தொடர்கதை - பூவா? தலையா? - 12 - சசிரேகா
அடுத்த வந்த நாட்களில் கல்லூரி பழைய நிலைக்கு திரும்பியது, செமஸ்டர் எக்ஸாம்காக மாணவர்கள் தயாரானார்கள், அதற்காக ஆசிரியர்களும் பாடம் எடுத்தார்கள், கண்ணகியும் கோவலனும் கூட பாடுபட்டார்கள், அதன் விளைவு மீண்டும் அனைத்து மாணவர்களும் அரியர் வைக்காமல் தேர்ச்சி பெற்றார்கள், அதில் அவள் மனம் திருப்தியானது, பெரிதாக சாதித்துவிட்ட மகிழ்வில் அவளிடம் வந்தான் கோவலன்
”ரிசல்ட் பார்த்தியா கண்ணகி, ஆல் பாஸ் உன்னால மட்டுமில்லை என்னால கூட கல்லூரியை வழிநடத்தமுடியும்”
”ஆமாம் உண்மைதான் நான் இல்லைன்னாலும் நீங்களே கல்லூரியை பார்த்துப்பீங்க”
”கரெக்டா சொன்ன”
”உங்களுக்காக நான் ஒண்ணு வைச்சிருக்கேன்”
“என்னது அது”
”உங்களோட அயராத உழைப்புக்கான கிப்ட்” என சொல்லி அவனிடம் ஒரு கிப்ட் பாக்ஸை நீட்டினாள், அவனோ ஆர்வமாக அதை பிரித்துப் பார்த்து அதிர்ந்தான், சொத்து பத்திரங்கள் இருந்தது, எந்த சொத்துக்களை ஈஸ்வரமூர்த்தி கண்ணகிக்கு எழுதி தந்தாரோ இப்போது அதே சொத்துக்களை கோவலன் மீது எழுதியிருந்தாள், அந்த பத்திரங்களைக் கண்டதும் அவனுக்கு கோபமே எழுந்தது
”என்ன கண்ணகி இது, என்ன வேலை செய்து வைச்சிருக்க, தாத்தா உனக்கு தந்ததை நீ எனக்கு தர்ற”
”இந்த சொத்து யாருக்கு சொந்தமோ அவங்ககிட்டதானே வந்திருக்கு, எனக்கு இந்த சொத்து மேல நாட்டமில்லை, நான் பழையபடியே பள்ளி டீச்சரா வேலைக்கு போகலாம்னு முடிவு பண்ணிட்டேன்“