தொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 21 - முகில் தினகரன்
காலை பதினோரு மணியிருக்கும்,
சுரேஷ் பிசினஸ் விஷயமாக வெளியூர் சென்றிருக்க அலுவலகத்தில் அர்ச்சனா மட்டுமே தனியாக இருந்தாள்.
“வணக்கம்மா!”
கரகரத்த குரல், வெகு அருகாமையில் கேட்க, நிமிர்ந்து பார்த்தாள்.
ஆறரை அடி உயரத்தில், ஆஜானுபாகுவாய் நின்று கொண்டிருந்த அந்த கறுத்த மனிதனின் கழுத்தில் கெட்டியான தங்கச் சங்கிலி, அவன் சட்டையின் மேல் பட்டனைப் போடாதிருந்த காரணத்தால் வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.
நெற்றியைச் சுருக்கிக் கொண்டு அவனை ஏற, இறங்கப் பார்த்தாள் அர்ச்சனா.
அவனுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த மற்ற இருவரும், அவனைப் போலவே தடி...தடியாய் இருந்தனர்.
“யார் நீங்க?...உங்களுக்கு என்ன வேணும்?” கண்டிப்பான குரலில் கேட்டாள் அர்ச்சனா. அவர்களுடைய புறத் தோற்றத்திலேயே அவர்கள் மூன்றாம் தர மனிதர்கள் என்பதைப் புரிந்து கொண்ட அர்ச்சனா அவர்களை அமரக் கூட சொல்லவில்லை.
ஆனால், அதைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாத அந்தக் கறுத்த மனிதன் தானே சேரை இழுத்துப் போட்டுக் கொண்டு அர்ச்சனாவின் எதிரில் அமர்ந்தான்.
“த பாரும்மா...எனக்கு சுத்தி வளைச்சுப் பேசவெல்லாம் தெரியாது!...அதனால நேரடியாவே விஷயத்துக்கு வந்துடறேன்!...நீ இந்தக் கம்பெனில சம்பளத்துக்குத்தானே வேலை பார்க்கறே?”
அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்த அர்ச்சனா, “ஆமாம்...அதை எதுக்கு நீ கேட்கறே?”
“எவ்வளவு சம்பளம் குடுக்கறான்...அந்த நொண்டிக்காலன் உனக்கு”
சுரேஷை அவன் அவ்வாறு சொன்னது அர்ச்சனாவிற்கு வெகுவாய்க் கோபத்தை மூட்டி விட, “யோவ்!...எந்திரிய்யா மேலே!...எங்க வந்து வாருகிட்ட...யாரைப் பத்திக் கேவலமா பேசறே?...கெட் அவுட்!” கத்தினாள்.
“ஹா...ஹா...ஹா....பாப்பா கோவத்திலேயும் ரொம்ப அழகாவே இருக்காங்க...இல்லையாடா?” என்று அவன் திரும்பி தனக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தவனிடம் கேட்க,
அவனும் அசிங்கமாய்ச் சிரித்து, “ஆமாம்...ஆமாம்!” என்றான்.
”அம்மா...நீ எவ்வளவு சம்பளம் வாங்கறே?ன்னு தெரியாம நான் உன்னைக் கேட்கலை!...தெரியும்!...நல்லாவே தெரியும்!...இருந்தாலும் உன் வாயால வரவழைக்கத்தான் கேட்டேன்!...சொல்லு...எவ்வளவு?”
“ம்ம்ம்...“இருபதாயிரம்”...போதுமா?...எந்திரிச்சுக் கிளம்பு மொதல்ல!”