தொடர்கதை - சின்ன மருமகள் - 10 - சசிரேகா
திருச்சி
வீரசிங்கமும் மூர்த்தியும் ஒரு முடிவுடன் திருச்சியை சென்றடைந்தார்கள், செல்லும் வழியெங்கும் யாரும் யாரிடமும் பேசவில்லை, மூர்த்திக்கோ வீரசிங்கம் என்ன பேசுவார் எப்படி பேசி மற்றவர்களை தன் பேச்சுக்கு அடிபணிய வைப்பார் என நன்றாக தெரியும் என்பதால் அவன் புது புது யுக்திகளை சிந்திக்கலானான்
தானும் மஹதியின் பெற்றோரின் மனதில் இடம்பிடிப்பது போல் பேசிவிடவேண்டும் என்பதில் தெளிவாக இருந்தான், பயணத்தின் போதுகூட அவனால் உறங்க இயலவில்லை படபடப்புடனும் என்ன நடக்குமோ ஏது நடக்குமோ வீரசிங்கம் ஏதாவது பிரச்சனை செய்தால் அதை எப்படி சரியாக்குவது என ஏகப்பட்ட சிந்தனையில் வசப்பட்டு பைத்தியக்காரன் போல தனக்குத்தானே பினாத்திக் கொண்டிருக்க வீரசிங்கமோ நிம்மதியாக சீட்டில் சாய்ந்தபடி உறங்கிக் கொண்டிருந்தார்.
அவருக்கு எந்த பதட்டமும் இல்லை தனியாக சென்றிருந்தால் கூட சற்று பதற்றமாக இருந்திருப்பாரோ என்னவோ மூர்த்தி வரவும் அவருக்கு யானை பலம் வந்துவிட்டது, எப்படியிருந்தாலும் மூர்த்தி சொதப்புவான் அவனை பேசவிட்டு வேடிக்கை பார்த்து கடைசியில் நாம் பேசி மஹதியின் பெற்றோரை தன் பக்கம் இழுக்கலாம் என நினைத்தவர் அதற்காக எந்த யுக்தியை பற்றியும் எந்த திட்டத்தைப் பற்றியும் சிந்திக்காமல் நடப்பது நடக்கட்டும் நடக்கும் போது பார்த்துக் கொள்ளலாம் என நினைத்து நிம்மதியாக உறங்கினார்.
அவரின் உறக்கத்தைக்கண்டு மூர்த்திக்கு கோபமும் ஆச்சர்யமும் ஏற்பட்டது, எப்படி இவரால் மட்டும் நிம்மதியாக உறங்க முடிகிறது, கண்டிப்பாக பெரிய திட்டத்துடன்தான், களத்தில் இறங்குவார் அவர் பேசுவதற்குள் நாம் முந்திக் கொள்ள வேண்டும், இல்லையென்றால் தனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும் என நினைத்தபடியே பயணித்தான்.
பேருந்தும் திருச்சியை வந்தடைந்தது, பஸ் நிலையம் வரவும் மூர்த்தி வீரசிங்கத்தை எழுப்பினான், அவரோ நன்றாக உறங்கியதில் கொட்டாவி விட்டபடியே அவனைப் பார்த்து
”என்னடா ஊர் வந்துடுச்சா”