சிரித்தாள் கலா.
அப்போது தான் பொறியல் பாத்திரம் இருந்த அடுப்பில் தீ இல்லாததை கவனித்த இந்து அசடு வழிந்தப் போதும்,
"கீதா அக்கா செஞ்சுட்டு தானே இருந்தாங்க," என்றாள்.
"ஒருவேளை கேஸ் காலி ஆகி இருக்கும்! எல்லாம் சொன்ன கீதா அண்ணி உங்க கிட்ட அடுப்புல தீ இருக்கான்னு பார்க்க சொல்ல மறந்திருப்பாங்க," என்று சொல்லி மீண்டும் சிரித்தாள் கலா.
இந்துவும் அவளுடன் சேர்ந்து சிரித்தாள்! இது நடந்து சில நிமிடங்களுக்கு பின் கலாவிற்கு இந்துவை அப்படி கேலி செய்து சிரித்தது தவறோ என்ற எண்ணம் தோன்றியது. அதை மறைக்காமல் இந்துவிடம் சொல்லி மன்னிப்பும் கேட்டாள்.
கண்களை உருட்டிய இந்து, "ம்ம்ம்ம்ம்.... உன்னை எப்படி மன்னிக்குறது கலா??? நீ செஞ்சது பெரிய தப்பாச்சே..." என்றாள்!
"அண்ணி..."
"பின்ன, அண்ணின்னு கூப்பிடுவ, ஆனால் இது மாதிரி சின்ன விஷயத்துக்கு எல்லாம் ஃபீல் செய்வீயாக்கும்? சரியே இல்லையே..."
"அப்பாடியோ! ஒரு நிமிஷம் பயமுறுத்திட்டீங்க அண்ணி..."
"ஒரே ஒரு நிமிஷம் தானா??? தப்பா இருக்கே..." என சொல்லி இந்து மீண்டும் கண்களை உருட்டவும், கலா இப்போது சிரித்தாள்!
இது போல் எத்தனையோ சின்ன சின்ன சம்பவங்கள், சிரிப்புகள், பேச்சுக்கள்... பெண்கள் நால்வருக்கும் வீட்டில் நன்கு நேரம் போனது! அவ்வப் போது அவர்களின் புது பிஸ்னஸ் பற்றி பேச வரும் வீணா வரும் பொழுது கேட்கவே வேண்டாம்!