தொடர்கதை - பூவா? தலையா? - 05 - சசிரேகா
வீடு திரும்பிய மாதவியோ அங்கிருந்த கண்ணகியைக் கண்டதும் நேராக அவளிடம் சென்று கைகூப்பி பாவமாக முகத்தை வைத்துக் கொள்ள அதைக்கண்ட கண்ணகியோ
”என்னாச்சி தாளாளர் உன்னை ரொம்ப தாளிச்சிட்டார் போல இருக்கே”
என சொல்ல அவளோ
”ஆமாம்டி என்னடி செய்ற காலேஜ்ல, ஒழுங்கா வேலைக்கு போனோமா வந்தோமான்னு இருக்க மாட்டியா நீ, தினமும் ஏதாவது பிரச்சனை செய்துக்கிட்டே இருப்பியாக்கும்”
”நான் என்ன செய்றது, அந்த காலேஜ் நல்லபடியா இருந்திருந்தா பரவாயில்லை சரி ஓரளவுக்குன்னா கூட பார்த்துக்கலாம், சுத்தமா ஒழுக்கமில்லாம இருந்தா நான் என்ன செய்றது”
”என்னவோடி நீ சொன்ன திட்டத்துக்கு நான் காலையில உன்கிட்ட வேணாம் தப்புன்னு சொன்னேன் அதே திட்டத்தை அந்த கோவலனும் சொல்றாப்ல”
”அதுக்கு நீ என்ன சொன்ன முதலாளிங்கறதால அவர் சொன்னதுக்கெல்லாம் சரி சரின்னு தலையாட்டினியா“
”சே சே எனக்கு அப்படியெல்லாம் காக்கா பிடிக்கனும்னு அவசியம் இல்லை, அவர் சொன்ன திட்டத்தை தப்புன்னு சொல்லி அதுக்கான விளக்கமும் சொன்ன பின்னாடிதான் அமைதியானாரு”
”நானும் விளக்கம் சொல்லியிருப்பேன் ஆனா அதை பொறுமையா கேட்க அவரால முடியாதே”
”உன்னால நான் அங்க மாட்டிக்கிட்டு அவஸ்தைபடறேன்”
”ஆமா ஏன் இவ்ளோ லேட்டா வர்ற”