எப்போதும் போல் அவர்களுக்கு முன்பே அங்கே ஆஜராகி இருந்த பரமசிவம் அவர்கள் இருவரையும் அவர்கள் பார்க்க வந்திருந்த ஆர்த்தியின் அப்பா குமாருக்கு அறிமுகம் செய்து வைத்தார். குமார் நட்புடன் விக்ராந்துடன் கை குலுக்கினார்.
“நைஸ் மீட்டிங் யூ மிஸ்டர் விக்ராந்த்... புரோக்கர் சொன்னதை விட ஹான்ட்சமா இருக்கீங்க!”
சரவணன் சிரிப்பை அடக்க முயல, விக்ராந்த் ஒரு சின்ன புன்சிரிப்புடன்,
“தேங்க் யூ... உங்களை பார்த்தா கல்யாண வயசில் ஒரு பொண்ணு இருக்குனு யாரும் சொல்ல மாட்டாங்க, யூ லுக் வெரி யங்,” என்றான்.
“பரவாயில்லையே, நல்லா பேச தெரியுதே உங்களுக்கு... என் ஒய்ஃப் ரொம்ப ஹெல்த் கான்ஷியன்ஸ் உள்ளவ... சாப்பாடு கட்டுப்பாடு மட்டும் இல்லாம, தினமும் ஒரு மணி நேரம் ஜிம் போகலைனா என்னை திட்டி தீர்த்திடுவா...”
குமார் சொல்லிக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கு பழச்சாறு எடுத்து வந்த அவரின் மனைவி வசந்தி,
“போதும், போதும் எப்போ எதை பேசுறதுனே இல்லை உங்களுக்கு,” என்றாள்.
“நீ சொன்னால் சரி தான் வசந்தி! நம்ம ஆர்த்தியை வர சொல்லு, இப்படி ரொம்ப நேரம் எல்லாம் அவர் பொறுமையை சோதிக்க கூடாது...”
“சரிங்க...” என்று சொல்லிவிட்டு அவசரமாக உள்ளே சென்றாள் வசந்தி.
ஒன்றிரண்டு நிமிடங்களில் சிறு அரவம் கேட்கவும் சற்றே ஆர்வத்துடன் அந்த பக்கம் பார்த்தான் விக்ராந்த்... பார்த்தவன் பிரமித்து போனான்...!!!
ஆர்த்தி கிட்டத்தட்ட ஐந்தரை அடி உயரத்தில் கொடி போல் இருந்தாள்...