(Reading time: 20 - 39 minutes)

தொடர்கதை - தித்திக்கும் புது காதலே!!! - 03 - கார்த்திகா கார்த்திகேயன்

Thithikkum puthu kathale

"துக்கு இப்படி ஏங்கி ஏங்கி அழுதுட்டு இருக்கா?", என்று நினைத்து பதட்டமாக அவளை பார்த்தான் சூர்யா.

அவன் அம்மா "சூர்யா எதாவது சொன்னானா மா?", என்று கேப்பது அவன் காதில் விழுந்தது.

"ஐயோ கல்யாணம் முடிஞ்சு, முதல் தடவை நைட் என்கூட தங்கிருக்கா. அடுத்த நாள் எங்க அம்மாவுக்கு என்ன என்னவோ எதிர்பார்ப்பு இருக்கும். அந்த மனநிலைல இருக்குறவங்க கிட்ட போய், இவ இப்படி அழுது வச்சான்னா, என்னை பத்தி எங்க அம்மா என்ன நினைக்கும். நைட் அவ மேல பாஞ்சிட்டேனு நினைக்க மாட்டாங்க. ரேப் பண்ணிட்ட மாதிரி அழுது ஊரை கூட்டுறாளே. அப்படி எதுவும் செய்யலையே"

"ஒரு வேளை எனக்கே தெரியாம, எதுவும் நான் அவளை செஞ்சுட்டேனா?", என்று நினைத்து தன்னையே ஒரு முறை பார்த்து கொண்டான்.

தலையில் அடித்து கொண்டவன், "அப்படி எல்லாம் நடந்துருக்காது. இவ வேற எதுக்கோ அழுறா", என்று தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டு அவர்கள் பேச்சை கவனித்தான்.

குளித்து முடித்து வந்த சண்முகம், "என்ன சூர்யா தம்பி ஒரே இடத்துல அசையாம அதிர்ச்சியா பாத்துட்டு நிக்குது?", என்று நினைத்து கொண்டே அவனுக்கு பின்னே வந்து நின்றார். அதை கூட கவனிக்காமல், அவன் மங்களம் தோளில் சாய்ந்திருந்த மதியையே பார்த்து கொண்டிருந்தான்.

"மங்களம் கையால காபி குடிக்கணும். அப்ப தான், அந்த நாளே விடிஞ்ச மாதிரி இருக்கும்", என்று நினைத்து கொண்டே அங்கு வந்த சுப்பிரமணியம் "என்ன இது மாமனும், மருமகனும் அசைய மறந்து வேடிக்கை பாக்குறாங்க. மங்களம் எதாவது வித்தை காட்டுறாளா? நம்மளும் பாப்போம்", என்று நினைத்து கொண்டு சண்முகம் பின்னால் போய் நின்றார்.

எல்லாருமே அவள் அழுவதை பார்த்து திகைத்தார்கள். "எதுக்கு மதி அழுறா?", என்று  வாய் வரை வந்த கேள்வியை  மூவரும் உள்ளுக்குள்ளே அடக்கி விட்டார்கள். அதுக்கு காரணம் அங்கே மங்களம் அவள் தலையை வருடி கொடுத்து, அதே கேள்வியை பாசமாக கேட்டு கொண்டிருந்தாள்.

அது தான் அவள் கேக்குறாளே என்று நினைத்து கொண்டு வேடிக்கை பார்த்தார்கள்.

"சொல்லு மதி மா. இப்படி அழுதுட்டே இருந்தா நான் என்னனு நினைக்கிறது? சொன்னா தான டா தெரியும்? அம்மா நினைவு வந்துருச்சா மா?", என்று கேட்டு கொண்டிருந்தாள் மங்களம்.

"நான் அம்மாவை பார்த்தது கூட எனக்கு நினைவு இல்லையே அத்தை. அப்புறம் எப்படி அவங்க நினைவு வரும்?", என்று அழுது கொண்டே சொன்னாள் மதி.

"அப்ப இந்த சூர்யா நாய் தான் ஏதோ செஞ்சிருக்கான். அவனுக்கு இருக்கு. இதோ அவன் கிட்ட போய் கேக்க போறேன்", என்று நகர பார்த்த மங்களத்தை தடுத்த கலைமதி "அவங்களை எதுவும் சொல்லாதீங்க அத்தை. அத்தான் என்னை எதுவுமே சொல்லலை", என்றாள்.

"அப்புறம் எதுக்கு நீ ஏங்கி ஏங்கி அழுதுட்டு இருக்க?"

"நைட் தூங்கிட்டு இருந்தேன் அத்தை. நான் ஏ. சி ல தூங்குனது இல்லை. குளிரா இருந்தது. என்னோட போர்வை துவைக்காம இருந்துச்சா? அழுக்கை எப்படி எடுத்து மூடன்னு நினைச்சு படுத்திருந்தேன்"

"ஏன் மா? அவன் கிட்ட கேட்டிருக்கலாம்ல?"

"எனக்கு கூச்சமா இருந்துச்சு அத்தை"

"சரி தான். சரி இன்னைக்கு புதுசா ரெண்டு எடுத்து தரேன். ஆனா இதுக்கு எதுக்கு அழுத? அதுவும் நைட் குளிர் அடிச்சதுக்கு, இப்ப எதுக்கு ஏங்கி ஏங்கி அழுதுட்டு இருக்க?"

"அது வந்து அத்தை, காலைல கண்ணு முழிச்சு பாத்தேனா, என் மேலே போர்வை மூடியிருந்தது. அத்தான் தான மூடிருக்காங்க?"

"ஆமா, அவனா தான் இருக்கும். வேற நாங்களா மூடிருக்க ரூம் குள்ள வர முடியும்? என் பையன் அதிசயமா பொறுப்பான வேலையை தான செஞ்சிருக்கான்? அதுக்கு ஏன் மா அழுத?"

"என் மேல இது வரைக்கும், யாருமே அக்கறையா இருந்தது இல்லை அத்தை. என்னை நானே தான் பாத்துக்குவேன். எனக்கு என்ன ஆனாலும், யார் கிட்டயும் சொல்ல மாட்டேன். வயிறு வலிக்குனு கூட நான் சொன்னது இல்லை. அப்பா கூட இப்படி குளிருதுனு எனக்கு முடி விட்டது இல்லை அத்தை. முதல் தடவையா அத்தான் அப்படி செஞ்சிருக்காங்கன்னு நினைச்சு, எனக்கு சந்தோஷத்துல அழுகையா வந்துருச்சு. அத்தான் ரொம்ப நல்லவங்க அப்படி தான அத்தை? நேத்து நான் பையை தூக்க கஷ்ட படுவேன்னு, அவங்களே தூக்கிட்டு வந்தாங்க. ஹாஸ்டல், காலேஜ்ல சேரும் போது கூட எல்லா பிள்ளைகளுக்கும் அம்மா, அப்பா வந்தாங்க. எனக்கு அப்பவும் யாருமே வரலை தெரியுமா? சந்தோஷமான குடும்ப சூழ்நிலையை நான் உணர்ந்ததே இல்லை அத்தை. நேத்து தான் அப்படி உணர்ந்தேன். இப்ப இந்த வீட்ல, உங்களை எல்லாம் பாக்குறதுல எனக்கு தயக்கம் இருக்கு தான். ஆனா பிடிச்சிருக்கு.   நீங்க எல்லாருமே ரொம்ப நல்லவங்கன்னு தோணுது அத்தை. மாமா நல்ல பாசமா பேசினாங்க. இப்ப நீங்க உங்க பொண்ணு மாதிரி எனக்கு ஆறுதல் சொல்றீங்க. நைட் வேற பாசமா பேசினீங்களா? எல்லாத்தையும் நினைச்சு அழுகை வந்துடுச்சு அத்தை. அதான் அழுதுட்டேன் சாரி"

"இதுக்கா அழுத? என்ன பொண்ணு மா நீ? நான் கூட என்னவோ ஏதோன்னு நினைச்சு பயந்துட்டேன். பாசத்துக்காக ஏங்கி தவிச்சிருக்க மதி மா நீ. அதனால தான் அவன் சின்னதா செஞ்ச விஷயம் உனக்கு பெருசா தெரிஞ்சிருக்கு. சூர்யாக்கு ஏத்த பொண்ணு தான் நீ.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.