படாமல் இல்லை! மனதில் இருந்த கேள்விகளை மறந்து, மிருதுளாவை வெறுப்பேற்றும் ஆசை அவளுக்குள் எழுந்தது!
“ஓஹோ, இது தானா விஷயம்!!!” கிருத்திகாவின் பேச்சில் கேலி அலைமோதியது!
“எது தானா விஷயம்??” மிருதுளா புரியாமல் வினவினாள்!
“அண்ணாக்கு உங்களை மேக்கப் எல்லாம் இல்லாம பார்த்து தான் பழக்கம். இப்போ உங்களை இப்படி பார்த்து பயந்து போயிருந்திருப்பார்! அது தான் ராஜ் கூப்பிடவும், கிடைச்சுது சான்ஸ்ன்னு உடனே எஸ்கேப் ஆகி ஓடிப் போயிட்டார்...”
மற்ற குடும்பத்தினரிடம் இன்னமும் இப்போதும் இயல்பாக நாலு வார்த்தை கூட பேச முடியாமல் தவிப்பவள், சர்வ சாதாரணமாக ராஜ் என அழைப்பதையும், அவனைப் பற்றி பேசுவதையும் மனதினுள் ஆச்சர்யத்துடன் யோசித்த மிருதுளா, அதை பற்றி கிருத்திகாவிடம் சொல்லாமல் பொய்யாக அவளைப் பார்த்து முறைத்தாள்.
அவளின் அமைதியை கிருத்திகா கவனிக்காமல் இல்லை...
“என்ன எதுவோ யோசிக்குற மாதிரி இருக்கு? உங்க ப்ரெயின் வேலை செஞ்சா எனக்கும் ,என் அண்ணாக்கும் நல்லது இல்லையே??? அப்படி என்ன யோசனை???” இப்போதும் கேலியாக கேட்டாள் கிருத்திகா!
“ஆ வு’ன்னா ராஜ் ராஜ்ன்னு அவர் பேரை சொல்றீயே, உன்னை உன் மாமியார் திட்டினதுல தப்பே இல்லைன்னு யோசிக்குறேன்...”
மிருதுளாவின் கம்ப்ளெயின்டுக்கு பதில் சொல்லாமல், அவர்களின் பேச்சை அமைதியாக கேட்டுக் கொண்டுருந்த கீதாவை தன் உதவிக்கு அழைத்தாள் கிருத்திகா.
“பாருங்க அண்ணி என்னைப் பத்தி எப்படி சொல்றாங்கன்னு, நீங்களாவது எனக்கு சப்போர்ட் செய்ங்க...”