தொடர்கதை - சிரிக்கும் ரங்கோலி - 07 - யாஷ்
“நான் அப்படி எதையும் தப்பா எடுத்துக்க மாட்டேன் அக்கா. கவலையே படாதீங்க! ஆதித்யா கூட பேச கூப்பிடீங்களா? நான் அங்கே இருந்து கிளம்பிட்டேன். பெரியப்பா வீட்டுக்கு போயிட்டு இருக்கேன். இதோ, இவன் என் பெரியப்பா மகன், பேரு விவேக்,” என தொடர்ந்து மூச்சு விடாது பேசிக் கொண்டே போனின் கேமராவை விவேக் பக்கம் திருப்பினாள் அக்ஷரா.
“ஹேய் லூஸு, லூஸு, போனை திருப்பு!” என விவேக் பல்லைக் கடித்துக் கொண்டே சொன்ன வேளையில் போன் வழியாக அவனின் கண்களும் சான்வியின் கண்களும் நேரே சந்தித்துக் கொண்டது.
மின்சாரம் பாய்ந்தது போன்ற உணர்வு ஒன்று விவேக்கிற்கு ஏற்பட்டது.
ஒரே ஒரு வினாடி என்றாலும் சான்வியின் எளிமையான, நேர்த்தியான அழகு அவனின் மனதை மீண்டும் வசியப் படுத்தியது.
விவேக் கோபப் பட்டதும் அக்ஷரா போனை திருப்பி விட்டாள்.
அதற்கு பின்பும் அக்ஷரா தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தாள். விவேக்கிற்கு அதை கேட்க ஆர்வம் தோன்றவில்லை. ஆனால் போனின் மறுப்பக்கம் பேசிக் கொண்டிருந்தவளை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது.
முன்பே ஒருத் தடவை எட்டி பார்த்து விட்டான். திரும்பவும் பார்ப்பது சரியாக இருக்காது. எனவே மனதை அடக்கி காரை ஓட்ட முயன்றான்.
தொடர்ந்து பத்து நிமிடங்கள் அக்ஷ்ராவின் ரம்பத்தை கேட்ட மறுப்பக்கம் இருப்பவள், கடைசியாக, “அடுத்து கிளாஸ் டைம் ஆச்சும்மா. இன்னொரு நாள் பேசலாம்,” என சொல்லி அழைப்பை துண்டித்தாள்.
“அவங்க யாரு தெரியுமா விவேக்? சான்வி. என் டீம்ல இருக்க ஆதித்யாவோட அக்கா,” என விவேக் கேட்காமலே அவன் விரும்பும் தகவலை சொன்னாள் அக்ஷரா.