அவனும் குளித்து விட்டு, வெளியே வந்தவன் சுப்பிரமணியம் அருகே அமர்ந்து டிவி பார்க்க ஆரம்பித்தான்.
இது தான் சரியான நேரம் என்று நினைத்து, "இது தான் இனி உன்னோட ரூம் மா. நீ பொய் குளிச்சிட்டு வா", என்று சொன்னாள் மங்களம்.
தயக்கத்துடன் எழுந்தாள் கலைமதி.
அப்போது தான் அவளுடைய பேக் எல்லாம் காரில் இருப்பது நினைவு வந்தது. என்ன செய்ய என்று தெரியாமல் முழித்து கொண்டிருந்தாள்.
அவள் யோசிப்பதை உணர்ந்த மங்களம் "தம்பி, மதி பொருள் எல்லாம் காரில் தான இருக்கு. கொஞ்சம் எடுத்து கொடுப்பா", என்று சொல்லி விட்டு பயந்து போய் கிச்சனுக்குள் சென்று விட்டாள்.
எழுந்து போனான் சூர்யா. "அவனே எப்படி ரெண்டையும் தூக்கிட்டு வருவான்", என்று நினைத்து அவன் பின்னே சென்றாள் மதி.
கார் டிக்கியை திறந்து கொண்டிருந்தவனின் அருகில் போய் நின்றவள், "உங்க பர்ஸை நீங்க வாங்கவே இல்லை", என்று திக்கி திணறி எங்கோ பார்த்து கொண்டு சொன்னாள்.
அவள் பேசியதில் அவளை திரும்பி பார்த்தான்.
பயந்து போய் பேசியவளை பார்த்து தனக்குள் சிரித்து கொண்டவன், "இப்ப தான் தரணும்னு தோணுச்சா? நான் கூட நீயே அதை வச்சிக்க போறேன்னு நினைச்சேன்", என்று சிரித்து கொண்டே அதை வாங்கி கொண்டான்.
அவன் பேசியதில் திகைத்தவள், அவன் புன்னகையை பார்த்து திகைப்பில் எல்லைக்கே சென்றாள்.
பேச மறந்து அவள் நிற்பதை பார்த்தவன், மறுபடியும் சிரித்து விட்டு, உள்ளே இருந்து பேக் எல்லாம் எடுத்து வெளியே வைத்தவன் அதை பூட்டினான்.
அவள் ஒரு பையை எடுக்க போகும் போது, "அதை வை", என்று சொன்னவன் இரண்டையும் எடுத்து கொண்டு வீட்டுக்குள் நடந்தான்.
அவன் பின்னே நடந்தாள் கலைமதி.
நேராக அவனுடைய அறைக்கே சென்றான் சூர்யா.
அதை பார்த்து கொண்டிருந்த மங்கலத்துக்கு சந்தோசமாக இருந்தது. "அப்பாடி அவளை பொண்டாட்டியா அவன் மனசு ஏத்துக்கிட்டு", என்று நினைத்து கொண்டு உள்ளே போகாமல் தயக்கத்துடன் நின்றிருந்த மதி அருகில் போய் "உள்ளே போ மா", என்று அனுப்பி வைத்தாள்.
கால்கள் பின்ன உள்ளே நடந்தாள் மதி. நெஞ்சம் எல்லாம் பட படவென்று அடித்தது.
மெதுவாக அடி எடுத்து வைத்து உள்ளே சென்றவள் அவனை பார்த்தாள்.
அவன் அவனுடைய பீரோவில் அவனுக்கு உடை எல்லாம் வைக்க இடம் ஒதுக்கி கொண்டிருந்தான்.
அவள் வந்ததை உணர்ந்து, "இங்க உன் டிரெஸ் வச்சிக்கோ. அப்புறம் டவல் எல்லாம் அங்க இருக்கு", என்று கை காட்டியவன் வெளியே சென்று விட்டான்.
அவன் போன பின்பு தான் நிம்மதியாக மூச்சு விட்டாள் கலைமதி.
குளிக்க டிரெஸ் எடுக்கும் போது "இங்க எப்படி நைட்டி போடுறது?", என்று நினைத்து ஒரு சுடிதாரையே எடுத்து கொண்டு குளிக்க சென்றாள்.
வெளிய வந்த மதி கண்ணில் கிச்சனில் இருந்த மங்களம் கண்ணில் பட்டாள்.
நேராக அங்கு சென்றவள், "நான் எதாவது செய்யணுமா அத்தை?", என்று கேட்டாள்.
"தோசை தான் ஊத்துறேன் மதி. நீ சாப்பிடுவ தான?", என்று கேட்டாள் மங்களம்.
"நான் எதுனாலும் சாப்பிட்டுக்குவேன் அத்தை"
"அப்ப சரி. தக்காளி சட்னி மட்டும் வச்சா போதும். மதியம் வச்ச சாம்பார் இருக்கு. நீ வெங்காயம் மட்டும் விரிச்சி கொடு மா. அதோ அங்க இருக்கு பாரு"
"ஹ்ம்ம் சரி அத்தை", என்று சொல்லி ஒரு தட்டில் வெங்காயத்தை அள்ளியவள் "இவ்வளவு போதுமா அத்தை?", என்று கேட்டாள்.
"இன்னும் கொஞ்சம் எடுத்துக்கோ மா. உன் புருசனுக்கு நிறைய சட்னி இருந்தா தான் உள்ளே போகும்", என்று இயல்பாய் சொன்னாள்.
அவள் சொன்ன புருஷன் என்ற வார்த்தையில் என்னவென்று சொல்ல முடியாத ஒரு உணர்வை அடைந்தாள் கலைமதி.
இரவு சாப்பாட்டை முடித்து விட்டு தன்னுடைய அறைக்கு சூர்யா சென்ற பின்னர், "நான் மேல உள்ள ரூம்ல படுத்துக்குறேன்", என்று சொன்னார் சண்முகம்.
"அப்ப நானும் அங்க வரேன் சண்முகம். மங்களம் போர்வை மட்டும் எடுத்து கொடு மா", என்று சொன்னார் சுப்பிரமணியம்.
"இதோ எடுத்துட்டு வரேன்", என்று சொல்லி எல்லாம் எடுத்து வந்து கொடுத்தாள் மங்களம்.
இருவரும் மாடி ரூம்க்கு சென்று விட்டார்கள்.
"நாம எங்க படுக்கன்னு தெரியலையே", என்று நினைத்து கொண்டு அங்கேயே அமர்ந்திருந்தாள் கலைமதி.