தொடர்கதை - உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் - 11 - ராசு
கணவன் பேசப்பேச மகாலட்சுமி திகைத்து நின்றது சிறிது நேரம்தான். அவன் அத்தனை எளிதில் தன்னை விலக்கிவிட முடியாது என்பது அவளுக்கு நிச்சயமாக தோன்றியது.
அவளை அவள் குடும்பத்தினர் அப்படி எல்லாம் விட்டுவிடமாட்டார்கள். அப்படி விடவா பார்த்துப் பார்த்து அவளுக்காக மாப்பிள்ளை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
அவள் முகத்தில் தெளிவு இருப்பதைக் கண்டு அவன்தான் திகைத்துப்போனான். அவளிடம் அந்த தெளிவை அவன் எதிர்பார்க்கவில்லை.
“என்ன முகம் திடீர்னு பல்ப் போட்ட மாதிரி இருக்கு?”
குறுகுறுவென அவளைப் பார்த்துக்கொண்டே கேட்டான்.
“அப்படி எல்லாம் எங்க வீட்டில் விட்டுட மாட்டாங்க.”
“என்ன விட்டுட மாட்டாங்க?”
“நீங்க சொல்ற மாதிரி எல்லாம் என்னை அத்தனை எளிதில் உங்களால் விட முடியாது. அதற்காகவா அவங்க உங்களுக்கு என்னை கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க?”
அவன் பார்வை அவள் முகத்தில் பதிந்தது.
“அதுதான் அவங்களால் மறுக்க முடியாத ஒரு காரணத்தை அவங்க முன்னால் வைக்கப்போறேனே. அதன் பிறகும் அவங்களால் என்னை என்ன செய்ய முடியும்?”
“என்ன காரணம்?”
“அதுதான் உன்னால் தாயாக முடியலைங்கிற காரணம்தான்.”
“நீங்க எந்த காலத்தில் இருக்கீங்க? இப்ப சாதாரணமா ஒரு டெஸ்ட் எடுத்தாலே போதுமே. நீங்க சொல்றது பொய்யுன்னு தெரிஞ்சுடுமே.”
“மருத்துவத்துறையில் இருக்கிற என்கிட்டயே சவால் விடறியா? நீங்க டாக்டர்கிட்ட போற அளவுக்கு உங்க குடும்ப கௌவரவம் இடம் கொடுக்குமா? அப்படியே உங்க வீட்டில் உள்ளவங்க மருத்துவ உதவியை நாடி, அதன் மூலம் உண்மை தெரிந்து வந்தால் அவர்களிடம் என்ன சொல்வேன் தெரியுமா? உங்க பொண்ணு விருப்பமில்லாமல்தான் என்னைக் கல்யாணம் செய்துகொண்டாள். அதன் பிறகும் அவள் எனக்கு உண்மையாக மனைவியாக நடந்துகொள்ளவில்லை. எனக்கு வேறு வழியிருக்கவில்லை. அதனால்தான் இந்த முடிவு எடுத்தேன்னு சொல்வேன். உங்கம்மாவே என் பக்கம் நியாயம் இருக்கிறதா சொல்வாங்க. அவங்களுக்குத்தான் நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்க மறுத்தது தெரியுமே. அப்பவும் என்னை யாரும் தப்பா நினைக்க முடியாது. உன்னைத்தான் தப்பா நினைப்பாங்க. எனக்கு அது போதும். அதன் பிறகும் உன்னை எவனாவது வந்து கட்டுவான்?”
“சும்மா பேத்தாமல் பேச்சை நிறுத்துங்க.” என்று எரிந்து விழுந்தவள் அவன் அதற்கு மேல் பேச இடம் கொடுக்காமல் போய் படுத்துக்கொண்டாள்.