தொடர்கதை - வாழ்வே மாயம்! - 13 - ரவை
சமையலறையை சுத்தம் செய்துகொண்டிருந்த கண்ணகி, யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டு, "காயத்ரி! கதவை திறம்மா!"
என்று குரல் கொடுத்தாள்.
காயத்ரியை முந்திக்கொண்டு மாதவி ஓடினாள்.
அவளுக்கு ஒரு நைப்பாசை! சகாதேவனாக இருக்குமோ?
கதவை திறந்து பார்த்தால், யாரோ ஒரு புதிய நபர்!
" யாரை பார்க்கணும்? யார் நீங்க?"
" அம்மாவை கூப்பிடு, குழந்தே!"
புதிய ஆண் குரல் கேட்டதும், கண்ணகியே கைகளை துடைத்துக்கொண்டு, வெளியே வந்தாள்.
" வணக்கம்மா!"
" வணக்கம்! மன்னிக்கணும், கொரோனா பயத்தினாலே, வெளியாரை உள்ளே அனுமதிக்கிறதில்லே, யார் நீங்க? என்ன வேணும்?"
" பரவாயில்லே, நான் இங்கிருந்தே பேசறேன்! என் பெயர் விசுவநாதன்! சகாதேவனுடைய மாமா! அவரை பார்க்கணும்........"
" சகாதேவன் யாரு? அப்படி யாரும் இந்த வீட்டிலே கிடையாதே..........."
" அப்படியா! சரிம்மா! ஜெயில் வார்டன் தான், இந்த அட்ரஸ் கொடுத்தாரு......."
" ஜெயில் வார்டனா? அவரு ஏன் உங்க மருமகன் அட்ரஸ் தரணும்? உங்க மருமகன் ஜெயில்லே இருந்தாரா? எதுக்கு இருந்தாரு? திருடினாரா, கொள்ளையடிச்சாரா?"
"அவ்வளவு பெரிய தப்பெல்லாம் செய்யலேம்மா, நடுவீதியிலே, பட்டப்பகல்லே, ஒரு ரௌடியை கண்ட துண்டமா வெட்டி, தலையை கையிலே ஏந்திக்கிட்டு, வீதிவலம் வந்து, போலீஸிலே சரண்டராயிட்டாம்மா!"
" அடப்பாவி!"
" அப்படி அவனை திட்டாதேம்மா! உன்னைமாதிரி ஒரு பொண்ணை, அந்த ரௌடி நாலுபேர் நடுவிலே, நிர்வாணமாக்கி, கற்பழிக்கப் பார்த்தான். எல்லாரும் அந்த ரௌடிக்குப் பயந்து ஒதுங்கியிருந்தபோது, சகாதேவன்தாம்மா, தன்னந் தனியா, அந்த ரௌடியை அடிச்சு கீழே தள்ளி, ரௌடியின் கையிலிருந்த கத்தியை பிடுங்கி, வெட்டினாம்மா! அவன் பெரிய தியாகிம்மா! ஆனா, இந்த போலீஸ், அந்த வயசுப் பொண்ணை, காப்பாத்தறதா நினைச்சு, சகாதேவனை கொலைகாரனாக்கி வழக்கு போட்டு, அவனுக்கு பதினெட்டு வருஷம் கடுங்காவல் தண்டனை வாங்கிக் கொடுத்துட்டாங்கம்மா! இதுதாம்மா, உலகம்!
நல்லவனை நம்பமாட்டாங்கம்மா, உங்களை மாதிரி!"