தொடர்கதை - உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் - 10 - ராசு
மகாலட்சுமி யோசனையுடனே ஹோட்டலுக்குள் நுழைந்தாள்.
எதிர்ப்பட்ட பணியாளர்கள் அவளுக்கு வணக்கம் தெரிவித்தார்கள். அது எதுவும் அவள் மனதில் பதியவேயில்லை. எப்போதும் தங்களின் வணக்கத்திற்கு புன்சிரிப்புடன் தலையாட்டிவிட்டுச் செல்லும் அவளது அந்தப் போக்கு மற்றவர்களுக்கு வியப்பாகவே இருந்தது.
அவள் தன்னறைக்குச் சென்று அமர்ந்தும் அவள் கவனம் முழுவதும் கணவனிடமே இருந்தது.
“குட் மார்னிங்க்.”
சுகன்யாவின் அழுத்தமான குரலில் திகைத்து விழித்தாள் மகாலட்சுமி.
அங்கே கையை இடுப்பில் கட்டிக்கொண்டு அவளை முறைத்துக்கொண்டு நின்றாள்.
“என்னடி?”
“என்ன அண்ணனோட நினைவா?”
“அட ஆமாம். உனக்கெப்படி தெரியும்?”
“ஏன் தெரியாமல்? நான் எத்தனை நேரமா உன்னையே பார்த்துக்கிட்டிருக்கேன்? அத்தனை தடவை உனக்கு காலை வணக்கம் சொன்னேன். நீ என்னைக் கவனிக்கவே இல்லை தெரியுமா?”
“சாரிடி.”
“கல்யாணம் ஆன உடனே எல்லாத்தையும் மறந்துட்டே பார்த்தியா?”
“என்னத்தை மறந்தேன்?”
“இன்னிக்கு எனக்கு ஹேப்பி பர்த்டே. நீ வாழ்த்து சொன்னியா?”
“சாரி சுகன்யா. ஹேப்பி பர்த்டே.” என்றாள் வருத்தமான குரலில்.
‘களுக்’ என்று சிரித்தாள் சுகன்யா.
“என்னடி சிரிக்கிறே?”
“இன்னிக்கு எனக்குப் பிறந்தநாள் இல்லை. நான் சொன்ன உடனே யோசிக்காமல் நீ வாழ்த்து சொல்றே. அப்ப உன் நினைவு இப்ப இங்கே இல்லை. அண்ணன் கூடவே போயிடுச்சு.”
“அதையே ஏன்டி பிடிச்சுக்கிட்டு தொங்கறே?” என்று எரிச்சலான குரலில் கேட்டாள்.
“சரி சரி தொங்கலை. ஆனால் நான் சொன்னது உண்மைதானே?”
மகாலட்சுமிக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.
அவள் இப்போது கணவனை நினைத்துக்கொண்டிருப்பது உண்மைதான். ஆனால் தோழி கேட்பது வேறு அர்த்தத்தில் அல்லவா?
தங்கள் திருமணம் நடந்ததில் கணவனின் பங்கு எத்தனை தூரம் இருக்கிறது? அது தெரியாமல் அவளால் நிம்மதியாக இருக்க முடியாது.
அவர்கள் வீட்டில் என்னவென்றால் அவர்கள்தான் அவனைத் தேடிச் சென்றதாக கூறுகிறார்கள்.