான சொல்லுவ, போய் கும்பிட்டுட்டு வா, அப்படியாவது உன் கல்யாணத்திற்கு ஏதாவது வழிகிடைக்காணு பார்ப்போம்!”
“வழி தடைமட்டும்மில்ல, வாழ்கை தடையைக் கூட நம்பிக்கைங்கிற ஆயுதம் உடைக்கும் காவீ, அதுக்கு நமக்கு தெய்வத்தோட துணை நிச்சயம் வேணும், நீ வரலயா?”
“ஹலோ காலங்காத்தால நீ பாட்டுக்கு வீட்டுக்கு போணும்னு இழுத்துட்டு வந்துட்ட, நான் ரிஷிக்கிட்ட ஒன்னும் சொல்லல, அவன்ட கொஞ்சம் பேசணும் நீ போயிட்டு வா”. விருவிருவென இறங்கி சென்றாள் தர்ஷினி. மறுபடியும் அவள் திரும்பும்போது மனது அமைதிப்பட்டிருந்தது. காவ்யா மௌனமாக காரை இயக்கினாள். அவர்கள் இறங்கும்போது, வீடு பூட்டியிருந்தது. கேள்வியாக யோசிந்திருந்தவளை நோக்கி ஓடி வந்தார், அவள் வீட்டின் அருகே வசித்தவர்.
“தர்ஷினி இராத்திரி அப்பாக்கு நல்ல நெஞ்சுவலியாம், வேலைக்குபோயிட்டு வரும்போதே மயங்கிட்டாராம், இப்போ பக்கத்தில இருக்கிற ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணிருக்கு” இதை முழுமையாய் கேட்கும்முன்னே தர்ஷினியின் நெஞ்சம் பதறியது, “ஐயோ” என்ற ஒரு வார்த்தையை தவிர அவளுக்கு ஏதும் தோணாது, எதிர் திசையில் நடக்க, மற்ற விவரங்களை அறிந்து கொண்ட காவ்யாதான், தர்ஷினியைப்பிடித்து காருக்குள் தள்ளி, மருத்துவமணைக்கு விரைந்தாள்.
காவ்யா ரிசப்ஷனில் விவரங்கள் சேகரித்து கொள்ள இருவரும் உள்ளே நுழைந்தனர். சலனமற்ற அந்த அறையில் சுவாசிப்பதற்கு எளிதாக ஆக்சிஜன் மாஸ்குடன் நினைவிழந்து கிடந்தவரைப்பார்த்ததும் தர்ஷினி வெடித்து அழுதாள். சப்தமில்லை சின்ன விம்மல் மட்டும் வெளியே கேட்க, அந்த காட்சியில் நிலைகுலைந்த காவ்யாவும் அழுதுதான்கொண்டிருந்தாள்.
“இப்போ பயப்பட ஒன்னுமில்லமா, அவர் ஆபத்தான நிலைய தாண்டிட்டாரு!” சப்தம் வந்த திசையை கேட்டு திரும்ப, கிட்டத்தட்ட மாணிக்கத்தின் தோற்றமும் வயதும் கொண்ட ஒருவரும், அவர் மனைவி என சொல்லும் வயதொத்த ஒரு பெண்மணியும் நின்றிருந்தனர். இருவர் முகத்திலும் கருணையிருந்தது.
“உட்காருங்கம்மா” அந்த பெண்மணி காட்டிய திசையில் இருந்த இருக்கையில் காவ்யா அமர்ந்தாள். தர்ஷினி தன் அப்பாவின் அருகே அமர்ந்து அவர் தலையை மென்மையாக கோதிவிட்டாள். தூங்கிறதுக்கு இஞ்செக்ஷன் போட்டிருக்காங்கம்மா.. கொஞ்ச நேரத்தில விழிச்சுருவாரு, இரண்டு பேரும் அழாதீங்க!” கண்டிப்புடன் சொன்னார் அந்த பெரியவர்.
“நீங்க” – தர்ஷினி
“நான் வரதராஜன், இவ என் மனைவி யோகி, நேத்து நாங்க கார்ல வர்றப்ப, இவரு உங்க வீட்டுக்கு கொஞ்சதூரம் முன்னாடி நெஞ்சப்பிடிச்சுட்டு சாய்ந்து நின்னாரு, இறங்கி பார்க்கிறப்ப சுய நினைவில்ல.. இங்க கொண்டுவந்தோம், மைல்டு அட்டாக் கூடவே சுவாச பிரச்சனை.. பட் இப்போ நார்மலா ஆயிட்டாரு.. நீ பயப்பட வேண்டாம்!”
“உன் பக்கத்து வீட்டுல விவரம் சொல்லி வச்சோம், ஒரு வேளை நீ வந்தா இங்க வரணும்னு” – யோகி
தர்ஷினி எழுந்து இருவர் அருகே வந்தாள், தன் கைக்கூப்பி, கண்களில் கண்ணீர் வழிய, “ரொம்ப நன்றீங்க.. என்னால அப்பாவுக்கு நெஞ்சுவலியதான் கொடுக்க முடிஞ்சுது, நீங்க அவரோட உயிர காப்பாத்திஇருக்கீங்க, உங்களுக்கு நன்றி சொல்லகூட எனக்கு அருகதஇல்லை” அவள் விம்மினாள். கூப்பியிருந்த அவள் கையின் மீது தன் கையை வைத்தார் யோகி, தர்ஷினி இராத்திரி முழுக்க உன் அப்பா உன் பெயரத்தான் சொல்லீட்டு இருந்தாரு.. பெத்தவங்களுக்கு பிள்ளைங்க மேல என்னிக்கும் விரோதம் இருக்காது.. பாரு நீ டூர் போயிருக்க உன்ன கூப்பிட்டு பயமுறுத்த வேண்டாம்னு உன் அப்பா காலைல சொன்னாரு, ஆனா அடுத்த அரைமணி நேரத்தில நீ இங்க இருக்கிற, உன் அப்பா மேல உள்ள அன்புதான் உன்ன இங்க கூட்டிட்டு வந்திருக்கு!”