தொடர்கதை - வெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே – 09 - புவனேஸ்வரி
"குட் மார்னிங் என் வருங்கால முதலாளிகளே .. " என்று பொதுப்படையாக கூறிவிட்டு , கார்கியிடம் , "உங்களுக்கு என்னை தெரியுமா சார் ?" என்றாள் நித்யா தேனொழுகும் குரலில் ! ஒரு பக்கம் நடிகையர் திலகமாய் நித்யா, இன்னோரு பக்கம் ஆர்வ கோளாறாக மனோ என இருவரையும் பார்த்து பல்லை கடித்தான் கார்முகிலன் . அவன் "அந்த பொண்ணுடா" என்று சமிக்ஞை செய்த நொடி சிறிது என்றாலும் நித்யாவை இனம் கண்டுகொண்டனர் கதிரவனும் , பிரபஞ்சனும் . வழக்கம்போலவே விழிகளாலேயே சம்பாஷணை நடத்தி கொண்டனர் மூவரும் .
" நான் அப்பறம் வரேன் மச்சி " என்று கார்முகிலன் கடுப்பாக வெளியேற எத்தனிக்கவும் , பிரபா " டேய் நில்லுடா" என்று தடுக்க , அவனை கைகளில் தட்டி நிறுத்தினான் கதிரவன் . " விடு மச்சி அவன் போகட்டும் .. கொஞ்ச நேரத்துல வந்துடுவான்.. நாம இண்டர்வியூ ஆரம்பிக்கலாமா மிஸ் நித்யா ?" என்று கோப்பையில் பார்வையை மாற்றினான் கதிரவன் . அவன் முகத்தில் இனம் புரியாத கடுமை பருவியிருந்ததை அங்கிருந்த மற்ற மூவருமே உணர்ந்திருந்தனர் . ஆனால் தன் கடுமைக்கும் , நேர்முகத்தேர்வுக்கும் பங்கமே வராத அளவிற்கு நேர்த்தியாக நடந்துக்க கொண்ட கதிரவன் , பிரபஞ்சனை போல நித்யாவின் நன்மதிப்பை பெற்றிருந்தான் . நித்யாவின் பதிலும் , தெளிவான பேச்சும் திருப்திகரமாகவே இருந்தது .
"ஓகே மிஸ் நித்யா . வீ வில் கெட் பேக் டூ யூ வெரி சூன் " என்று நம்பிக்கை அளிக்கும் விதத்தில் பிரபஞ்சன் சொல்ல , " நான் ஒரு விஷயம் சொல்லணுமே சார் " என்றாள் நித்யா .
" எஸ் என்ன ?"
" நான் உள்ள வர்றதுக்கு முன்னாடியே உங்க பேச்சை அரைகுறையா கேட்டு , நீங்கதான் என் பாஸ்னு பிக்ஸ் பண்ணிட்டு வந்தேன் .. ஆனால் இங்க உங்க ப்ரண்டை பார்த்ததும் அதிர்ச்சியாக இருந்தது .. பெர்சனலும் , வேலையும் சேர்த்து வெச்சு பார்க்க வேணாம்னு எண்ணத்துல தான் அவரை யாருனு தெரியாத மாதிரி காட்டிகிட்டேன் .. ஆனா இப்பவும் அவருக்கு கோபம் தான் இருக்கு .. காரணமே இல்லாதவங்க என்மேல கோபப்பட அதை தாங்கிகிட்டு வேலை பார்த்தே ஆகணும்னு எனக்கு சூழல் இல்ல.. அது மட்டுமில்ல .. இப்போ வேலை கிடைச்ச போதும்னு தலை ஆட்டிட்டு தினமும் ஒரு காரணத்துக்கு புலம்புர ராகம் நானில்லை .. "
".."
"இந்த வேலை எனக்கு கொடுக்கிறதா இருந்தா , அது எனக்கு வேணாம்.. உங்களை எல்லாம் புடிச்சிருந்தது அதான் உடனே மறுக்காமல் பேசினேன் . ஆனா இது சரி வராது!" என்றாள் நித்யா.
"அவசரப்பட வேணாம் நித்யா .. கார்முகிலன் எப்பவுமே இங்க இருக்க போறது இல்லை !" என்று சட்டென இடைப்புகுந்தான் மனோ . அவன் கார்முகிலன் என்று சொன்ன மறுநொடியே நித்யாவின் முகத்தில் சொல்ல முடியாத பாவம்.
"கார் .. மு..கி ..லன் .. " மிகவும் பொறுமையாய் அதே நேரம் அழுத்தமாய் அவள் சொல்லி முடிப்பதற்குள் நித்யாவின் முகத்தில் ரத்தம் பாய்ந்தது.
"இது சரி வராது ! தேங்க்ஸ் " என்றவள் கிட்டத்தட்ட் பிரபஞ்சனின் கைகளில் இருந்த தனது கோப்பையை பிடுங்கி கொண்டு விரைந்தாள் . சில நொடிகளில் நிகழ்ந்தது அவளின் முக மாற்றமும் வேகமும் . என்ன ஆயிற்று என்று மற்ற மூவருக்கும் புரியவேயில்லை . ஆனால் இதை அப்படியே விட கூடாது என்பதை மட்டும் மனதில் குறித்து வைத்துக் கொண்டான் பிரபஞ்சன் .
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
தங்களது அலுவலகத்தின் அருகில் இருந்த பூங்காவில் அமர்ந்திருந்தான் கார்முகிலன் . எதையும் இலகுவாக எடுத்து கொள்பவனுக்கு ஏன் நித்யாவின் மீது இத்தனை கோபமோ ? புரியாமல் அமர்ந்திருந்தான் . குழம்பிருக்கும் பிள்ளைக்கு ஆறுதல் தரும் அன்னையை போல ஈரக்காற்று அவனது அடர்ந்த கேசத்தை வருட , முகம் சுருக்கினான் கார்முகிலன் . அந்த காற்றும் அதன்மூலமாக வரும் இயற்கை மணமும் அடுத்து என்ன நிகழ போகிறது என்பதை அவனுக்கு நன்றாகவே உணர்த்தியது . அண்ணார்ந்து வான் நோக்கினான் கார்முகிலன் . அவனுக்கு நண்பனாகவோ அல்லது பிரதிபிம்பமாகவோ கார்முகில்கள் அவனை நோக்கியே அலைபாய்ந்து கொண்டிருந்தன .. அவன் இரு கரம் நீட்டி வா என்று அழைத்தால் துளியாய் உடைந்து அவனை சரணடையவும் காத்திருந்தன அவை .
கார்முகில்களின் ஆவல் அவனுக்குள் நடுக்கத்தை உருவாக்கியது . கைவிரல்களும் கால்விரல்களும் நடுங்குவது போல பிரம்மை தோன்றிட , அவனை சோதிக்கும் வண்ணம் பேரிடி சத்தம் ஒருபுறம் கேட்க, சட்டென விழிகளை மூடிக் கொண்டு இருளில் தொலைந்து போக நினைத்தான். "ஐயோ எனக்கு இது வேணாம் " என்று அவன் அரற்ற , வானிலிருந்து முதல் மழைத்துளி அவனைத் தீண்டும் முன்னரே பிரபஞ்சனும் கதிரவனும் அவனை தாவி அணைத்து நனையாதவாறு தடுத்திருந்தனர்.