தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 27 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
விக்கிராந்த் நம்பமுடியாமல் விழித்தான்! ஆர்த்தியின் வார்த்தைகள் அவனுள் புது விதமான பூகம்பத்தையே ஏற்படுத்தி இருந்தது.
ஆர்த்தி இப்படி அவனுக்கு ‘சாரி அன்ட் பை’ சொல்வாள் என அவன் எதிர்பார்த்திருக்கவே இல்லை!
பேச்சுக்கு என்ன சொன்னாலும், ஆர்த்தி அவனுக்கு சரியானவள் இல்லை என்று தான் அவனின் மனதில் நினைத்திருந்தான்! ஆனால் ஆர்த்தி, அவன் அவளுக்கு ஏற்றவன் இல்லை என்ற முடிவிற்கு வருவாள் என்ற எண்ணம் 1% கூட அவனுக்கு எழவே இல்லை! அதுவும் இப்படி ஆர்த்தியே அதை அவனிடம் நேரடியாக சொல்வாள் என்று அவன் துளியும் எதிர்பார்த்திருக்கவில்லை!
அதிர்ச்சியும், தர்மசங்கடமும் கலவையாக அவனுள் எழுந்தது! ஆர்த்தியின் வார்த்தைகள் அவனை தாக்கிய விதம் அவனுக்கு வலியை கொடுக்கவில்லை, மாறாக சங்கடத்தை கொடுத்தது!
ஆனால், மனதில் ஏற்பட்ட களேபரத்தை தாண்டி, அவனுக்குள் மெல்லிய மகிழ்ச்சியும் இழையோடியது! எப்படி ஆர்த்தியிடம் பேசுவது என்று வருத்தப் பட்டுக் கொண்டிருந்தவனுக்கு, அது இப்போது தேவை இல்லை என்பது தெரிந்ததால் ஏற்பட்ட சிறுப்பிள்ளைத்தனமான மகிழ்ச்சி!
எங்கே மனதில் இருக்கும் மகிழ்ச்சி வெளியில் தெரிந்து விடுமோ என்ற எண்ணத்தில், ஆர்த்தியை பார்க்காமல் தூரத்தில் தெரிந்த கலங்கரை விளக்கை பார்த்தான்!
அவன் வேறு திசையில் பார்ப்பதை தவறாக புரிந்துக் கொண்ட ஆர்த்தி,
“உங்களுக்கு இது எவ்வளவு வருத்தமா, சங்கடமா இருக்கும்ன்னு எனக்கு புரியுது விக்கி! ஆனால் பிரதாப் தான் எனக்கு சரியான துணைன்னு தோணுது. ஐ ஆம் சாரி... இது தப்பு தான்... உங்க கோபம் போற அளவுக்கு என்னை அறைஞ்சிடுங்க.... என்னால புரிஞ்சுக்க முடியும்,” என்றாள் வருத்தம் கலந்தக் குரலில்!