தொடர்கதை - காதலான நேசமோ - 28 - தேவி
ஷ்யாமிற்கு அடிபட்ட இந்த ஒரு வாரத்தில், மித்ரா, ஷ்யாம் இடையே இதுவரை இருந்த புரிதலை விட, கணவன் மனைவிக்கான நெருக்கம் தோன்ற ஆரம்பித்து இருந்தது.
அடிபட்டவுடன் முதலில் தோன்றிய அந்த பதட்டம் அவளின் இயல்புதான். தனக்கு நெருங்கியவர்களுக்கு விபத்து என்று கேள்விபட்டால் ஏற்படும் உணர்வு என்றுதான் எண்ணியிருந்தாள். ஆனால் அதற்குப் பின் அவனைக் கவனித்துக் கொள்வதில் காட்டிய விருப்பம், அதை வேறு யாரிடமும் ஒப்படைக்க மனம் வராதது , அதை விட அவன் ரேஸ் போவதைக் குறித்த தன் பயம் இது எல்லாம் அவளுக்குத் தான் ஷ்யாமை நேசிப்பதை உணர்த்தியது.
சரவணனோடு அவள் நிச்சயமே நடந்து இருந்த போதிலும், அதைக் குறித்த தன் உணர்வுகளை அவள் ஷ்யாமைத் தவிர வேறு யாரிடமும் பகிரவில்லை.
சிறு வயதிலிருந்து தன்னுடைய சந்தோஷ நேரங்களை விட, கஷ்டமான நேரங்களில் அவனின் துணையை அவள் அதிகம் தேடி இருக்கிறாள். அத்தோடு இந்த பத்து நாட்களாக தான் ஷ்யாமோடு முழு நேரமும் இருந்து இருக்கிறாள்.
வீட்டில் மைதிலிக்கு செல்லப் பிள்ளையாக, ஷ்யாம் தாத்தா, பாட்டிக்கு பேரனாக, சுமித்ராவோடு பாசத்தையும், சீண்டலையும் சரிவிகித்ததில் காட்டும் அண்ணனாக, உறவினர்களுக்கு முன்மாதிரியாய் இருப்பவன் ஷ்யாம்.
அலுவலகத்திலோ அவனுடைய வேகம், திறமை, வேலையில் அவன் காட்டும் ஈடுபாடு, அளந்து பேசும் பேச்சுக்கள், தன் பார்வையிலேயே வேலை செய்பவர்களைக் கட்டுப் படுத்தி இருப்பது என வேறுமுகம் காட்டும் ஷ்யாம்.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
அவன் வீட்டில் காட்டும் முகமும், அலுவலகத்தில் காட்டும் முகமும் பார்த்தவளுக்கு சற்று பிரமிப்பாகவே இருந்தது.
தன் திருமணம் பற்றிய எண்ணங்கள் தோன்றும் முன்னமே அவளின் திருமணம் நடந்து விட்டதால், அவளுக்குத் தனக்கு வரப் போகும் கணவன் பற்றிய எதிர்பார்ப்பு, ஆசை இவை எதுவும் தோன்றவில்லை.
இப்போதோ அவள் படித்தக் கதைகளின் நாயகனைப் போன்று ஷ்யாம் இருப்பதாகத் தோன்றியது. அவனுடைய செயல்கள் மட்டுமில்லாமல், அவனின் தோற்றம், மேனரிசம், சிரிப்பு எல்லாவற்றையும் அவனறியாமல் ரசிக்க ஆரம்பித்து இருந்தாள்.
ஷ்யாம் முதலிலேயே கூறி இருந்தது போல், அவன் மித்ரா தன் மனைவி என்ற எண்ணத்தை எல்லா விதத்திலும் வெளிப் படுத்தி இருந்தான் தான். அந்த எண்ணம் மித்ராவிற்கும் வர வேண்டும் என்றே எண்ணிக் காத்து இருந்தான்.
மித்ராவின் கண்களில் உரிமை, பொறாமை போன்ற உணர்வுகள் இந்த பத்து நாட்களில் வெளிப் பட ஆரம்பித்து இருந்தது.
அன்றைக்கு அவள் ஷ்யாமிற்கு சாப்பாடு எடுத்து வந்து ஊட்டிக் கொண்டிருக்கும் போது போன் வரவே எடுத்து பேசலானான். வழக்கமாக அவள் ஊட்டும் போது, அவன் தன்னுடைய அனுபவங்கள் ஏதாவது சொல்லுவான். முக்கியமாக வெளிநாட்டு வாழ்க்கை முறை பற்றிய விவரங்கள் அதிகம் கூறுவான்.
இன்றைக்கு போனில் பேசவே, அவளும் அவன் பேசட்டும் என்று காத்து இருந்தாள். அவன் சாப்பிட்டு முடித்தும் அவன் பேசி முடிக்கவில்லை. யாரிடம் இத்தனை நேரம் பேசுகிறான் என்ற கேள்வி தோன்றியது.
அவள் கீழே போய் சாப்பிட்டு மீண்டும் மேலே வரும் வரை அவன் பேசிக் கொண்டு இருந்தான். அவள் டேபிலேட் எடுத்து வரும்போது தான் முடித்தான்.
“அத்தான், யார்கிட்டே இவ்ளோ நேரம் பேசிட்டு இருந்தீங்க?
“சைதன்யா கிட்டே தான்”
“அவ எதுக்கு இவ்ளோ நேரம் பேசறா?
“அவள் மேலே படிக்கிறதுக்கு கோர்ஸ் பற்றிக் கேட்டு இருந்தாள். அதை விசாரிச்சு டிடைல்ஸ் சொன்னேன். “
“அதுக்கு சாப்பிடற நேரம் தான் கிடைச்சுதா உங்களுக்கு?
“சாப்பாடு நீ ஊட்டப் போறே. என் கையும், வாயும் சும்மாதானே இருக்குன்னு பேசிட்டு இருந்தேன்”
“ஒஹ்.. அப்போ இத்தனை நாள் இந்தக் கையும், வாயும் என்ன செஞ்சுட்டு இருந்துதாம்?
“என்ன செஞ்சுட்டு இருந்தது?
“ஹ்ம்ம்.. எங்கிட்ட பேசிட்டு இருந்தது. அதையே இன்னிக்கும் பண்ண வேண்டியது தானே”
“உன்கிட்ட வெறுமே பேசறதுக்கு மட்டும்ன்னா என் வாய் ஒத்துழையாமை போராட்டம் நடத்துது. கையோ அதுக்கும் மேலே. டோன்ட் டிஸ்டர்ப் மீ -ன்னு இங்கிலீஷ்லே சண்டை போடுது”
“ஹ்ம்ம். வேறே என்ன பண்ணனுமாம்? “ என்று மித்ரா கேட்கும்போதே அவளின் குரல் உள்ளே போயிருந்தது.
ஷ்யாம் அதை உணர்ந்தவனாக “என் கை இரண்டும் இப்படி உன்னை சுற்றி வளைத்துக் கொள்ள சொல்லுது. வாயோ ..” என்றவன் அவள் காதுகளில் ரகசியம் சொல்ல, மித்ராவோ “ச்சே. போங்க” என்று அவன் மார்பில் குத்தி வெட்கத்தோடு சாய்ந்தாள்.