முடியாத ஒரு மெல்லிய இதம் பரவியது... பார்க்கிங்கில் ஃபீடிங் பாட்டிலுடன் அவன் வந்து நின்ற காட்சி மீண்டும் அவள் கண் முன் வந்துப் போனது...
“ப்ரியா, நீ இப்படியே ஒரு கூண்டுக்குள்ளே இருக்குறது நல்லதில்லை... இரண்டு வாரம் ராஜி கூட தங்கி இருந்து தான் பாரேன்...” வைஜெயந்தி மீண்டும் வற்புறுத்தினாள்!
மறுக்க வேண்டும் என்பது தான் ப்ரியாவிற்கு முதலில் தோன்றிய எண்ணம்... ஆனாலும் ஏதோ ஒன்று அவளை தடுத்தது...
அந்த ஒன்று என்ன என்று யோசிக்கவும் அவளுக்கு பயமாக இருந்தது...!
எனவே, அரை மனதுடன் தலையை ஆட்டினாள் ப்ரியா!
🌼🌸❀✿🌷
முன்பே ரிசர்வ் செய்திருந்த பஸ்ஸில் வைஜெயந்தியை ஏற்றி அனுப்பி விட்டு கணபதியின் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள் ப்ரியா. அவளின் மனதில் சோர்வும், அலுப்பும் அலை மோதியது. அவள் பிறந்து வளர்ந்த ஊருக்கு அவள் சென்று பல வருடங்கள் ஆகி விட்டிருந்தது... பழைய நினைவுகளினால் அவளின் மனம் இன்னும் அதிகமாக சோர்வடைந்தது...!
அவளுக்காக வாசல் கதவை திறந்துக் கொடுத்த ராஜமிடம், வைஜெயந்தியின் பஸ் நேரத்திற்கு கிளம்பியதை சொல்லி விட்டு அவள் தங்கி இருந்த அறைக்கு வந்தாள் ப்ரியா... அவளின் மனம் ஒரு நிலையில் இல்லாமல் இருக்கவும், தன்னை தானே நிதானப் படுத்திக் கொள்ள அவளின் அறையின் அருகே இருந்த பால்கனிக்கு சென்றாள். அங்கே தெரிந்த அந்தி நேர வானத்தை இலக்கில்லாமல் பார்த்தபடி அங்கேயே நின்றாள்...
“ப்ரியா!”
வர்ஷாவின் குரல் கேட்கவும், வர்ஷாவை திரும்பிப் பார்த்தாள்.
வர்ஷா கையில் டம்பளருடன் நின்றிருந்தாள்.