தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 10 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
தியாகராஜன் தன் கவனம் முழுவதையும் சாலையில் வைத்திருப்பதுப் போல சாலை பக்கமே பார்வையை பதித்திருந்தான்!
கிருத்திகாவின் கண்கள் தானாக மீண்டும் கையிலிருந்த பேப்பரிடம் சென்றது!
A Petition For Divorce by Mutual Consent Us 13 (B) of The Hindu Marriage Act, 1955 எனத் தொடங்கி, அவளுக்கு சந்தேகம் வந்து விடக் கூடாது என்பதுப் போல கீழே, APPLICATION FOR DIVORCE BY HUSBAND AND WIFE U/S 13-B OF HMA 1955 என வாக்கியங்கள் தொடர்ந்தன...
விவாகரத்து பேப்பரா!!!!
அவளால் இன்னமும் நம்ப முடியவில்லை! ரொம்பவும் குழப்பமாக இருந்தது!
அவளுக்கும் ராஜுக்கும் நடுவே ஏதோ மனஸ்தாபம், சின்ன கோபம் என்று தான அவள் நினைத்திருந்தாள்! விவாகரத்துக்கு போகும் அளவிற்கு அவர்களுக்குள் பெரிய பிரச்சனையா??
ராஜ் இதுவரை அவளிடம் ஒரு வார்த்தையும் பேசாமல் இருந்ததற்கு இப்போது புது விதமான அர்த்தங்கள் அவள் மனதில் தோன்றியது...
ஆனால் அவனின் பார்வை??? அது சொன்ன பொருள்???
லேசான பதற்றத்துடன் கையிலிருந்த தாள்களை திருப்பினாள். தியாகராஜன் என்று கையெழுத்து இடப்பட்டிருந்த பக்கத்தில் திகைத்து நிறுத்தினாள்...
அருகே இருந்த கையெழுத்து இட வேண்டிய இடம் காலியாக இருந்தது...!
விவாகரத்திற்கு சம்மதித்து அவன் கையெழுத்து போட்டு இருக்கிறான்... அவள் இன்னமும் கையெழுத்து போடவில்லை...!!!
அப்படி என்றால்... இது தானா அவள் வீட்டை விட்டு வெளியேறிய காரணம்????