அனைவரின் முகத்திலும் அதிர்ச்சி நிலை கொண்டிருக்க, நடந்ததை நம்ப முடியாமல் தவித்திருக்க,
காவேரியின் கண்களிலோ நீர் அருவியென பெருக்கெடுத்துக்கொண்டிருந்தது…
பவித்ரா என்ன நடந்தது இங்கே என தனக்குத்தானே யோசித்துக்கொண்டிருந்தாள்…
“மதர்…” என்றபடி மகத் காவேரியின் தோளின் மேல் கை வைக்க, அவர் அதிர்ந்து விழித்தார்…
பின் புன்னகையுடன், “நான் செஞ்ச தப்பை நானே சரி பண்ணிட்டேன்… ராஜா… இனி நான் நிம்மதியா இருப்பேன்…” என சொல்ல, மகத் அவரின் கைகளைப் பிடித்துக்கொண்டான்…
அவனின் ஆறுதல் ஸ்பரிசம், அவருக்கு நடந்ததை உரைக்க, அவர் அவனின் கைகளில் முகம் புதைத்து அழ ஆரம்பித்தார்…
“என்ன மதர்… இப்படி… ஏன்…?”…
“எனக்கு வேற வழி தெரியலை ராஜா… என்னை மன்னிச்சிடு…” என அவர் மீண்டும் அழ ஆரம்பிக்க…
“மதர்… வேண்டாம்… ப்ளீஸ்… அழாதீங்க… நடந்ததை மாத்த முடியாது… குருமூர்த்தி சாரைப் பாருங்க மதர்… அவர்கிட்ட பேசுங்க…”
You might also like - Nanaikindrathu nathiyin karai... A fast paced romantic thriller story
அவன் சொன்னதைக் கேட்டவர், குருமூர்த்தியை பார்த்தார்…
நிலை குலைந்து தரையில் அமர்ந்தவரிடம் காவேரி சென்று,
“குரு…” என அழைக்க…
“கொன்னுட்டீங்களே… என்னை உயிரோட கொன்னுட்டீங்களே… எதுக்கு இப்படி செஞ்சீங்க?... ஏன்…” என அவர் கதற,
“நான் உன்னைக் காயப்படுத்தணும்னு அப்படி செய்யலை குரு…”
“அப்போ யாரைக் காயப்படுத்தணும்னு செஞ்சீங்க?...” என குருமூர்த்தி கேட்க, காவேரியிடத்தில் பதில் இல்லை…
“என்னை காயப்படுத்தினா என்ன?... என் பொண்ணை காயப்படுத்தினா என்ன?... என் பொண்ணு வேற நான் வேறயா?... எல்லாமே போச்சே…” என அவர் மீண்டும் கலங்க…
“இல்ல குரு… எதுவும் போகலை… நீ நினைக்குற மாதிரி….”
“இன்னும் என்ன போகணும்?... எல்லாமே போச்சே… இப்படி எல்லாம் செய்யத்தான் அன்னைக்கு உதவி செஞ்சீங்களா?... சொல்லுங்க… இதுக்குத்தான் அன்னைக்கு என் பொண்ணுக்கு வாழ்க்கை கொடுத்தீங்களா?...”
“நான் சொல்லுறதை புரிஞ்சிக்கோ… குரு…”
“இன்னும் என்ன புரியணும்… என் பொண்ணு சொன்னது அப்போ உண்மை தானா?... மகத்திற்கு வேற கல்யாணம் பண்ணி வைக்கணும்னு முடிவு பண்ணித்தான் இப்படி எல்லாம் செஞ்சீங்களா?... சொல்லுங்க…” என அவர் விசும்பலுடன் கேட்க
“அவளுக்கு சில விஷயங்கள் புரியணும்… அதுக்காகத்தான்…” என்றார் காவேரி…
“என்ன பெரிய விஷயம்?… பொல்லாத விஷயம்… அவளா மனசு வந்து மகத்தோட வாழலை… ஆனா, பிடிவாத்ததுக்காவது இன்னைக்கு அவரை விடமாட்டேன்னு சொல்லுறாளேன்னு நான் சந்தோஷப்பட்டேன்… ஆனா அதை இப்படி ஒருநொடியில இல்லாம செஞ்சிட்டீங்களே…”
“அந்த பிடிவாதம் அவ வாழ்க்கைக்கும் சரி, ராஜா வாழ்க்கைக்கும் சரி… நல்லது இல்ல… அதை நீ புரிஞ்சிக்கப் பாரு…”
“என்னத்த நான் புரிஞ்சிக்கணும்…. என் பொண்ணு மகத்தை இன்னைக்கு இல்லன்னாலும், என்னைக்காவது புரிஞ்சிப்பான்னு நினைச்சி மனக்கோட்டை கட்டிட்டிருந்தேனே… அதை இப்படி தூள் தூளாக்கிட்டீங்களே…”
“அவ இந்த ஜென்மம் இல்ல… எத்தனை ஜென்மம் எடுத்தாலும் புரிஞ்சிக்கிற ரகம் இல்லை… அது உனக்குத்தான் புரியலை… நிறைவேறாத ஆசையை நீ மனசுல நினைச்சி கோட்டை கட்டினா, அது உன் தப்பு… நடக்குறதை நினைக்கணும்… நடக்கவே நடக்காததை நீ கற்பனை பண்ணினா அது இப்படி வருத்தத்துல தான் முடியும்…”
“அதான் முடிஞ்சி போச்சே… இனி என்ன இருக்கு நடக்குறதுக்கு…”
“இருக்கு நிறைய இருக்கு…. இனியாச்சும் ராஜாவை வாழ விடு… அது போதும்…”
“செய்யுறதை எல்லாம் செஞ்சிட்டு இப்ப என்னை விட்டுக்கொடுக்க சொல்லுறீங்களா?...”
“உன்னை நான் விட்டு கொடுக்கவும் சொல்லலை… தியாகம் செய்யவும் சொல்லலை… நல்லது நடக்குறதுக்கு குறுக்க நிக்காதன்னு தான் சொல்லுறேன்…”
“என் ஒரே பொண்ணு… அவ வாழ்க்கையில நல்லது நடக்கணும்னு தானே அன்னைக்கு எல்லாமே முன்னாடி நின்னு செஞ்சீங்க… இன்னைக்கு இப்படி பேசுறீங்களே… உங்களுக்கு கொஞ்சம் கூட உறுத்தலையா?...”
“உறுத்தத்தான் செஞ்சது… இத்தனை நாள் என் ராஜாவை கன்யா வாழ்க்கையில இழுத்துவிட்டு வேடிக்கைப் பார்த்துட்டிருக்கேனேன்னு என மனசாட்சி உறுத்தத்தான் செஞ்சது… இன்னைக்கு தான் அது நிம்மதி அடைஞ்சிருக்கு…” என்றார் காவேரி ஒரு பெருமூச்சுடன்…
“நிம்மதி… அது எனக்கு கிடைக்க விடாம செஞ்சுட்டீங்கல்ல… சந்தோஷமா இருங்க… இனி…”
“இத்தனை நாள் அந்த நிம்மதியை உன் பொண்ணு தான் உனக்கு தர விடாம, நெருங்க விடாம செஞ்சிட்டிருந்தா… அது உனக்கு புரியவே புரியாதா?...”
“சும்மா நிறுத்துங்க… எனக்கு நிம்மதி சந்தோஷம் எல்லாமே என் பொண்ணு தான்… அவ என்னை நிம்மதி இல்லாம செஞ்சாலும் எனக்கு சந்தோஷமே… அதை நான் ரொம்ப மகிழ்ச்சியாவே ஏத்துப்பேன்…”
“நீ ஏத்துப்ப… ஏன்னா நீ அவளை பெத்தவன்… அதுக்காக ராஜாவும் ஏத்துக்கணும்னு என்ன இருக்கு?... அதே மாதிரி எங்களையும் அவ தரக்குறைவா பேசும்போது பார்த்துட்டு பேசாம அதை ஏத்துக்கணும்னு என்ன இருக்கு?... சொல்லு?...”
“நீங்க ஏத்துக்க தேவை இல்லை… ஆனா, மகத் அவளோட புருஷன்… அவர் ஏத்துக்கத்தான் வேணும்… அவர் ஏத்துக்கிட்டு தான் இருந்தார் இத்தனை நாள் எல்லாம் சகிச்சிக்கிட்டு…”
“இப்படி பேச உனக்கு கொஞ்சம் கூட வெட்கமா இல்லை… வீட்டுக்கு வந்த மாப்பிள்ளை அடங்கி போகணும்… ஆனா உன் பொண்ணு அடங்கி போகமாட்டா?... நீயும் அடங்கிப் போன்னு சொல்லமாட்ட… அப்படித்தான?...”
“நான் சொல்லத்தான செய்யுறேன்… ஆனா அவ கொஞ்சம் பிடிவாதக்காரி…”
“நீ தான அவளைப் பெத்தவன்… பெத்த மகளை உன்னால கண்டிக்க முடியலை… இதுல மத்தவங்க எல்லாரையும் பொறுத்து போக சொல்லுற?... உனக்கே இது நியாயமா படுதா?...”
“நீங்க இப்போ செஞ்ச காரியம் மட்டும் நியாயமா?...” என குருமூர்த்தி கண்களில் சினத்துடன் கேட்க
காவேரியோ, சில நிமிட மௌனத்திற்குப் பிறகு, “உன் இடத்துல இருந்து பார்த்தா நியாயம் இல்லாத மாதிரி உனக்கு தெரியும்… என் இடத்துல இருந்து பார்த்தா இதுதான் சரின்னு படும்…” என்றவர், “இனியாவது நல்லது நடக்கட்டும் எல்லாரோட வாழ்க்கையிலும்…” என்றபடி அங்கிருந்து அகன்று விட,
குருமூர்த்தி மகளைப் பார்த்தார்… அகங்காரமாய், ஆணவமாய், கோபமாய் பேசிய கன்யா அங்கு அது அத்தனையும் இழந்தவளாய் தரையில் கிடந்தாள் ஒரு பொம்மையாய்…
அப்போது குருமூர்த்தியின் அருகே வந்த மகத்தை பார்த்து அவர் கண்கலங்க…
“எழுந்திருங்க சார்….” என அவன் அவரை கைப்பிடித்து தூக்கிவிட,
“மகத்….” என்றபடி தலையில் அடித்துக்கொண்டவரை, “சார்… ப்ளீஸ்…” என்றபடி அவன் கன்யா இருக்குமிடத்திற்கு அழைத்து வந்தான்…
“கன்யா…” என்றபடி அவர் மகளின் அருகில் அமர்ந்து அவள் தலை மீது கை வைத்து வருட, அவள் விழிகளில் நீர் நிறைந்திருந்தது ரத்தமாய்…
“வாம்மா… போகலாம்….” என்றபடி மகளை கைத்தாங்கலாய் அழைத்துக்கொண்டு அவர் சில அடிகள் எடுத்து வைத்துவிட்டு திரும்பி பார்க்க…
மகத் கீழே குனிந்து இருந்தான்…
“வேண்டாம் மகத்… அதை எடுக்க வேண்டாம்… விடுங்க… இனி உங்க வாழ்க்கையில என் பொண்ணும் இல்ல… அவளை சம்பந்தமாக்கின அந்த பந்தமும் இல்ல… விடுங்க… அதை எடுக்காதீங்க…” என சொல்லிவிட்டு அவர் சென்றுவிட்டார் கன்யாவுடன்…
பவித்ரா காவேரியின் பின்னாடியே உள்ளே சென்றுவிட, அங்கே அப்போது நின்றிருந்த ருணதியின் பார்வை மகத்தின் மேலே நிலைத்தது...
அவனின் அருகில் சென்றவள், அவன் இன்னும் தரையையே வெறித்துப் பார்ப்பதையே பார்த்துவிட்டு,
குனிந்து தரையில் கிடந்த குருமூர்த்தி சொன்ன அந்த பந்தத்தை கையிலெடுத்தாள்…
கன்யா எதை மதிக்கவில்லையோ, எதை சுமையாக நினைத்தாளோ, எதை துருப்புச்சீட்டாக வைத்து அவனை மிரட்டுவேன் என்றாளோ அந்த பந்தம் இப்போது ருணதியின் கைகளில் தவழ்ந்தது…
ஆம்… எது இதுநாள் வரை மகத்தையும் கன்யாவையும் இணைத்து வைத்து சம்பந்தபடுத்தியதோ… அந்த பந்தமாகிய தாலியை ருணதி தனது கைகளில் வைத்துக்கொண்டு செய்வதறியாது பார்த்தாள்…
தொடரும்
{kunena_discuss:907}