தொடர்கதை - காதலான நேசமோ - 30 - தேவி
மித்ராவின் சோர்விற்கு காரணம் தெரியாத போதும், அவளை ஷ்யாம் வற்புறுத்தவில்லை. முதல் காரணம் அவள் தன்னைத் தவிர யாரிடமும் ஷேர் செய்ய மாட்டாள். இரண்டாவது அவள் தன்னைத் தானே வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது தான் இவன் எண்ணம். இன்னும் சின்னக் குழந்தை மாதிரி அவளை ட்ரீட் செய்தால், அவனுடைய எண்ணம் நிறைவேறாது.
அவன் கேட்டபோது அவள் சமாளித்த விதத்தில், அவள் மேல் நம்பிக்கை வந்தது. எனவே அதற்கு மேல் அதைத் துருவாமல் அவளை சமாதானம் மட்டுமே செய்தான்.
அன்று போல் ஆபீஸ் பிரச்சினையோ என்று எண்ணித்தான் தன் அன்னையிடம் கேட்கச் சென்றான். ஆனால் பாதியில் மனம் மாறி தன் அறைக்கே திரும்பி விட்டான் ஷ்யாம்.
மறுநாள் காலை மித்ரா எழுந்தபோது வழக்கம் போல் ஷ்யாம் ஜாகிங் சென்று இருந்தான். நல்ல தூக்கமும், ஷ்யாமின் இதமான பேச்சிலும் அவளின் குழப்பங்கள் தெளிந்து இருந்தது.
தன் காலை வேலைகள் முடித்து வெளியில் வரும்போது, ஷ்யாமும் வரவே,
“குட் மார்னிங் அத்தான்.” என்றாள்.
உள்ளே வரும்போதே அவளின் முகத்தை ஆராய்ந்த ஷ்யாம், அவளின் தெளிவான குரலில் அவனும் தெளிந்தவனாக
“குட் மோர்னிங் மித்ரா” என்று பதில் அளித்தவன், “ஆர் யு ஓகே ?” என்று கேட்டான்.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
“எஸ் “ என்று பதில் கூறவும், அதற்கு மேல் பேச்சை வளர்க்காமல் அடுத்த வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தனர் இருவரும்.
அந்த ஜெர்மன் காண்ட்ராக்ட் மூலம் கிடைத்த மற்ற காண்ட்ராக்ட்களில் பிஸியாக இருந்த ஷ்யாம், ஆபீஸ் கிளம்ப ரெடி ஆகவும், மித்ராவும் அவனுக்குத் தேவையானதை தயாராக எடுத்து வைத்து விட்டு கீழே சென்றாள்.
ஷ்யாம் ரெடி ஆகி கீழே வரும்போது, மித்ரா, மைதிலி இருவரும் டைனிங் டேபிளில் எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு இருந்தனர்.
நேராக அங்கே வந்தவன், இருவரிடமும்
“டியர் லேடீஸ். எனக்கு இன்னிக்கு பிரேக்பாஸ்ட் வித் கிளையன்ட் மீட்டிங் இருக்கு. சோ நான் கிளம்பறேன். “
“டேய். ஷ்யாம்.. என்ன இது புது பழக்கம். உங்க ஆபீஸ் வேலை எல்லாம் மோர்னிங் டென்க்கு பிறகு தானே?
“சாரிமா. இவங்க மீட்டிங் முடிச்சுட்டு மகாபலிபுரம் சுத்திப் பார்க்கப் போறாங்க. வெயில் ஏறும் முன் அவர்களை அனுப்பி வைக்கணும். சோ இந்த மீட்டிங் இப்படி பிக்ஸ் பண்ணிருக்கேன்”
“என்னமோ போ.. உங்க அப்பாவ மிஞ்சி போயிட்டு இருக்க. என்னிக்கு நல்லா வாங்கி கட்டிக்கப் போறேன்னு தெரியல”
“டோன்ட் வொர்ரி மம்மி. இது எதையும் தாங்கும் இதயம்.
“பார்க்கலாம் பா. எதையும் தாங்கும் இதயமா? நொந்து போன நூட்லஸ் இதயமா?
“தெய்வமே. உனக்கு ஏன் இந்த கொலைவெறி? என்னைப் பெத்த அம்மா நீயே எனக்கு எதிரா நிற்கலாமா?
இந்த டைமிங் டைலாக் கேட்ட மித்ரா சிரித்து விட்டாள். அவளின் சிரிப்பில் திரும்பிய ஷ்யாம்
“இங்கே உன் புருஷன் மானம் ராக்கெட்லே பறந்துட்டு இருக்கு. நீ சப்போர்ட் பண்ணாம சிரிக்கிற? டூ பேட்”
“அத்தான். செலவில்லாமா ராக்கெட்லே பறந்துட்டு இருக்கீங்க. அதை ஏன் கெடுப்பானேன்னு தான் மீ நோ மிடில் கமிங்”
“அடக் கடவுளே. என்னைப் பெத்ததும் சரியில்லை. நான் கட்டிகிட்டதும் சரியில்லை. என்னைக் காப்பத்த இந்த உலகத்தில் யாருமே இல்லையா?
என்று நடித்துக் கொண்டு இருக்கும்போதே
“அபயம் அளித்தோம் பக்தா. தங்கள் கோரிக்கை என்னவோ?” என்று கேட்டாள் சுமித்ரா.
“ஆத்தி.. ஒன்னு கூடிட்டாங்கையா. மீ எஸ்கேப்” என்றவன்,
“மம்மி & சுமி டார்லிங்க்ஸ் பாய். “ என்றவன் , “பாய் ஸ்வீட் ஹார்ட்” என்று மித்ராவிடம் கூறிவிட்டு சென்று விட்டான். அவன் செல்லவும் , ராம் வரவே , மைதிலி ராமிடம் ஷ்யாமைப் பற்றிக் கூற ஆரம்பித்தாள்.
அவன் வேலை வேலை என்று அவன் அப்பாவைப் போலவே ஓடுவதாகவும், அவனுக்குக் கல்யாணமாகி விட்டது நினைவு இருக்கிறதா இல்லையா, இதைப் பற்றி ஒன்றும் பையனிடம் கேட்பதில்லையா என்று சரவெடி வெடித்தார் மைதிலி.
அவளின் அதிரடி தாங்காமல், மெதுவாக தன் மகளின் காதைக் கடித்தான் ராம்.
“லிட்டில் பிரின்சஸ். அந்த வரதா புயலைக் கொஞ்சம் டைவேர்ட் பண்ணிவிடேன். மீ டோடல் டேமேஜ்.” என,
“டாடி. டோன்ட் வொர்ரி. மீ த சக்திவுமன் பார் காப்பத்திங் யு” என்றாள் சுமித்ரா.
சுமித்ரா அருகில் அமர்ந்து இருந்த மித்ராவிற்கு சிரிப்பாக இருந்தது சுமியின் இங்கிலீஷ் கேட்டு. அதோடு மைதிலி அத்தையிடம் ராம் பயப்படுவதைப் பார்த்து இன்னும் சிரிப்பு வந்தது. ஆனால் சாப்பிடுபவள் போல் தலையைக் குனிந்து கொண்டாள்.