தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 06 - பிந்து வினோத்
06. என்னை மறந்தேன், என்னை மறந்தேன்... நெஞ்சம் முழுதும் உந்தன் நினைவே...
பாரதி அன்று மாலையில் பவி வீட்டிற்கு சென்றாள். அங்கே நித்திலாவிடம் சிறிது நேரம் விளையாடி விட்டு, ரமேஷுடன் அரட்டை அடித்தாள். கமலா சுட சுட அவளுக்கு பிடித்த பக்கோடாவை கொடுக்கவும், அதை சாப்பிட்டுக் கொண்டே பவித்ராவிடம் அன்று காலை விவேக்கிடம் பேசிய விஷயத்தை சொன்னாள் பாரதி. விவேக் திருமணம் பற்றி சொன்னது தொடங்கி அனைத்தையும் ஒப்பித்தாள். மதுவை பற்றி சொல்லும் போது, சரவணின் பெயர் எல்லாம் சொல்லாது பொதுவாக ரொம்பவே மேலோட்டமாக சொன்னாள். பாரதி சொன்னதைக் கேட்டு ஆச்சர்யப் பட்ட பவித்ரா,
"விவேக் கல்யாணம் லெவலுக்கு பேசினாரா!!!! ஓஹோ, அது தான் பாரு மேடம் இன்னைக்கு ஒரே சந்தோஷமா இருப்பதன் ரகசியம்???" என்றாள்.
"ஹேய் பவி... இந்த மாதிரி எல்லாம் என்கிட்டே பேசாதே... எனக்கு பிடிக்காதுன்னு உனக்கு தெரியும் தானே? ஏதோ ஃபிரெண்ட் ஆச்சேன்னு எல்லாத்தையும் உன் கிட்ட சொன்னேன்..." என்றாள் பாரதி கடுப்புடன்!
பாரதியின் ‘ரியாக்ஷன்’ எல்லாம் பவித்ராவை அசைக்கவில்லை!
"ரொம்ப நன்றி பாரு... ஆனாலும் நீ ஒரு லூசு... இவ்வளவு பெரிய ஆளு விரும்பி வந்து கேட்கிறார், சரின்னு தலை ஆட்டுவீயா... அதை விட்டுட்டு உட்கார்ந்து கதை சொல்ற..."
"நீ சொல்றது தப்பு பவி... பணத்துக்காக ஒருத்தன் ஒருத்தியை கல்யாணம் செய்துக்குறது தப்புன்னா, தங்கைக்காக கல்யாணம் செய்துக் கொள்வது மட்டும் சரியா? கல்யாணம் என்பது ரெண்டு பேர் மனம் சம்பந்தப் பட்ட விஷயம்..."
"நீ சொல்வது ரொம்பவே சரி, பாரு... உனக்குப் பிடித்தது போல் யாராவது கிடைத்து, நீயும் சீக்கிரமே கல்யாணம் செஞ்சுக்கிட்டா எங்களுக்கு எல்லாம் ரொம்ப சந்தோஷமா இருக்கும்... உங்க அண்ணன் வேற அப்பப்போ என்கிட்டே இதையே தான் சொல்றார்..."
"ம்ம்ம்ம்ம்ம்ம்......" என்று முணுமுணுத்த பாரதியின் கண்முன் விவேக்கின் புன்னகை சிந்தும் வசீகர முகம் வந்துப் போனது. அன்றுக் காலை, தன்னை மறந்து பேசும் நிலையில் அவன்