தொடர்கதை - உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் - 02 - ராசு
"லட்சுமி. சாப்பிட வரலையா?." வீட்டு வாசலில் இருந்தே கத்தினாள் சுகன்யா.
தன்னை விட்டு விட்டு சாப்பிடச் செல்லாமல் தனக்காகக் காத்திருக்கும் தோழியின் செயலில் சிரித்துக்கொண்டாள்.
தன்னை நம்பித்தான் அவளை ஒப்படைத்திருக்கிறார்கள் என்று அவள் எப்போதுமே கவனத்துடன் இருப்பாள். அவளை வேளாவேளைக்கு சாப்பிட வைத்துவிடுவாள். இப்போதும் போவது போல் போக்கு காட்டிவிட்டு அங்கிருந்தே கூப்பிடுகிறாள்.
"லட்சுமிம்மா. என்னைப் பார்த்தால் உனக்குப் பாவமா இல்லையா? சாந்தாம்மா செய்த பூரிக் கிழங்கு வாசனை என்னை இழுக்குது. என் சிறு குடலை பெரு குடல் சாப்பிட்டுடும் போலருக்கு. தயவுசெய்து சீக்கிரம் வா." கெஞ்சலாக அழைக்கும் தோழியை அதற்கு மேல் சோதிக்காமல் கிளம்பினாள் மகாலட்சுமி.
சுகன்யா கூறியது போலவே பூரிக்கிழங்கு மிகவும் அருமையாக இருந்தது. ரசித்துச் சாப்பிடும் தோழியை அன்புடன் பார்த்தாள் மகாலட்சுமி.
சுகன்யா அவர்கள் வீட்டில் ஓட்டுநராகப் பணிபுரிந்த வடிவேலுவின் மகள். இப்போது வடிவேலு உயிருடன் இல்லை.
அவள் பருவம் எய்திய நேரத்தில் அவர்கள் வீட்டில் ஓட்டுநராக சேர்ந்தவன் வடிவேலு. மகாலட்சுமி பத்தாம் வகுப்பு வரையிலும் அவர்கள் கிராமத்தில் உள்ள பள்ளியில்தான் படித்தாள். அதனால் அதே பள்ளியில் படித்த சுகன்யாவின் நட்பும் அவளுக்குக் கிடைத்தது.
மகாலட்சுமி செல்வந்தர் வீட்டுப் பெண் என்பதால் மற்றவர்கள் அவளை நெருங்கப் பயந்து ஒதுங்கினார்கள். அப்படியே அவளிடம் நட்பு பாராட்டியவர்களும் அவளிடம் ஏதாவது எதிர்பார்த்தார்கள். ஆனால் சுகன்யா அப்படியில்லை. தன் தந்தை மகாலட்சுமி வீட்டில் வேலை பார்த்தாலும் அதற்காக சுகன்யா எந்தவித சலுகையையும் அவளிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. சொல்லப்போனால் மற்றவர்களைப் போலவே அவளும் முதலில் ஒதுங்கிப் போகத்தான் செய்தாள்.
மகாலட்சுமியை வடிவேலு காரில் அழைத்துச் செல்லும் அதே நேரத்தில் சுகன்யா நடந்துதான் செல்வாள். மகாலட்சுமி தன் தன் தாயிடம் கூறி அவளையும் தன்னுடன் அழைத்துச் செல்ல அனுமதி கேட்டாள்.
அவளது அன்னை வளர்மதிக்கும் மகாலட்சுமி மனிதர்களை மதித்து நடக்க வேண்டும் என்பதுதான் விருப்பம்.
பெண் வாரிசே இல்லாமல் இருந்த தங்கள் பரம்பரையில் வந்து பிறந்த மகளுக்குத் தன் வீட்டினர் கொடுக்கும் செல்லம் அவளது எதிர்காலத்தை பாழாக்கிவிடுமோ என்ற கவலை அவள் மனதில் அரித்துக்கொண்டேயிருக்கும். அதனால் மகளுக்கு நல்ல எண்ணங்களைப் போதித்தாள். என்னதான்