தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 01 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
நிலாவிற்கு சட்டென விழிப்பு வந்தது! கண்களை திறந்துப் பார்த்தாள். இன்னமும் முழுவதுமாக விடியாததால் இருட்டாக இருந்தது. அதற்கு மேல் படுத்திருக்க விரும்பாமல் எழுந்து அந்த சின்ன அறையின் ஜன்னலோரத்தில் இருந்த சிறிய அலாரம் க்ளாக்கில் நேரம் பார்த்தாள்.
நாலு மணி!
அதே அறையில் தூங்கிக் கொண்டிருந்த ராஜம்மாள் விழிக்காத வண்ணம் அமைதியாக அந்த அறையை விட்டு வெளியே வந்தாள் நிலா.
இன்றும் சரியாக அதே நேரத்தில் விழிப்பு வந்து விட்டது!
யோசனையுடனே பல் துலக்கி விட்டு, அன்றைய மெனு என்று மிருதுளா நோட் புக்கில் எழுதி வைத்திருப்பதை பார்த்து விட்டு வேலையை தொடங்கினாள்.
அது ஒரு சிறிய உணவு விடுதி. ஆனால் அந்த சிறிய ஊருக்கு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலாக திகழ்ந்தது.
மலையின் மீது அமைந்திருப்பதால் அருகே இருக்கும் மற்ற கிராமங்களை விட்டு விலகி தனியே நின்றது வேரூர். அருகே இருக்கும் மற்ற சுற்றுலா தளங்களை பார்த்து விட்டு வேரூருக்கு வருகை தருபவர்களுக்கு வரமாக இருப்பது அந்த ‘வெற்றி பவன்’.
மெல்ல மெல்ல சமையலறைக்குள்ளும் வெளிச்சம் படரத் தொடங்கியது. தேங்காய் துருவிக் கொண்டிருந்த நிலா, ஜன்னல் வழியே தெரிந்த வானத்தை எட்டிப் பார்த்தாள். சூரியன் வரப் போகும் அறிகுறியாக வானம் வண்ணக் கோலம் கொண்டிருந்தது.
சூரியன் வந்துவிட்டான். புதிய நாள் துவங்கப் போகிறது!
அவனுக்கு ஒவ்வொரு நாளும் புதிது தான். இது போல் மனிதர்களாலும் இருக்க முடியுமா? நேற்றைய வெற்றிகள், தோல்விகள், வருத்தங்கள், கவலைகள், மகிழ்ச்சிகள் எல்லாவற்றையும் மறந்து விட்டு இன்றைய நாளை மட்டுமே நினைத்து புத்தம் புதிதாக வாழ முடியுமா?