தொடர்கதை - வாழ்வே மாயம்! - 10 - ரவை
சகாதேவன் வெளியேறியதும், காயத்ரி, தாயிடம் கெஞ்சினாள்.
" அம்மா! பாவம்மா, ஐயா! ஐயா காலையிலே எழுந்து எதுவும் சாப்பிடாம, வெறும் வயிற்றோடு பசி வாட்ட, போகிறார். அவரிடம் பணம் இருக்கிறதோ இல்லையோ, அவரை அழைத்து சாப்பிட்டபின் போகச் சொல்லும்மா!"
" சரி, நீயே போய் அவரை அழைத்துவா!"
காயத்ரி உடனே தலை தெறிக்க வெளியே ஓடினாள். அவளை தொடர்ந்து மாதவியும்தான்!
" ஐயா!" என்று யாரோ உரக்க குரல் கொடுப்பதைக் கேட்டு, சகாதேவன் திரும்பிப் பார்த்தார்!
காயத்ரியும் மாதவியும் ஓடிவருவதைப் பார்த்து, நின்றார்!
"ஐயா! தயவுசெய்து வீட்டுக்கு வந்துவிட்டு போறீங்களா? அம்மா உங்ககிட்ட ஏதோ அவசரமா சொல்லணுமாம்....."
சகாதேவன் சிறிது யோசித்துவிட்டு, இருவருடன் திரும்பினார்.
"ஐயா! குழந்தைங்க கெஞ்சுது, நீங்க ஏதாவது சாப்பிட்டபிறகு, போகச் சொல்றாங்க!
உங்க கையிலே பணம் இருக்கோ இல்லையோ, அப்படியே இருந்தாலும், ஓட்டல்கள் திறந்திருக்கோ இல்லையோ, என்றெல்லாம் கவலைப்படறாங்க, குழந்தைங்க!"
சகாதேவன் சிரித்துவிட்டு, " தங்கச்சி! குழந்தைங்கள் படற கவலை உனக்கு வரலையா?"
" ஐயா! நீங்க என் மனசை பக்குவப் படுத்தியிருக்கீங்க! சரி, இந்த வேளைக்கு இங்கே சாப்பிடறீங்க, அடுத்த வேளைக்கு? மறுநாளைக்கு? இப்படி கவலைப்பட்டு உங்களை தடுத்தால், அப்புறம் நீங்க உங்க விருப்பம்போல நடக்கமுடியாது........"
" கரெக்டா சொன்னே! தங்கச்சி! குழந்தைங்க கூப்பிட்டதும் நல்லதாகப் போச்சு! நான் ஒரு விஷயத்தை மறந்துட்டேன்,......."
தன்னிடம் இருந்த மொத்தப் பணத்தையும் எடுத்து, " தங்கச்சி! இந்த ஏழைப்பட்ட அண்ணனாலே, முடிஞ்சது இவ்வளவுதான்! இந்தப் பணத்தை வாங்கிக்கோ!குழந்தைங்களுக்கு ஏதாவது வாங்கிக் கொடு!" என்றார்.
கண்ணகி, பணத்தை எண்ணிப் பார்த்துவிட்டு சிரித்தாள்......
" அண்ணே!"
இந்த அழைப்பைக் கேட்டதும், சகாதேவன் ஒரு நிமிடம் கலங்கிப்போய் கண்ணீர் வடித்தார்.
" அழாதீங்க, அண்ணே! எனக்கும் உங்களை 'அண்ணே'ன்னு கூப்பிட்டுக்கிட்டே, உங்களை சுற்றிச் சுற்றி வரணும்னுதான் ஆசை! நீங்க என்னை 'தங்கச்சி'ன்னு பாசமா அழைக்கிறது காதிலே தேனாகப் பாயறதை அனுபவிச்சிக்கிட்டே இருக்கணும்னு ஆசையாகத் தான் இருக்கு!
ஆனால், உங்களை நான் கட்டுப்படுத்தக் கூடாது!