தொடர்கதை - என் காதலின் காதலி - 11 - ஸ்ரீ
“காதலா காதலா காதலால் தவிக்கிறேன்
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்
காதலி காதலி காதலில் தவிக்கிறேன்
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்
நாள்தோறும் வீசும் பூங்காற்றை கேளு
என் வேதனை சொல்லும் ஓஹோ
நீங்காமல் எந்தன் நெஞ்சோடு நின்று
உன் ஞாபகம் கொல்லும் ஓ
தன்னந்தனியாக சின்னஞ்சிறு கிளி
தத்தி தவிக்கையில் கண்ணில் மழைத்துளி
இந்த ஈரம் என்று மாறுமோ..”
இரண்டு மாதங்கள் இயல்பாய் சென்ற நிலையில் அடுத்த அடுத்த ப்ரச்சனை ஆரம்பமாக நல்ல நாள் பார்த்து காத்திருந்தது..அப்படியாய் ஒரு நாளில் ரகுவின் வீட்டிற்கு அவன் தந்தையின் நெருங்கிய நண்பர் வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் வந்திருந்தார்..ஞாயிற்றுக் கிழமை ஆதலால் ரகுவும் வீட்டிலிருக்க அனைவருமாய் அமர்ந்து பொதுப்படையாய் பேசிக் கொண்டிருந்தனர்..வந்தவர் சோஷியலாய் பழகுபவர் என்பதால் சட்டென ரகுவின் தந்தையிடம் தன் மகளை ரகுவிற்கு பேசி முடிக்கலாமா என கேட்க,
ரகு உட்பட மூவருமே என்ன சொல்வதென தெரியால் தவிக்க,அவரோ ஒண்ணும் ப்ரச்சனையில்ல உங்களுக்குள்ள பேசிட்டு சொல்லுங்க..ஜஸ்ட் தோணிணத கேட்டேன்..என அப்போதைக்கு பேச்சை முடித்துவிட்டார்.
அவர் கிளம்பிய நொடியிலிருந்து கண்ணன் மகனைத் துளைத்தெடுக்க ஆரம்பித்தார்..
“இங்க பாரு ரகு இப்படி வர்றவங்க போறவங்க கிட்ட எல்லாம் என்னால மழுப்பி பேசிட்டு இருக்க முடியாது..அந்த பொண்ணு வீட்ல பேசியாச்சா இல்லையா??எதாவது ஒரு முடிவு சொன்னாதான நாமளும் யோசிக்க முடியும்..இன்னும் ஒரு வாரம்தான் உனக்கு டைம்..நெக்ஸ்ட் வீக்கெண்ட் நாம அவங்க வீட்டுக்கு போணும் இல்லையா நா சொல்றத கேட்டு நடந்துக்கோ வேற ஒண்ணும் பண்ண முடியாது ரகு..”
ரகு ஹரிணியிடம் விஷயத்தை கூற அவளுள் பயம் அப்பிக் கொண்டது..மறுபடியும் முதல்ல இருந்தா என மலைப்பாய் இருந்தது..விஷயத்தை ஹர்ஷாவிடம் கூற அப்படி இப்படியாய் கிருஷ்ணணின் காதுக்குச் சென்றது..எதிர்பார்த்ததைப் போன்று எந்த ஆர்பாட்டமும் இல்லாமல் போனது அனைவருக்குமே ஆச்சரியம் தான்..
“என்னவோ பண்ணுங்க எல்லாம் என் விருப்பப்படியா நடக்குது..பொண்ணை பெத்த கடமைக்கு வந்து சபைல உக்காருவேன்..”
என கத்தறித்தாற் போல பேசி நகர்ந்தவரை பார்த்தவர்களுக்கு கவலையெழுந்தாலும் அவர்கள் வரும்போது எந்த ப்ரச்சனையும் வராது என்பதை எண்ணி சற்று நிம்மதியடைந்தனர்..
ஞாயிற்று கிழமையும் வந்தது..காலை முதலே ஹரிணிக்கு படபடப்பாய் இருந்தது..என்ன நடக்கும் யார் என்ன பேசுவார்கள் ஒன்றும் புரியவில்லை..மாலை நான்கரை மணிக்கு அஞ்சலியும் மதுராவுமாய் அவளை தயார் செய்ய இன்னுமாய் கைகள் நடுங்க ஆரம்பித்திருந்தது..தாங்கள் கிளம்பி விட்டதாய் ரகு அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருக்க வேகமாய் ஒருமுறை தன்னை சரிப்பார்த்துக் கொண்டாள்..
வாசலில் கார் சத்தம் கேட்க வேகமாய் தன்னறை ஜன்னல் வழியே எட்டிப்பார்க்க லஷ்மி இறங்குவது தெரிந்தது..அஞ்சலி ஆதரவாய் அவள் தோள்பற்ற அவள் கையை பிடித்துக் கொண்டாள்..திருமண தேதி குறிக்கும் அளவு நல்லது நடக்கவில்லையெனினும் தன் தந்தையோ அவனோ எதாவது வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருந்தாலே பெரிய விஷயம் என்று தோன்றியது அவளுக்கு..
கீழே ஹர்ஷா வந்தவர்களை வாசலுக்குச் சென்று வரவேற்க மதுரா ஹாலில் அனைவருக்குமாய் நாற்காலியை எடுத்து போட்டார்..லஷ்மி அவரிடம் சிநேக புன்னகையை உதிர்க்க,கிருஷ்ணணும் கண்ணணும் கைக் குலுக்கியவாறு அமர்ந்தனர்..
பொதுவான உரையாடல்கள் சில நிமிடங்கள் தொடர,ரகுவின் தந்தை தனக்கு வந்த அழைப்பை ஏற்று பேச ஆரம்பித்தார்..கிடைத்த சிறு இடைவெளியில் கிருஷ்ணன் தன்னெதிரே ஹர்ஷாவோடு பேசிக் கொண்டிருப்பவனை கண்களால் அளந்தார்..
டார்க் ப்ரௌன் புல் ஹேண்ட் சட்டையும் ஐவெரி நிற பேண்டும் அவனை இன்னுமாய் அம்சமாய் காட்டியது..ராஜகளை என்பார்களே அப்படியான ஒரு முகம் பணக்கார தோரணை என கம்பீரமாய் இருந்தவனை பார்த்தவருக்கு மகளுக்காய் மனம் திருப்தி கொண்டாலும் ஏனோ தன் மகளை தன்னக்கெதிராய் பேச வைத்தவன் என்ற எண்ணமே மேலோங்கியது.. எதையும் முகத்தில் காட்டிக் கொள்ளாமல் அவர் அமைதியாய் இருக்க அதற்குள் லஷ்மி ஹரிணியை அழைத்து வரச் சொன்னார்..
கொலுசொலியில் அனைவரும் பேச்சை நிறுத்தி திரும்ப லஷ்மிக்கும் கண்ணணுக்கும் நிறைவாய் இருந்தது..ரகுவிற்கோ கேட்கவே வேண்டாம் விட்டால் அவளை அப்படியே நாடு கடத்திவிட தயார் நிலைமையில் இருந்தான்..