தொடர்கதை - இன்று நீ நாளை நான் - 13 - சசிரேகா
சில நாட்கள் ஓடிய நிலையில் ஒரு மாதம் முடிந்து அடுத்த மாதம் ஆரம்பித்த நாள் காலையிலேயே காவேரி கொம்பனை அழைத்தாள்
”கொம்பா கொம்பா” என அழைக்க அவனோ சமையல் செய்துக் கொண்டிருந்தான், இப்போது அவனே தனியாக சமைக்கலானான், அப்படியே அவன் தாயின் கைமனம் வந்துவிட்டது, ரசனையுடன் சமையலை செய்துக் கொண்டிருந்த நேரம் காவேரியின் அழைப்பு ஆசிட் பட்டது போல எரிந்தது அவனுக்கு
”இவள் ஒருத்தி பசி தாங்கறதில்லை சே எப்படிதான் இவளை வைச்சி வாழப்போறேனோ” என புலம்ப
”கொம்பா“ என உரக்க அழைத்தாள்
”இதோ வரேன்” என அலுப்பாகச் சொல்லிவிட்டு செய்யும் சமையலை பத்திரமாக பார்த்து எடுத்து வைத்துவிட்டு அவளை தேடிச் சென்றான்.
அக்மார்க் சமையல்காரன் போலவே வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு சட்டையணியாமல் பனியனுடன் தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு அவளின் முன் வந்து நின்றான், அவனை அப்படி பார்த்ததும் முகத்தை சுளித்தாள் காவேரி
”எத்தனை முறை சொல்றேன் இப்படி வந்து நிக்காதன்னு, ஏற்கனவே நீ என்ன பெரிய பேரழகன்னு நினைப்பா, ஏதோ பார்க்கற மாதிரியிருப்ப, இப்ப அச்சு அசல் சமையல்காரன் போலவே இருக்க”
”நீ சொன்னாலும் சொல்லலைன்னாலும் இந்த வீட்ல நான் சமையல்காரன்தானே, எதுக்கு என்னை கூப்பிட்ட விசயத்தை சொல்லு, அடுப்படியில ஆயிரம் வேலையிருக்கு”
”என்னத்த சமைக்கறியோ எப்ப பாரு அடுப்படியே கதியேன்னு இருக்க”
”என்ன செய்றதும்மா என் வேலை அப்படி”