தொடர்கதை - விழிகளிலே காதல் விழா - 34 - தேவி
திட்டமிட்டபடி மதிய உணவு முடிந்த பின் ஒரு டிரைவரை அழைத்துக் கொண்டு எல்லோரும் ஊட்டி மெயினில் உள்ள இடங்களை பார்க்க சென்றனர். ஏற்கனவே அங்கே உள்ள இடங்கள் பற்றிய மேப் தெளிவாக செழியனிடம் இருந்ததால் அதிகம் சிரமபடாமல் எல்லா இடங்களும் சுற்றி பார்க்க சென்றனர்.
செழியன் முதலில் தொட்டபெட்டா பார்க்க செல்லலாம் என்று கூற, சயின்ஸ் டிபார்ட்மென்ட் சேர்ந்த சிலர்
“முதலில் பொடனிகல் கார்டன் போகலாம் சார்.. இது அன் சீசன் என்பதால் சீக்கிரமே இருட்ட தொடங்கி விடும். அதனால் கார்டன் நல்ல வெளிச்சத்தில் பார்ப்பது நன்றாக இருக்கும்” என கூற
“சரி .. போகலாம்..” என்று நேராக அங்கே சென்றனர்.
உள்ளே டிக்கெட் எடுக்கும் வரை தான் ஒரே குழுவாக சென்றனர். அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் அனைவரும் பேருந்து நிற்கும் இடத்திற்கு வந்து சேர்ந்து விட வேண்டும் என்ற ஒப்புதலோடு ஒவ்வொரு பக்கம் பிரிந்து விட்டனர்.
வளர்மதியின் பையனின் வயதை ஒத்த சில பிள்ளைகள் இருக்கவே , அவர்கள் ஒரு குழுவாக பிரிய, அவர்களை பின்பற்றி அவர்கள் பெற்றோர்கள் என்று ஒரு குழு நகர்ந்தது.
இவர்களின் எச்.ஓ,டி அவர் செட்டில் சேர்ந்த சிலர் ஏற்கனவே ஊட்டி வந்திருப்பதால் , அதை நினைவு கூறும் விதமாக ஒரு குழு பிரிந்து விட்டது. அதோடு பொதுவான விஷயங்களில் ஒத்து வந்தாலும், உள்ளுக்குள் அவரவர் டிபார்ட்மென்ட் பற்று என்ற அளவில் லெக்சரர்கள் பிரிந்து சென்று விட்டனர்.
இதில் செந்தில், அவன் மனைவி, செழியன், மலர்விழி மட்டுமே ஒரு குரூப் தானாக சேர்ந்து விட்டது.
எனவே இவர்கள் நால்வரும் பேசிக் கொண்டும், ஒருவரை ஒருவர் கேலி செய்து கொண்டும் சுற்றி பார்த்துக் கொண்டு இருந்தனர்.
இவர்கள் அறியாமலே எப்படியோ செந்திலும் , அவன் மனைவியும் பேசிக் கொண்டே சற்று முன்னால் சென்று இருக்க, மலரும் செழியனும் மட்டும் தனியாக வந்து கொண்டு இருந்தனர்.
அங்கே உள்ள பூ, மரம், மண், இயற்கை என்று பொதுவாக பேசிக் கொண்டு இருந்தவர்கள் , தீடிர் என்று செழியன்
“இப்போ வீசிங் பரவாயில்லியா? “ என்று கேட்க, மலர் சுற்றுமுற்றும் பார்த்தாள். அவளின் பார்வையை கண்டு, செழியன்
“ என்ன பார்க்கிற ? அவர்கள் இரண்டு பேரும் முன்னால் சென்று விட்டார்கள் .” என,
செந்தில் மனைவி செல்வியை அழைக்க முயன்றாள் மலர். அவளின் கையை பிடித்து தடுத்த செழியன்
“ம்ப்ச்.. கொஞ்ச நேரம் அவர்களை கண்டு கொள்ளாதே. உனக்காகவும், எனக்காகவும், தான் இருவரும் நம்மோடு சுற்றிக் கொண்டு இருக்கிறர்கள்.. கொஞ்சம் அவர்களுக்கு தனிமை கொடுக்கலாம். இப்போதும் அவர்கள் அறியாமலேதான் முன்னால் செல்கிறார்கள் . பத்து நிமிஷத்தில் அவர்களே உணர்ந்து நமக்காக வெயிட் செய்வார்கள். அதுவரை தொந்தரவு செய்ய வேண்டாம்..” என,
அவனின் எண்ணம் புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக தலை ஆட்டியவள், தங்கள் நிலை குறித்து எண்ணுகையில் சற்று முகம் சிவந்தாள். அதை என்னவென்று செழியன் கேட்க வரும்முன், தன் முகத்தை நேராக்கியவள்,
“என்ன கேட்டீர்கள் ?” என வினவ, அவளின் தோற்றத்தை மறந்து,
“வீசிங் எப்படி இருக்கு? “
“ஹ்ம்ம். ஓகே.. “
“உங்க வீட்டிலே இதனால் தான் அனுப்ப யோசிச்சாங்களா..? “
“அப்படி எல்லாம் இல்லை.. ஆனால் இதுவும் ஒரு காரணமா இருக்கலாம்.. பாட்டிக்கு இன்னும் இப்படி டூர் அனுப்புறது எல்லாம் பயம். அதான் மறுத்தாங்க.. நான் கேட்டதும் அனுப்பிட்டாங்க.“ என்று பேசிக் கொண்டே அவர்களும் நடக்க ஆரம்பித்தார்கள்.
“அப்படின்னா .. இதே மாதிரி நம்ம கல்யாண விஷயமும் நீ கேட்டா நடந்துடுமா மலர்?”
அவன் விரும்புவதாக சொன்ன போது அவனின் ஆராயிச்சி முடிந்த பின் வீட்டில் பேசலாம் என்று சொன்னதை தவிர, இன்று வரை நேரடியாக இதை பற்றி இருவரும் பேசியதில்லை. செழியன் இப்படி கேட்கவும், திகைத்து திரும்பி பார்த்தாள் மலர். அப்போது தான் தன் ஆச்சி முதல் நாள் சொன்னதும் நினைவு வந்தது.
“ஏன் தீடிர்னு கேட்கறீங்க ?” என
“சொல்லேன்..”
“தெரியல..”
“ஒஹ்” என்றான் சிந்தனையோடு..
“இப்போ ஏன் இந்த கேள்வி?” என்று சற்று கலக்கமான குரலில் மலர் கேட்கவும், அவளின் குழம்பிய முகத்தை கண்டவன்,
“ஹேய்.. என் டார்லிங் இன்னிக்கு ஜீன்ஸ் எல்லாம் போட்டு கலக்குறீங்க.. இப்போ கொஞ்ச நாளா உன்னோடு அதிகம் டைம் ஸ்பென்ட் பண்றதாலோ என்னவோ, உன்னை விட்டு போக மனசே வரமாட்டேன்குது. உன் சம்மதம் கிடச்சதுமே, வீட்டில் பேசியிருக்கலாமோன்னு அப்போ அப்போ தோணுது.. அதான் கேட்டேன்.. வேற ஒன்னும் இல்லை.. சரியா?”