தொடர்கதை - பிரியமானவளே - 10 - அமுதினி
எனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி
நீ ஒரு பௌர்னமி பௌர்னமி பேசும் பைங்கிளி
வாசலில் கார் சத்தம் கேட்கவும் சமையலறையில் இருந்து வெளியே வந்தாள் தமிழ்செல்வி.
"பாட்டி...." காரில் இருந்து இறங்கிய விசாலத்தை நோக்கி ஓடினாள்.
"செல்வி, எப்படிடா இருக்க?" அவளின் கன்னத்தை வருடியவாறு கேட்டார் பாட்டி.
"நல்லா இருக்கேன் பாட்டி, ஒரு வாரம் ஆகும்னு சொன்னிங்க, ரெண்டே நாளுல வந்துட்டிங்களே...." அவரின் கையில் இருந்த பேகை வாங்கியவாறு கேட்டாள் தமிழ்செல்வி.
"உன்னை பாக்கணும் போல இருந்துச்சு அதான் ஓடி வந்துட்டேன்" என சிரித்தார் விசாலம்.
"உக்காருங்க பாட்டி. நான் குடிக்க ஏதாவது கொண்டு வரேன். டையர்டா இருப்பிங்க" என சமையலறையை நோக்கி சென்றவள் கையை பிடித்து நிறுத்தினார் விசாலம்.
"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நீ உக்காரு" என அவளை தன்னருகே இருத்தியவர் "ராம் எங்க?" என்றார் பார்வையை அந்த வீடு முழுதும் ஒரு முறை ஓட்டியபடி.
"அவரும் நித்யாவும் வெளிய போயிருக்காங்க" என்றாள் தமிழ்செல்வி.அவளை பார்த்த பாட்டிக்கு தலையில் அடித்து கொள்ளலாம் போல தோன்றியது.
"ஒ....நீ என்ன பண்ற? நீயும் அவங்க கூட போயிருக்கலாமே...." பாட்டி கேட்கவும் "இல்லை பாட்டி அவங்க ஏதோ ஷாப்பிங் போயிருக்காங்க. எனக்கு இந்த ஷாப்பிங்ல எல்லாம் பெரிய இன்ட்ரெஸ்ட் இல்ல. அதுவும் இல்லாம கொஞ்சம் வேலை இருக்கு அதான்" தமிழ்செல்வி சொல்லவும் "என்ன வேலை? பாக்கியம் இல்லையா?" விசாலம் கேட்டார்.
"இல்லை பாட்டி அவங்க பொண்ணை பார்க்க போயிருக்காங்க" தமிழ்செல்வி பேசிக்கொண்டிருக்கையில் உள்ளே நுழைந்தனர் ராமும் நித்யாவும். ஏதோ பேசி சிரித்தபடி உள்ளே வந்த நித்யாவின் சிரிப்பு பாட்டியை கண்டதும் அப்படியே மறைந்து போனது.
"பாட்டி....எப்போ வந்திங்க?" என்றபடி அவரின் அருகே ஓடினான் ராம்.
"எப்போ வந்திங்கனு கேக்கறியா? இல்லை ஏன் வந்திங்கனு கேக்கறியா?" விசாலம் கேட்க, "ஹாஹாஹா பாட்டி வந்ததும் காமெடி பண்றீங்க?" என்றபடி பாட்டியின் கன்னத்தை பிடித்து கொஞ்சினான் ராம்.
"என்ன நித்யா அங்கேயே நின்னுட்டு இருக்க...வா வா" நித்யாவை பார்த்து ராம் அழைக்கவும் "ஹான்....பா...பாட்டி எப்படி இருக்கீங்க???" அவரின் அருகே வந்து அமர்ந்தாள் நித்யா.
"நான் நல்லா இருக்கேன். என்ன பொண்ணு நீ? பாரின்ல இருந்து திரும்பி வரத பத்தி உங்க அம்மாக்கு ஒரு வார்த்தை சொல்லல???" விசாலம் இப்படி நேரடியாக கேட்பார் என எதிர்பார்த்திருக்கவில்லை நித்யா.