(Reading time: 36 - 71 minutes)

தொடர்கதை - தித்திக்கும் புது காதலே!!! - 14 - கார்த்திகா கார்த்திகேயன்

Thithikkum puthu kathale

"ன்னை அண்ணனு சொன்னதுக்கு தேங்க்ஸ் மா. ஒரு அண்ணனா இதை உனக்கு வாங்கி கொடுக்கும் போது நீ என்ன சொல்லுவியோ என்னை திட்டுவியோன்னு  பயத்துல தான் மா கொடுத்தேன். ஆனா நீ என் பயம் அவசியமே இல்லாத மாதிரி வாங்கி கிட்ட. என்னை பொருத்த வரைக்கும் நீ நல்ல பொண்ணு அப்படிங்குறது  தான் என் எண்ணம். ஆனா என் நண்பனை மட்டும் தப்பா நினைக்கிறதை  தான் என்னால தாங்க முடியலை. நாங்க இங்க வந்துருக்குறப்ப  உன்னையும் இங்க வர வைக்கணும்னு ஆசை பட்டது நான் தான்.

எனக்காக தான் வலுக்கட்டாயமா ஷியாம் உன்னை இங்க வரவச்சான். உன்மேல  ஷியாமுக்கு ரொம்ப பாசம். எப்ப டா  என் தங்கச்சி என்னை அண்ணனு கூப்பிடுவானு ரொம்ப தடவை என்கிட்டே கேட்டு கஷ்ட பட்டுருக்கான். அட்லீஸ்ட் அதை என்னால நிறைவேத்த  முடியாமல் போனாலும் உன் கூட அவன் கொஞ்ச நாள் இருக்கிறான்  அப்படிங்குற சந்தோசத்தை அவனுக்கு கொடுக்கணும்னு தான் நான் உன்னை வர சொன்னேன்"

....

"நீ விருப்பம் இல்லாம இங்க வந்தது எனக்கும் தெரியும். நாங்க ரெண்டு நாளுல கிளம்பிருவோம். நீ இது வரைக்கும் எங்க கூட சேரவே இல்லை. நீயும்  எங்க கூட சந்தோசமா இருக்கணும்னு தான் ஆசை பட்டேன். அது நடக்காம  நீ ஷியாமை திட்டி அவன் நிம்மதியா இல்லாம இருக்குறதும், நீயும் சொந்த வீட்டுலே கஷ்ட பட்டு இருக்குறதும் தான் நடக்குது. அதனால இன்னைக்கே நீ கிளம்பி போகலாம். ஆனா உனக்கு கல்யாணம் முடிஞ்சு உனக்கு பொறுக்க போற பிள்ளைங்களுக்கு தாய்மாமனாவது ஷியாமை இருக்க விடு மா. என் நண்பனுக்காக நான் இந்த கெல்ப்பை உன்கிட்ட பிச்சையா கேக்குறேன். ஷியாம், உன்னோட அப்பாவை வர சொல்லிரு டா. அவர் வந்து காயத்ரியை கூட்டிட்டு போகட்டும். மதி ஒரு நிமிஷம் என்கூட வா", என்று சொல்லி விட்டு அறைக்கு சென்று விட்டான் சூர்யா.

காயத்ரியே அதிர்ந்து போய் நின்றாள். சூர்யா  இது வரை அவளிடம் பேசியது இல்லை. எதிரே சந்திக்க நேர்ந்தாலும் அவளை பார்த்து ஒரு புன்னகையை சிந்தி விட்டு சென்று விடுவான். அதனால் அவன் மீது அவள் எந்த உணர்வையும் காட்ட வில்லை. ஆனால் இன்று அவன் கண் கலங்கி பேசியது அவளுக்கு வருத்தத்தை கொடுத்தது.

"அத்தான் சொன்ன மாதிரி எனக்கும் அந்த ஆசை தான் காயத்ரி. உன்னை சுத்தி இருக்குற எல்லாருமே உன் மேல பாசம் காட்டனும்னு தான் நினைக்கிறோம். அதுக்கு தான் உன்கிட்ட நான் எவ்வளவோ பிரண்டா பழக முயற்சி  செஞ்சேன். ஆனா நீ எங்களை ஒதுக்கியே வச்சிட்ட. பரவால்ல, இத்தனை நாள் எங்க கூட கோபமா இருந்தா கூட எங்க கூட தங்கினதுக்கு  தேங்க்ஸ்", என்று சொல்லி விட்டு மதி தன்னுடைய அறைக்கு செல்லும் போது "இது என்னோட பரிசு மதி", என்று அவள் கையில் ஒரு கவரை கொடுத்தான் ஷியாம் பிரகாஷ்.

"தேங்க்ஸ்  அண்ணா", என்று சொல்லி அதை வாங்கி கொண்ட மதி தங்கள் அறைக்கு சென்று விட்டாள்.

"இத்தனை பேர் சொன்னாலும் நீ எல்லாம் புரிஞ்சிக்க மாட்டல்ல? உங்க குடும்ப விசயம் எனக்கு மதி சொல்லி தான் தெரியும். என் வயசு தான உனக்கும்? யார் என்ன சொன்னாலும் நம்பிருவியா? சித்தியாம் சித்தி. இது வரை எந்த ரெண்டாவது தாரமா வந்த பொண்டாடியும் மூத்தவ பிள்ளைங்களை பாசமா வளத்துருக்குறதா நீ கேள்வி பட்டிருக்கியா? அவங்களுக்கு முதல் தாரதோட பிள்ளைங்க எதிரிகளா  தான் தெரிவாங்க. உன்னை மட்டும் பாசமா வளக்குறாங்கன்னா அது பெரிய விசயம் தான். நான் இல்லைன்னு சொல்லலை. ஆனா அதுக்கு பின்னாடி மறைஞ்சிருக்குற காரணத்தை தான் நீ யோசிக்காம இருக்குற. நல்லா யோசிச்சு பாரு. இது வரைக்கும் ஒரு தடவையாவது உன்னோட அண்ணனை பத்தி உங்க சித்தி உங்க அப்பா கிட்டயும் உன் கிட்டயும் பாராட்டி பேசிருக்காங்களா? நல்ல அம்மாவா  இருந்தா சொந்த பிள்ளைங்களா நினைச்சு அவங்க செய்ற  தப்பையும் நிறைவா தான் சொல்லுவாங்க. குத்தம் சொல்லி வெறுக்க வைக்க மாட்டாங்க. காக்கைக்கு தான் குஞ்சு பழமொழி அப்படிங்குற மாதிரியா நடந்து உங்க சித்தி நல்ல அம்மாவா இருக்காங்க? கடவுள் கொடுத்துருக்க மூளையை கொஞ்சமாவது உபயோக படுத்து காயத்ரி", என்றாள் காவ்யா.

இதை எல்லாம் காயத்ரியே யோசித்து உணர்ந்திருந்தாலும்  "ஏய், என்னை மூளை இல்லாதவள்ன்னு சொல்றியா?", என்று கோபமாக உடனே காவ்யாவை பார்த்து கேட்டு விட்டாள்.

எதையோ சொல்ல போன காவ்யாவை தடுத்த ஷியாம் "காவ்யா  நீ அமைதியா இரு. தேவை இல்லாம நீங்க ரெண்டு பேரும் சண்டை போட வேண்டாம். எனக்காக நீ என் தங்கச்சி கிட்ட பேச வேண்டாம் காவ்யா. இங்க பாரு காயு, யார் என்ன சொன்னாலும் உன்னோட மனசு மாறாதுன்னு எனக்கு தெரியும். ஆனா எனக்கு உன்மேல உள்ள பாசம் மாறாது. உன்கூட கொஞ்ச நாள் சேர்ந்து  இருக்கணும்னு தான் அப்பா கிட்ட சொல்லி உன்னை இங்க கூப்பிட்டேன். ஆனா நீ இங்க வந்து சந்தோசமா இல்லைன்னு தெரியும். அதனால இன்னைக்கே அப்பா கிட்ட உன்னை கூட்டிட்டு போக சொல்றேன். அப்புறம் தங்கச்சின்னு உரிமைல தான் இந்த டிரெஸ் வாங்கிட்டு வந்தேன். ஆனா அதை நீ வாங்க மாட்டேன்னு தெரியும்", என்று சொல்லி கொண்டே அந்த கவரை காயத்ரி அருகில் இருந்த சேரில் வைத்தவன் "காவ்யா, இது உனக்கு", என்று சொல்லி  அவள் கையில் ஒரு கவரை கொடுத்தான். அப்போதிருந்த சூழ்நிலையில் ஷியாம் கொடுத்ததை மறுக்க தோன்றாமல் அதை அமைதியாக வாங்கி கொண்டாள் காவ்யா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.