உண்மையில் கிராமத்து வாசத்தில் அவன் ஒன்றுமே செய்யவில்லை. அதிதிதான் தன்னுடைய ரோலை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறாள். அது அவனுக்கும் புரிகிறது… அதுக்காக… விலாவாரியாக குற்றம் சாட்டக் கூடாதே!
“அது…” அவன் திணற,
“அதனால கோர்ட் தன்னுடைய முடிவை மாத்திடுச்சு” கோர்ட்டா? அப்பாவா?
“என்ன மாற்றம்?” புன்சிரிப்பு மிளிர அதிதி ஆர்வமாக கேட்டாள்.
‘இது ரெண்டும் தேறாது பிரிச்சு விட்டுடலாம்ன்னு கோர்ட் முடிவு பண்ணிட்டதா நெனைச்சு சந்தோஷப்படுகிறாளோ?’
“இந்த கிராமத்தில் பத்து நாட்கள் இருப்பதை ஐந்து நாட்களாக மாற்றி விட்டார்கள். அடுத்த திட்டமாக காட்டு பகுதியில் ஐந்து நாட்கள் செல்வதை இம்பிளிமெண்ட் செய்ய சொன்னார்கள்”
அப்பா, கெத்தாக கையில் இருந்த செய்தி தாளை வாசிப்பதுபோல அமர்ந்திருப்பதை பார்த்தால் இது அவருடைய திட்டமாக இருக்குமோ?
“காட்டு பகுதிக்கா? அதெப்படி உடனடியாக செல்ல முடியும்? அதுக்கு அரேஞ்ச் பண்ணனுமே?”
“அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் தம்பி. சிம்பிளாக கிளம்பினால் போதும் அங்கே போய் சமாளிப்பதில்தான் உங்களுடைய ஒற்றுமையை காட்டணும்”
அங்கே போய் சமாளிக்க என்ன இருக்கிறது? கிர் காடுகள் ஒரு வனப்பகுதி என்றாலும் எல்லா வசதிகளும் உடைய காட்டேஜ்கள் உள்ளனவே!
“எனக்கு கிர்…” அவன் பேச்சை தடுத்து குறுக்கிட்ட பாஸ்கர்,
“அப்படித்தான் கிர்ர்ருணு வரும். யாருமில்லாத காட்டுக்குள் தனியாக ஐந்து நாட்கள் வசிப்பது என்றால் தலை சுற்றி போகும்தான்…” என்றார்.
அது அந்த ‘கிர்’ இல்லை… என்று சொல்லும் முன் அவனுக்கு புரிந்து விட்டது. அவன் கிர் வனத்திற்கு செல்லப் போவதில்லை! அவன் பயந்தது போலவே பக்கத்தாப்ல இருக்கும் காட்டிற்கு அனுப்பப் போகிறார்கள். ஓ… டாடி ஏன் இப்படி செய்றீங்க?
“ஆமாம் அதிரதன், நீங்களும் அதிதியும் அதோ அந்த வனப் பகுதிக்குதான் போகணும். அங்கே யார் உதவியும் இல்லாமல் இருக்கறதை சமைச்சு… கிடைக்கறதை சாப்பிட்டு… வாழ்ந்து பழகணும்”
என்ன ஒரு கொடுமை? இது கனவு இல்லை என்று யாராவது சொல்லுங்களேன்! எத்தனையோ விசயங்களை அவன் நடக்கணும் என்று நினைத்திருக்கிறான் அவற்றில் ஒன்றுகூட நடந்ததில்லை. ஜஸ்ட் லைக் தட் நடக்கக் கூடாதுன்னு நினைச்ச ஒண்ணு நடந்துடுச்சே!