தொடர்கதை - கிபி டு கிமு - 04 - சுபஸ்ரீ
அன்புள்ள கிபி,
உன் கடிதம் கிடைத்தது. இங்கு நாங்கள் அனைவரும் நலம். உன் நலமறிய ஆவல்.
உனக்காக நான் இருக்கிறேன் என்ற உனது ஒற்றை வரி எனக்கு எத்தனை மகிழ்ச்சியை அளித்தது என்பதை விவரிக்க வார்த்தைகளை தேடி தோற்றுதான் போனேன். எனக்கு கிடைத்த ஒற்றை சொல் நன்றி மட்டுமே.
உன் தமிழ் மிகவும் உன்னைப் போலவே அழகாக மெருகேரி வருகிறது.
அடுத்து உனக்கு வந்த கடிதத்தைப் பற்றி நிறைய சொல்ல வேண்டும். வருத்தமாகவும் வேதனையாகவும் உள்ளது. ஆனால் கவலைப்படாதே நிச்சயமாய் உன்னால் அவனை கண்டுப்பிடிக்க இயலும்.
உன் அம்மாவிடமாவது இந்த கடிதத்தை பற்றி கூறிவிடு. ஏனெனில் மகளைப் பற்றி பெற்றோர் அறிந்தே ஆக வேண்டும். முன்பின் தெரியாத GOOGLEக்கே நமக்கு பிடித்தது பிடிகாத்தை பற்றித் தெரியும் போது. தாய்க்கு நிச்சயம் இவ்விஷயம் தெரிந்தே ஆக வேண்டும்.
அவரிடம் பேசும் பொழுது தைரியமாக காட்டிக் கொள். உன் குரலில் ஒலிக்கும் உறுதிதான் உன் அம்மாவிற்கு தைரியம் கொடுக்கும். என்ன இன்னல் வந்தாலும் சமாளிப்பேன் என கூறு.
உனக்கு வந்திருக்கும் கடிதம் பிரிண்ட் அவுட் மாதிரியா? அல்லது கையில் எழுதப்பட்டதா? என்று நீ குறிப்பிடவில்லை. கையினால் எழுதப்பட்டது எனில் அந்த கைஎழுத்து உனக்கு பரிட்சையமா என்று கூர்ந்து கவனி.
அதில் ஏதேனும் எழுத்துப் பிழை உள்ளதா என்று பார். சிலருக்கு ர - ற மற்றும் ல - ள இவற்றை எங்கு எதை போட வேண்டும் என்ற குழப்பம் இருக்கும் தொடர்ந்து தவறாகவே எழுதுவார்கள்..
உனக்கு தெரிந்த எவரேனும் இத்தவறை செய்வார்களா எனவும் சிந்திக்கவும்.
கடிதம் வந்த தாளை சற்றே முகர்ந்து பார். (இப்படி எல்லாம் செய்ய சொல்கிறாளே என என்னை திட்ட வேண்டாம்) அதில் எதாவது பெர்ப்யூம் வாசம் வருகிறதா அல்லது வேறு எதாவது வாசம் உனக்கு புலப்படுகிறதா என பார். அந்த வாசம் முன்பே பழகி இருக்கலாம்.
கடிதம் வந்து நாட்கள் ஆகிவிட்டது. ஆதலால் இப்பொழுது சரியாக வாசம் அறிய வாய்ப்பில்லைதான். எனினும் முயற்ச்சிப்பதில் தவறில்லை. இந்த வாசத்தை மட்டுமே வைத்து ஒருவன் மேல் குற்றம் சுமத்தவும் இயலாது.
அதன் பின்பு கடிதத்தின் முன்னும் பின்னும் நன்றாக திருப்பி பார். ஏதாவது கறை, பேஜ் நம்பர் அல்லது கிறுக்கல் உள்ளதா என்று கவனி. அக்கெண்ட்ஸ் நோட்டுகளில் பேஜ் நம்பர் இருக்கும். அதனால் கூறுகிறேன். அது ஒரு முழு தாளா அல்லது பாதியாக கிழித்ததா என சோதித்து பார். சின்ன சின்ன விஷயங்களில் நமக்கு எதாவது துப்பு கிடைக்கலாம்.
இனி ஒவ்வொரு நிமிடமும் உன் செவிகளும் விழிகளும் மிகுந்த விழிப்போடு இருக்க வேண்டும். பயம் மற்றும் பதட்டம் இவ்விரண்டும் தான் முதல் எதிரி அதனால் அவை இருந்தாலும் காட்டிக் கொள்ளாதே.
உனக்கு சந்தேகமாக உள்ளவர் பெயர்களை பட்டியலிடு. இயன்றவரை சந்தேகம் வராதவாரு அவர்களை கவனி. அவர்கள் உன்னிடம் பேசி பழகுகையில் ஏதேனும் மாற்றம் இருக்கிறதா என்றும் பார்.
கிட்டதட்ட இப்பொழுது நீ ஒரு துப்பறியும் சாம்புவாக மாற வேண்டியுள்ளது. விக்கியை கவனிக்க தவற வேண்டாம். அவன் விலகி இருக்கிறான் என்று எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
பெண் தனக்கு ஏற்படும் தீய சம்பவங்களிலிருந்து தப்பித்துக் கொள்ள இந்திரனுக்கு இருந்ததைப் போல ஆயிரம் கண்கள் இருந்தாலும் போதாது.
சில ஆண்களுக்கு தன்னை காதலி என பெண்ணிடம் கட்டளையிட்டால் அடுத்த நொடி பிடித்திருக்கிறதோ இல்லையோ அவள் காதலித்தே ஆக வேண்டும். இல்லையேல் அவள் இவ்வுலகில் வாழ தகுதியற்றவள் ஆகி விடுகிறாள்.
அவளுக்கும் விருப்பு வெறுப்பு உண்டு இதையெல்லாம் பற்றி அவனுக்கு கவலை இல்லை. தெருவில் நடந்து செல்லவே பெண் பல ஆயத்தங்கள் செய்ய வேண்டி உள்ள நிலையை என்னவென்று சொல்வது?
இன்றைய தலைமுறை மனம் பேதலிக்க சினிமாவும் ஒரு காரணம். காதலை தவிர வாழ்க்கையில் வேறு எதுவுமே இல்லை, பள்ளி பருவத்தில் காதல் என்றெல்லாம் சித்தரிப்பது தவறு என அவர்கள் உணருவதே இல்லை. சில இளைஞர்கள் அவற்றை உண்மை என நம்பவும் செய்கிறார்கள்.
ஹீரோ ஹீரோயினை கிண்டல் செய்யலாம் கேலி பேசலாம். அவளை காதலிக்க நிர்பந்திக்கலாம். இவை ஈவ் டீசிங் வகையை சார்ந்தது அல்ல போலும்.
இங்கிருந்தபடி இதை செய் அதை செய் எள ஆயிரம் விஷயங்களை சொல்லிவட்டேன். ஜாக்கிரதையாக நடந்துக் கொள் கிபி. உன் தம்பி அல்லது உனக்கு உற்ற தோழி யாரேனும் இருந்தால் அவர்களுடனும் ஆலோசனை செய்.
உன்னால் முடியும் கிபி. அந்த கயவனை கண்டுபிடித்துவிடுவாய். போலீசில் கம்ப்ளைண்ட் கொடுப்பது பற்றி வேண்டுமானால் உன் சித்தியிடம் பேசு தவறில்லை.
இதில் உன் மேல் எந்த தவறும் இல்லை. எவனோ திமிர் பிடித்தவன் கடிதம் கொடுத்தமைக்கு
நீ என்ன செய்வாய். உன்னை யாரேனும் குறை கூறினால் தக்க பதிலடி கொடுத்துவிடு.
உன்னை சுற்றி நடப்பவைகளில் கவனம் இருக்கட்டும்.
டேக் கேர் கிபி.
இப்படிக்கு உன் ஆருயிர் தோழி
கிமு
16.07.2018
கடிதங்கள் இணைக்கும் . . .