தொடர்கதை - அன்பின் அழகே - 08 - ஸ்ரீ
“தரை இறங்கிய பறவை போலவே
மனம் மெல்ல மெல்ல அசைந்து போகுதே
கரை ஒதுக்கிய நுரையைப் போலவே
என்னுயிர் தனியே ஒதுங்குகிறதே
தொடத்தொடதொட தொலைந்து போகிறேன்
எடை எடை மிகக்குறைந்து போகிறேன்
அட இது என்ன உடைந்து சேர்கிறேன்
நகத்தின் நுனியும் சிலிர்த்து விடக்கண்டேன்
நதியில் மிதக்கும் ஓடம் என
வானில் அலையும் மேகம் என
மாறத்துடிக்கும் வேகம் கண்டேன்
இதுவும் புதிய உணர்வு அல்லவா”
மறுநாள் காலையிலேயே திஷானியை தயாராக கூறியவன் மூன்று நாட்களுக்கான துணிகளை எடுத்து வைத்துக் கொள்ளுமாறு கூறினான்.வழக்கம் போல் எங்கு செல்கிறோம் என்று எதுவும் கூறவில்லை அவளும் கேட்கவில்லை.
கார் சென்னையின் ஈசிஆர் சாலையில் பயணிக்க ஆரம்பித்திருந்தது.அப்போதுமே திஷானி அமைதியாய் பயணத்தை ரசித்தாளே அன்றி ஒன்றுமே கேட்கவில்லை.முந்தைய நாளின் விஷயங்கள் அவளை மிகவுமே மாற்றியிருந்தன.
“ஏன் டியர் ஒரு பேச்சுக்கு கூட என்ன ப்ளான்னு கேக்க மாட்டியா?”
“ஏன் நீங்க சொல்ல மாட்டீங்களா?”
“அது சரி..ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாமேனு தான்..”
“ம்ம் அந்த சர்ப்ரைஸ கெடுக்க வேண்டாமேனு தான் கேக்கல..”,என்றவள் மென்னகைக்க,
“ஆஹா அப்பப்போ நீ ஒரு டீச்சர்னு மறந்துரேனே..”,என்றவனும் அவளோடு சிரிப்பில் இணைந்து கொண்டான்..
அடுத்த இரண்டு மணி நேரத்தில் கார் சென்று நின்ற இடம் புதுச்சேரியின் அழகிய கடற்கரை ரெசார்ட்டில்..
“என்னங்க திடீர்னு?”
“ம்ம் ஏற்கனவே மைண்ட்ல இருந்ததுதான் திஷா..பட் உன் மைண்ட் எப்படியிருக்குனு தெரியாம ட்ரிப் ப்ளான் பண்ண வேண்டாமேனு தான் ஒண்ணும் பண்ணல..பட் நேத்து நீ பீச் பாத்து எக்ஸைட் ஆனதுல தான் இந்த இடத்துக்கு வந்தே ஆகணும்னு முடிவு பண்ணிட்டேன்..பிடிச்சுருக்கா?”
“ம்ம் ரொம்பவே..”,என்றவள் புன்னகையோடு அவனோடு இணைந்து நடந்தாள்.
தங்களுக்கான அறையில் செக்இன் செய்தவர்கள் சற்று நேரம் ஓய்வெடுத்துவிட்டு வெளியே கிளம்பத் தயாராகினர்.
நேராய் மணக்குள விநாயகர் கோவிலுக்குச் சென்று மனமார வணங்கிவிட்டு அடுத்ததாய் அன்னை அரவிந்தர் ஆசிரமத்திற்குச் சென்றனர்.
அதன் அமைதியும் அழகும் மனதிற்கு தேவையான ஒன்றாய் இருந்தது திஷானிக்கு..அவளோடு பொறுமையாய் எந்த சிடுசிடுப்பும் இன்றி இயல்பாய் கை கோர்த்து வருபவனை பார்த்து பார்த்து வியந்தாள்.
அங்கிருந்து கிளம்பியவர்கள் தங்கள் ரெசார்ட்டை அடைய தங்களறைக்குச் செல்லப் போனவளை தடுத்து கடல்புறம் அழைத்துச் சென்றான்.
“வேண்டாம்ங்க ஏற்கனவே டயர்டா தெரியுறீங்க முதல்ல சாப்ட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க சாய்ந்திரமா வரலாம்..”
“திஷா பேபி ஹனிமூன் வந்துட்டு இப்டி சாப்ட்டு தூங்க சொல்றியே சோ சேட்..”,என இயல்பாய் கடல் அலையில் கால் நனைக்க ஆரம்பிக்க அவனைப் பற்றி அறிந்தவளும் ஒன்றும் கூறாமல் அவனோடு இணைந்து நின்றாள்.
அரைமணி நேரமாய் அடிக்கும் வெயிலை கூட பொருட்டுத்தாமல் நீரில் ஆட்டம் போட அவள்தான் கஷ்டப்பட்டு அவனை அழைத்துச் சென்றாள்.
அறைக்குள் நுழைந்ந நேரம் அபினவிற்கு அலைப்பேசி அழைப்பு வர அப்படியே சோபாவில் அமர்ந்து பேச ஆரம்பித்திருந்தான்.அவன் அப்படியே அமர்ந்து பேசுவதைக் கண்டவள் சேரை எடுத்து அவனருகில் போட்டு அமர்ந்து அவன் ஷுவை கழட்டுவதற்கு தயாரானாள்.
அவனோ அவசரமாய் அவள் கைப்பிடித்து தடுக்க முக்கியமான அழைப்பு என்பதால் பேச்சை நிறுத்த முடியாமல் அவளிடம் வேண்டாமென்பதாய் தலையசைக்க அவள் அதை கண்டுகொள்ளாது தன் வேலையை கவனித்தாள்.
அவன் முகமெங்கும் வேர்த்திருக்க அருகிலிருந்த ஏசி ரிமோர்ட்டை எடுத்து டெப்பரேச்சரை சரி செய்து எழுந்து செல்ல எத்தனிக்க அவன் என்னவென்பதாய் செய்கை செய்ய துடைப்பதற்கு துண்டு எடுத்து வருவதாய் அவளும் செய்கையிலேயே கூறினாள்.