தொடர்கதை - காதல் இளவரசி – 07 - லதா சரவணன்
வாழ்க்கையில் சக்கரம் போல எல்லாவற்றிற்கும் முடிவும் ஆரம்பமும் உண்டு. அதே போல் நடக்காது என்று நினைத்திருக்கும் சில விஷயங்கள் கூட வெகு சீக்கிரம் முடிவுக்கு வந்து விடுகிறது. இப்போது உன்னையே நீ எனக்கு முழுமனதோடு ஒப்புக்கொள்வதைப் போல...
பரத்தின் திமிரான பேச்சு உத்ராவை திடுக்கிட வைத்தது.
நான் ஒண்ணும் உங்களை மனதார ஏற்றுக்கொண்டு இங்கே வரவில்லை நீங்கள் தான்...
திட்டம்போட்டு ஏமாற்றி இங்கே அழைத்து வந்துவிட்டேன் என்கிறாயோ ? நீ எப்படிச் சொன்னாலும் எனக்கு அது சம்மதமே, சதியோ, விதியோ என்னைப் பொறுத்தவரையில் நான் ஆசைப்பட்ட நீ எனக்கு கிடைக்கப்போகிறாய் நேரத்தை வீணாக்காதே காலையில் கேம்பிற்கு செல்ல வேண்டும் சீக்கிரம் வா என்று அவளருகில் விரைந்தான்.
அதிவேகமாக கண்விழித்தாள் உத்ரா..
ச்சீ அதிகாலையில் இத்தனை மோசமான கனவு ஒருவேளை கனவில் வந்தாற்போலவே பரத் தன்னை திட்டமிட்டு இங்கே கொண்டு வந்து இருக்கிறானோ ? இதென்ன மட்டித்தனமான கேள்வி எங்கோ மூலையில் அதிலும் அவனின் தகுதிக்கு சற்றும் பொருந்தாத என்னையடைய இத்தனை மெனக்கெட்டு இருப்பானா என்ன ? அதிலும் இந்தப் பணியில் சேரும் முன்னமே எல்லாவற்றையும் தெளிவு படுத்திக் கொண்டுதானே நான் இணைந்தேன். அப்போது எல்லாம் கண்முன்னே தோன்றாமல் இப்போது திடுமென்று வந்து குழுவின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறான் என்றால் ....?!
ச்சீ அதெல்லாம் இருக்காது இருளைப் பார்த்தாலே பேய் நினைப்பு வருவதைப் போல ஒப்பந்தம் முடியும் வரையில் தான் இங்கேதான் இருந்தாக வேண்டும் எனவே தேவையில்லாத எண்ணத்திற்கு இடம் கொடுக்க வேண்டாம்.
இப்போது சம்பந்தமே இல்லாமல் இதுபோன்ற கனவு ஏன் வரவேண்டும். நேற்று இரவு வீட்டினரைப் பிரிந்த சோகம், பரத்தின் அலட்சியம், பழைய வேலையின் பிரதிபலிப்பு எல்லாம் இணைந்து மனது ஒரு நிலையில் இல்லாமல் இருந்ததால் இப்படியொரு கனவு வந்திருக்கவேண்டும் என்று உத்ராவாகவே முடிவு செய்து விட்டு, மெல்ல படுக்கையினை விட்டு எழுந்து முகத்தைக் கழுவி சுத்தம் செய்து கொண்டு, வெளியே வர சூடாக ஏதாவது பானம் அருந்தினால் நன்றாக இருக்கும் போல் தோன்றியது. போனில் ஆர்டர் செய்து விட்டு நேற்று இரவு நின்ற அதே இடத்தில் போய் நின்று கொண்டு சலமினலமில்லாத கடலைப் பார்த்தாள். அலைகளின் வேகம் ஒரே சீராகத்தான் இருந்தது. வெண்பஞ்சை கொட்டியது போல நுரை நுரையாய் கரை நோக்கி வரும் அலைகளை கைநீட்டி அதன் விரலிடுக்கில் வடியவிட்டு அலைகளுக்கு கண்ணாமூச்சு ஆடிய நினைவுகள் வந்தன.
இந்த ஆர்ப்பரிக்கும் கடலுக்கும் மனித வாழ்க்கைக்கும் ஒற்றுமை இருக்கிறது போல கரையோரம் சந்தோஷத்தையும், கட்டியணைத்து நீந்தும் போது உற்சாகத்தையும், பயணிக்கும்போது ஊஞ்சலாட்டத்தையும், பேரலையில் அழிவின் பயத்தையும் மாறிமாறிக் காண்பிக்கிறது. பணியாள் கொண்டு வந்து விட்டு போன காபிக்கோப்பையினை எடுத்தபோது அருகே ஒரு கீரின் டீ இருந்தது. இந்த அதிகாலை வேலையில் யார் ஆர்டர் செய்திருப்பார்கள் அதுவும் இந்த இடத்திற்கு என்றால் திரும்பிப் பார்க்கும் போது அந்த கீரின் டீக் கோப்பையை பரத் வாங்கிக் கொண்டு இருந்தான். இவளைப் பார்த்ததும் ஒரு கணம் நெற்றியைச் சுருக்கிவிட்டு புன்னகைத்து அவளை நோக்கி வரவும் செய்தான்.
கனவில் இவனைக் கண்டு பதறியெழுந்த பிறகு, இந்நேரம் அவன் ஏதோ ஒரு யுவதியின் அணைப்பில் கட்டுண்டு இருப்பான் என்று எண்ணியவள். அவளருகில் அதுவும் நேற்று யாரென்றே தெரியாதவனைப்போல இருந்து விட்டு இன்று உத்ராவைப் பார்த்து காது வரையில் இளிப்பதைக் காணும் போது திகைப்போடு கூடவே கோபமும் வந்தது. இவள் எண்ணியதை உணர்ந்து கொண்டவனைப் போல அவன் சிரிப்பை இன்னமும் அகலமாக்கவே உத்ரா சட்டென்று சிரித்து விட்டாள்.
நீதானா... நானென்னவோ இரண்டாவது தளத்தில் கடல்தேவதைதான் வந்து நிற்கிறதோ என்று நினைத்து விட்டேன். இதென்ன ராக்கோழி போல இந்நேரத்தில் வந்து நிற்கிறாய். இன்னமும் பொழுது விடியக்கூட இல்லையே ?
இயல்பாய் பரத் பேசிய போதும் உத்ரா பதில் ஏதும் தெரிவிக்கவில்லை....! பதில் வரவில்லையென்று அவன் உத்ராவின் பக்கம் மீண்டும் திரும்பி என்னவென்று புருவம் உயர்த்திப் பார்த்தான்.
நான் யாரென்று உங்களுக்கு நினைவிருக்கிறதா .
ஏன் நீ பெண் நேற்று உன்னை அரங்கத்தில் பார்த்தேன் என்னையே வெறிக்க வெறிக்க பார்த்துக்கொண்டு இருந்தாய். என்னதான் காசுக்கு வருபவள் என்றாலும் அப்போதைய என் கம்பேனியனுக்கு நீ என்னைப் பார்ப்பதில் அவ்வளவு விருப்பம் இல்லை மேலும்.....அவளுக்கு உன்னைப் பற்றி என்ன தெரியும்