“அதுவும் சரி தான். தேன் போல ஒருத்தரைப் பார்க்குறது ரொம்ப அபூர்வம்,” என சக்தியும் அவள் சொன்னதை ஆமோதித்தாள்.
சாப்பிடத் தொடங்கிய சக்தி, அதன் சுவையில் ஆழ்ந்தவளாய் மும்முரமாக சாப்பிடுவதை தொடர்ந்தாள்.
குழந்தைப் போல அவள் ஆர்வத்துடன் சாப்பிடுவதை எதிரில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள் சத்யா.
“நீங்க ஏன் கல்யாணம் செய்துக்கலை சக்தி?”
“ப்ச். இது வரைக்கும் அதைப் பத்தி யோசிக்கனும்னே தோணலை”
“சரி, இனிமேல் யோசிங்க. நான் இல்லைனாலும் உங்களுக்கே உங்களுக்கா இப்படி சமைச்சு கொடுக்க ஒரு ஆளு வேணும்ல?”
சத்யா சொன்னதை புரிந்துக் கொள்ள ஒரு எக்ஸ்ட்ரா வினாடி எடுத்துக் கொண்ட சக்தி, வாய் விட்டு சிரித்தாள்.
சிரிக்கும் போது அவள் முகம் மென்மையாகி தனி அழகுடன் இருப்பதை ஆச்சர்யத்துடன் பார்த்தாள் சத்யா.
சக்தி சாப்பிட்டு முடிக்கும் வரை அமைதியாக இருந்த சத்யா, அவள் சாப்பிட்டு முடித்த உடன், தன் கேள்விகளை தொடர்ந்தாள்.
“இந்த ஊருல என்ன செய்றதா ப்ளான் வச்சிருக்கீங்க சக்தி?”
“ப்ளான்ன்னு பெருசா எதுவும் யோசிக்கலை. இனிமேல் தான் யோசிக்கனும்.”