தொடர்கதை - சிரிக்கும் ரங்கோலி - 03 - யாஷ்
“ஆதி?”
தம்பியிடம் இருந்து பதில் வராமல் போகவும் அறையில் இருந்த ஸ்விட்சை தட்டி விளக்கை உயிர்பெற செய்தாள் சான்வி.
ஆதித்யா சுருண்டு படுத்துக் கிடந்தான்.
“ஆதி? உடம்பு சரியில்லையா? என்ன ஆச்சு?”
சான்வி தம்பியின் நெற்றி மீது கை வைத்து சோதனை செய்தாள்.
ஆதித்யா அவளின் கையை விலக்கி எழுந்து அமர்ந்தான்.
“முழிச்சு தான் இருக்கீயா? ஏன் பதில் சொல்லலை? ரொம்ப நேரமா உன் மொபைல்ல கூப்பிடுறேன். நீ எடுக்கலை. உன் பிரென்ட் காஷ்யாப் கூப்பிட்டேன். அவன் நீ வீட்டுக்கு போயிட்டேன்னு சொன்னான்?”
ஆதித்யா ஒன்றும் சொல்லாமல் சுவரை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
“என் மேல கோபமா இருக்கீயா என்ன? நானா என்ன செய்தேன்? சரி, அது அப்புறம். இங்கே பாரு, உனக்காக என்ன வாங்கிட்டு வந்தேன்னு. இது அடிடாஸ் ஜேக். நியூயார்க்ல குளிரா இருக்கும், உனக்காக வாங்கினேன். என் பிரென்ட் ஒரு கடை சொன்னா, அங்கே எல்லா ப்ராண்ட்ஸும் டிஸ்கவுன்ட் கொடுத்து ஹோல்சேலா விற்குறாங்க. உனக்கு கலர் பிடிச்சிருக்கா?”
ஆதித்யா சான்வி வாங்கி வந்ததை பார்க்காமல் அவளை பாவமாக பார்த்தான்.
“எதுக்கு சான்வி இதெல்லாம் வாங்குற? ஏற்கனவே நீ வாங்கினதே வீணா போச்சு, இன்னும் எதுக்கு?”