தொடர்கதை - திருமதி அகத்தியன் - 10 - சசிரேகா
இரண்டு நாள் கழித்து காவல் அதிகாரிகளை தேடிச் சென்றான் அகத்தியன். “வாங்க அகத்தியன், நாங்களே உங்களை பார்க்கனும்னு இருந்தோம் ஆனா நீங்களே எங்களை தேடி வந்துட்டீங்க” என காவல் அதிகாரி சொல்ல அதற்கு அகத்தியன்
”இரண்டு நாளாச்சி என்ன விசயம்னு தெரியலை, ஊருக்குள்ள ஒரே சலசலப்பு, கார்மெண்ட்ஸ்க்கு கூட ஆளுங்க சரியா வரலை, வேண்டாத வதந்திகளை கிளப்பி விட்டிருக்காங்க, இதனால எங்க வீட்டு மானம் மரியாதையே கப்பல் ஏறுது, தாத்தாவும் ரொம்ப கவலையா இருக்காரு, என்னதான் நடக்குது, சார் எப்படி அந்த எலும்பு கூடுங்க அங்க வந்தது, எனக்கு ஒண்ணுமே புரியலை, அதைப் பார்த்த நாள்ல இருந்து என்னால சரியா சாப்பிட முடியலை, சரியா தூங்க முடியலை, எந்த வேலையையும் செய்ய முடியலை, என் மனைவிதான் கார்மெண்ட்ஸ் பார்த்துக்கறா, பாவம் அவளும் எலும்புகூடுகளை பார்த்து பயந்துட்டா, ஊருக்குள்ள தலை காட்ட முடியலை, பார்க்கறவங்கள்லாம் என்னாச்சி ஏதாச்சின்னு ஆயிரம் கேள்வி கேட்டு சாகடிக்கறாங்க, எனக்கு தலையில ஏதோ பெரிய பாறாங்கல் வைச்சது போல இருக்கு தயவுசெய்து என்னதான் நடக்குதுன்னு சொல்லுங்களேன், ஊர் வாயை மூட முடியலை” என்றான் டென்சனாக.
அதைக்கேட்ட காவல் அதிகாரியோ
”எங்களுக்கே இந்த விசயம் பெரிய சவாலாதான் இருக்கு மிஸ்டர் அகத்தியன், இதை எப்படி உங்ககிட்ட சொல்றதுன்னு தெரியலை இருந்தாலும் சொல்லித்தானே ஆகனும்”
”சொல்லுங்க சார் தயங்காதீங்க, அது எப்படியிருந்தாலும் பரவாயில்லை நான் பயப்பட மாட்டேன் சொல்லுங்க“
”அந்த எலும்புகூடுகளை முடிஞ்சவரை நாங்க ஆராய்ந்து பார்த்ததில சில விசயங்கள் தெரிந்தது, ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி உங்க ஊர்ல சிலர் தொலைஞ்சிப் போயிட்டாங்க, அவங்க ஊரை விட்டு ஓடிப்போனதா பேசிக்கிட்டாங்க ஆனா, தொலைஞ்சிப் போனவங்க பயன்படுத்தின சில பொருட்கள் கத்தி அருவான்னு எலும்பு கூடுகளோட கிடைச்சிருக்கு அதை வைச்சிப் பார்க்கறப்ப தொலைஞ்சிப் போன ஆண்களோட எலும்பு கூடுகளா இருக்கும்னு தெரிய வருது”