“என் பேர் அபினவ். என்னை நீங்க சார்ன்னு எல்லாம் கூப்பிட வேண்டாம். அபினவ்ன்னே கூப்பிடலாம். ஈவ்னிங் நானே ஸ்கூட்டியை எடுத்துட்டு வந்து தரேன்!”
டூத் பேஸ்ட் அட்வர்டைஸ்மென்ட்டிற்கு போஸ் கொடுப்பவனாக பற்கள் தெரிய சிரித்து சொல்லிவிட்டு, ஆட்டோ டிரைவரை கிளம்பச் சொன்னான் அபினவ்.
அபினவின் அந்த சிரிப்பு அவனை விட்டு தூரமாக வந்த பின்பும் அஹல்யாவின் முகத்திலும் புன்னகையை வரவைத்திருந்தது.
அப்போது மட்டும் அல்லாமல் அன்று ஸ்கூலில் எப்போதும் போல கண்டிப்பான டீச்சராக நடந்துக் கொண்டாலும், திடீர் திடீர் என்று அவள் கண் முன் ஸ்லோ மோஷனில் அபினவ் அந்த சிரிப்புடன் வந்துப் போனான்!
மாலையில் மணி நான்கை தாண்டியதுமே அவளையும் அறியாமல் அவ்வப் போது வீட்டில் இருந்த கண்ணாடியைப் பார்த்து தலை முடியை சரி செய்துக் கொண்டாள் அஹல்யா.
குடும்பம் என்ற பாதுகாப்பு வட்டத்தை தாண்டி அவள் பேசி பழகிய ஆண்கள் எல்லோரும் உதவுகிறேன் பேர்வழி என்று ஆரம்பித்து அவளை காயப்படுத்தி தான் சென்றிருக்கிறார்கள். அபினவ் அவர்களைப் போல இல்லை என்று அவளின் உள்ளுணர்வு சொன்னாலும் பழைய காயங்கள் அவளை எச்சரித்துக் கொண்டே இருந்தன.
இதை எல்லாம் தாண்டி ஆர்வத்துடன் அபினவின் வருகையை அவளின் மனம் எதிர்பார்த்தது.
ஆறு மணி போல காலிங் பெல் ஒலிக்க, அருண், சீசர் கூடவே அஹல்யாவும் ஆர்வத்துடன் சென்றாள்.
க்ரில் கதவின் வழியே அபினவ் கேட் அருகே நிற்பது தெரிந்தது. காலையில் பார்த்தது போலவே மென்மையான உணர்வு பொங்கும் முகத்துடன் கையில் இருந்த ஸ்கூட்டி சாவியை காண்பித்தான் அவன்.