தொடர்கதை - சின்ன மருமகள் - 07 - சசிரேகா
மறுநாள் காலை பொழுது விடிந்ததும் ஜானகி கடிகாரத்தைப் பார்த்தாள், மணி 7 என இருந்தது
”சே ஏழுதான் ஆச்சா 9மணியாச்சின்னு பார்த்தோமே, ப்ச் தூங்குவோம் எப்பவும் போல 9 மணிக்கு எழுவோம்” என சொல்லிக் கொண்டே உறங்கினாள்.
அந்நேரம் அவளின் அறைக்கதவு தட்டும் ஓசை கேட்கவும் எரிச்சலானாள்
”ப்ச் யார் இந்த நேரத்தில, சே தூக்கத்தை கெடுக்கறாங்களே, அத்தையா சே சே இருக்காது அவங்க என்னிக்கு நம்மளை எழுப்பியிருப்பாங்க, அப்ப இது யாரு வேங்கையனோ அவன் நம்மளை தேடமாட்டானே, அப்ப யாராயிருக்கும்” என நினைக்க வெளியில் இருந்து பரிமளாவின் குரல் உக்கிரமாக கேட்டது
”ஏன்டி ஜானகி, உள்ள என்னதான்டி செய்ற, விடிஞ்சி மணி ஏழாகுது இன்னுமா உனக்கு விடியலை, சூரியன் உதிக்கறதுக்கு முன்னாடியே குளிச்சி முடிச்சிருக்கனும், இங்க நீ ஒய்யாரமா தூங்கறியா எழுடி” என கத்த ஜானகிக்கு ஒரு நொடி உடல் சிலிர்த்துவிட்டது அய்யோ என அலறிக் கொண்டே எழுந்து வந்து அறைக்கதவை திறந்தாள்.
பரிமளா உள்ளே நுழைந்து
”இப்பதான் எழறதா”
”9மணிக்கு எழுந்து பழக்கம் அத்தை“
”அதெல்லாம் உன் வீட்ல வைச்சிக்க”
”இல்லை இங்கயும் அப்படித்தான்”
”ஆனா எங்க வீட்ல அப்படிக் கிடையாது சூரியன் உதிக்கறதுக்குள்ள குளிச்சிருக்கனும் புரியுதா”
”சரிங்கத்தை”