தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 07 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
அதன் பின் தொடர்ந்த இரண்டு வார இறுதி நாட்களும் விக்ராந்திற்கும், சரவணனிற்கும் பெண் பார்க்கும் படலத்திலேயே சென்றது...
சுறுசுறுப்புடன் அந்த வேலையை தொடங்கியவர்களுக்கு, சீக்கிரமே அது அலுத்துப் போனது...
ஒவ்வொரு முறையும் விக்ராந்த் ஏதாவது குறை கண்டுப் பிடிக்க, சரவணனிற்கு பொறுமை பறந்து போனது...
“டேய், நீ எதையோ மனசில் வச்சுட்டு வர... என்ன விஷயம்னு சொல்லி தொலையேண்டா! இப்படி சும்மா சும்மா போய் பொண்ணு பார்க்குறது நல்லா இல்லை... இதே போல் வார வாரம் இப்படி சாப்பிட்டுட்டு இருந்தா, அப்புறம் ரூபிணி என்னை வேண்டாம்னு சொல்லிட போறா...!”
“ப்ச்... எனக்கும் தான்டா இந்த வேலை பிடிக்கலை... அந்த புரோக்கர் ஏதோ ரொம்ப மாடர்ன் ஃபேமிலி, பொண்ணு ஐஸ்வர்யா ராய் மாதிரி இருப்பா அப்படி இப்படின்னு ஹைப் கொடுத்திருக்கார்... இந்த ஒரு பொண்ணை மட்டும் பார்ப்போம், சரி வரலைன்னா எங்க அம்மா காலிலேயே போய் விழுந்திர வேண்டியது தான்,” என்றான் விக்கிராந்த்!
“விழுந்து?”
“இதெல்லாம் எனக்கு சரி வராது அம்மா... நீங்க பார்த்து ஷார்ட் லிஸ்ட் செய்து சொல்லுங்க ஒன்னா போய் பொண்ணு பார்த்து செலக்ட் செய்வோம்னு சொல்லிட போறேன்...”
“ரொம்ப நல்ல முடிவுடா நண்பா! இதெல்லாம் நமக்கு சரிபட்டே வராது,” என மகிழ்ச்சியுடன் சரவணனும் ஆமோதித்தான்!
🌼🌸❀✿🌷
ஒரு முடிவுடன் நண்பர்கள் இருவரும் பரமசிவம் தந்திருந்த லேட்டஸ்ட் முகவரியை தேடி கண்டுபிடித்தார்கள்! அது ஒரு பெரிய பங்களா! அந்த பங்களாவில் தெரிந்த பணக்காரக் களை விக்ராந்தை சற்றே தடுமாற வைத்தது...