தொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 03 - முகில் தினகரன்
“மோட்டார் போட்டு மேல் தொட்டிக்குத் தண்ணி ஏத்தத் தெரிஞ்ச கழுதைகளுக்கு...தொட்டி நெறைஞ்சதும் அதை ஆஃப் பண்ணனும்னு கூடத் தெரியாதா?...தொட்டி நெறைஞ்சு...தண்ணி வாசலெல்லாம் வெள்ளமா ஓடுதே...இதே அவனவன் சொந்த வீடா இருந்தா இப்படி செய்வானுகளா?”
பகீரென்று அதிர்ந்து போன தேவநாதன் அர்ச்சனாவைப் பார்த்து, “ஏய்...அர்ச்சனா நீ மோட்டார் போட்டியா?” என்று அச்சக் குரலில் கேட்க,
அவள் “இல்லையே!” என்று சொல்லச் சொல்ல அவசர அவசரமாய் வந்து நின்ற கைலாஷ், “அய்யய்யோ...நாந்தான் மோட்டார் போட்டேன்...ஆஃப் பண்ண மறந்திட்டேன்!” என்று தலையை சொறிந்தபடி நின்றான்.
“போச்சு...ஏற்கனவே அந்தம்மா என்ன காரணம் கிடைக்கும் சண்டை போடலாம்னு காத்திட்டிருந்தா...கரெக்டா அதுக்குன்னு ஒரு வலுவான காரணம் இன்னிக்கு கிடைச்சிடுச்சு...அவ்வளவுதான் இனி மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்ற வரைக்கும் இதையே பேசித் தீர்க்கும்!...சொல்ல முடியாது மாப்பிள்ளை வீட்டுக்காரங்கிட்டே கூட இதைச் சொல்லி நியாயம் கேட்டாலும் கேட்கும்!” தேவநாதன் தலையில் கை வைத்தபடி அமர்ந்தார்.
கோபமாய்த் தன் தம்பி கைலாஷைப் பார்த்த அர்ச்சனா, “ஏண்டா...மோட்டாரை ஆஃப் பண்ண மறக்கற அளவுக்கு உனக்கு என்னடா வேலை?” உஷ்ணமாய்க் கேட்டாள்.
“இல்லைக்கா...திடீர்னு நடுவுல கரண்ட் போனப்ப மோட்டார் நின்னுடுச்சு!...அப்புறம் கரண்ட் வந்தது எனக்குத் தெரியலை...மோட்டார் தொடர்ந்து ஓடியதும் எனக்குத் தெரியலை!” கண் கலங்கி விட்டான் கைலாஷ். தன்னால் அக்கா சுலோச்சனாவின் பெண் பார்க்கும் நிகழ்வில் ரசாபாசமாகிவிடுமோ? என்று அவன் பயந்தான்.
“ம்ம்ம்...இப்ப என்ன பண்றது?...எப்படி அந்தப் பொம்பளை வாயை ஆஃப் பண்றது?” யோசித்தபடியே அர்ச்சனா வாசலுக்குச் செல்ல முற்பட,
ஓடி வந்து அவளைத் தடுத்தாள் பார்வதி, “அடியேய்...ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி...நீ போகாதடி!..நீ போனா பிரச்சினையைத் தீர்க்க மாட்டே!...அது கூட சரிக்குச் சரி வாய் குடுத்து பிரச்சினையைப் பெரிசுதான் ஆக்குவே!...அதனால நீ இரு நானே போறேன்!...போய்க் கெஞ்சறேன்!” சொல்லி விட்டு அவளே வெளியே சென்றாள்.
வெளியே பக்கத்துப் போர்ஷன் ஆளிடம் விசாரித்துக் கொண்டிருந்தாள் சம்பூர்ணம்.
பார்வதி தானாகவே வலியச் சென்று, ‘சம்பூர்ணம்மா...நாந்தான் மோட்டார் போட்டேன்!...இடைல கரண்ட் ஆஃப் ஆனப்ப மோட்டார் நின்னிடுச்சு!...நான் எங்க கைலாஷ்தான் தொட்டி நிறைஞ்சிடுச்சுன்னு மோட்டாரை ஆஃப் பண்ணிட்டான் போலிருக்கு!ன்னு