தொடர்கதை - விழிகளிலே காதல் விழா - 33 - தேவி
வடிவு ஆச்சியின் பேச்சை கேட்ட மலர் குழப்பத்தில் இருந்தாலும் , அவள் கை பாட்டுக்கு பெட்டி அடுக்கும் வேலை பார்த்துக் கொண்டு இருந்தது. அப்போது செழியனிடமிருந்து போன் வர, வேலையை நிறுத்தி விட்டு போனில் பேசினாள்.
“ஹலோ..செழியன்.. சொல்லுங்க..”
“ஹாய் மலர். டூர் போக வீட்டிலே பெர்மிசன் வாங்கிட்டியா... இல்லை நாங்க யாரும் வரணுமா?”
“வேண்டாம்.. வீட்டிலே சரி சொல்லிடாங்க.. ஆனா..”
“ஆனா.. என்னமா.. ?”
“நான் கண்டிப்பா வந்துதான் ஆகணுமா?”
“என்ன பிரச்சினைடா.. .. ?”
அவனிடம் ஆச்சி சொன்னதை பற்றி சொல்லிடலாமா என்று யோசித்தவள், பின் அவர் சொன்னதை என்னவென்று சொல்வது.. எந்த விபரமும் தெரியாமல் பேசுவது அவரும் சேர்ந்து குழம்பத்தான் வழி வகுக்கும் என்று எண்ணியவளாய்.
“பிரச்சினை எல்லாம் இல்லைப்பா.. ஆச்சி என்னை விட்டு இருக்க மாட்டங்க.. அவங்க முகம் வாடி போயிடுச்சு.. அதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு”
“ஹேய்.. இதுக்கு எல்லாம் அப்செட் ஆகாதம்மா... பாட்டி கவலையும், உன் சங்கடமும் புரியுது.. நம்ம கூட ஒருத்தர் வரலாம்நு சொல்லிருக்காங்களே. பாட்டிய கூட்டிகிட்டு வர வேண்டியதுதானே..”
“இல்லை.. நான் கூப்பிட்டேன் .. அவங்களுக்கு இந்த பிரயாணம் எல்லாம் ஒத்துக்காது.. குளிரிலும் கஷ்டப்படுவாங்க.. அவங்க வரலைன்னு சொல்லிடாங்க..”
“சரி.. உங்க அப்பா, அம்மா யாரவது கூட வந்தா .. உங்க பாட்டிக்கு கொஞ்சம் தைரியம் வரும்தானே.. அவங்கள கூப்பிட்டு இருக்கலாமே.. “
“அப்பா வர முடியாது.. வேலை இருக்கு.. அவங்க லீவ் போட்டு பாட்டிய பார்த்துக்கிற மாதிரி இருந்தா அம்மாவ வர சொல்லலாம்.. அப்படி இல்லை என்னும்போது அம்மாவும் வரமுடியாது.. அதான் பாட்டி ரொம்ப கவலையா இருக்காங்க..”
“அப்புறம் எப்படி சரி சொன்னாங்க..”
“வேற எப்படி, கொஞ்சி கெஞ்சி தான்.. “ என்று ஒரு சிரிப்போடு சொல்லவும், அந்த மலர்ந்த குரலை கேட்டவனுக்கும் அவளின் மகிழ்ச்சி தொற்றியது..
“சரி. சரி.. அப்போ நான் நம்ம எச்.ஓ.டி. கிட்டே சொல்லிடறேன். நீ மாலை ஆறிலிருந்து ஆறரை மணிக்குள் காலேஜ்க்கு வந்துடு.. ஏழு மணிக்கு பஸ் புறப்படற மாதிரி சொல்லிருக்காங்க..”
“சரி .. வேறு ஒன்றும் இல்லியே.. வச்சிடவா?” என்று கேட்டு வைக்க போனாள்.
“ஹேய். .ஒரு நிமிஷம்.. நியாபகமா ஸ்வெட்டர் எடுத்து வச்சிக்கோ.. & வேற மெடிக்கல் ப்ரோப்லேம் இருந்தா அதுக்கு மெடிசின் எல்லாம் வச்சிக்கோ.. ஓகேவா.. “
“ஓகே”
“அப்புறம்.. நைட் டின்னெர் மட்டும் நாமளே எடுத்துட்டு போற மாதிரி கரஸ் கிட்டே நம்ம லெக்சரர்ஸ் எல்லாம் சொல்லிருக்காங்க.. சோ மறந்துடாத..”
“ஏன். சாப்பாடு எடுத்துட்டு வரலை என்றால் ப்ரொபசர் சார் கவனிச்சுக்க மாட்டீங்களோ?”
“ஹே.. நான் எங்க மாட்டேன்னு சொன்னேன். அப்புறம் பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை பார்த்துக்கோ.. என்ன ரெடியா “ என்று கேலியாக வினவ
அவன் கேலியில் வெட்கம் அடைந்தவளாக “ஒன்னும் வேண்டாம்.. நான் எடுத்துட்டு வந்துடுறேன்.” என்றபடி போனை வைத்தாள்.
அவனிடம் பேசி வைக்கவும், மலரின் அம்மா வந்து
“மலரு.. கம்பளி எல்லாம் எடுத்து வச்சியா.. ? கூடவே எதாவது தலைவலி மாத்திரை, வலி மாத்திரை எல்லாம் எடுத்துக்கோ.. சரியா ?”
“அது எல்லாம் ஒன்னும் பிரச்சினை இல்லைமா.. எதுவும் வேணும்னா.. கூட வேலை பார்க்கிற ப்ரொபசர் யாரவது வண்டிய நிறுத்தி எங்கிட்டாவது போய் வாங்கிட்டு வந்துடுவாங்க..”
“அது ஏன் மூணாம் மனுஷங்களுக்கு கஷ்டங் கொடுத்துகிட்டு.. இது எல்லாம் எப்போவும் கையில இருக்கிறது நல்லது செல்லம்.. நீதானே சித்த முன்னே ஆச்சி கிட்டே சொன்ன.. காலேஜ் புள்ளங்கள பொறுப்பா கூட்டி போய் வர வேண்டி இருக்கும்.. அப்போ நீ மத்தவங்களுக்கு எடுத்து சொல்லணும்ல. நாம சரியா இருந்தாதானே.. மத்தவங்கள வழி நடத்த முடியும்.. “
“வள்ளி.. என்னை விட பிரமாதாமா லெக்சர் எடுக்கியே நீ.. நானே எல்லாம் எடுத்து வச்சுகிட்டேன்.. நீங்க கவலைபடாம இருக்கத்தான் சொன்னேன்..போதுமா..”
“சரிட்டி.. நீ எப்போ கிளம்பனும்.. ?”
“வீட்டுலேர்ந்து அஞ்சரை ஆறு மணிக்கா கிளம்பனும்.. காலேஜ் போயிட்டேனா அங்கிருந்து ஏழு மணிக்கு பஸ் கிளம்புது..”
“அப்போ ராத்திரிக்கு என்ன பண்ணபோறே.. ? இங்கனயே சாப்பிட்டு கிளம்புறதா இருந்தா ரொம்ப சீக்கிரமா இருக்குமே.. பொறவு நடு வழியில் பசிக்கும்?”
“இல்லைமா.. ராத்திரி ஒரு நேரம் மட்டும் அவரவர் எடுத்துட்டு போயிடலாம்ன்னு பேசிருக்காங்க.. “