'சரி...' என்று உதடுகள் சொன்ன போதும் அவன் கையை விடுவிக்க மனம் வரவில்லை அவர் விரல்களுக்கு. அதற்குள்
'ஹேய்... ரெட்டை வாலு... என் ஹேன்ட் பேக்கை எதுக்கு குடையறே???' குழந்தையின் கையில் இருந்த தனது கைப்பையை சட்டென பிடுங்கிக்கொண்டாள் அருந்ததி.
'அப்பா போட்டோ அதிலே இருக்கு...' சிணுங்கி அழ துவங்கியது அது. அம்மா வேறு வழியே இல்லாமல் அவன் கையை மெல்ல விடுவிக்க குழந்தையின் அருகில் வந்தான் ரிஷி
'அப்பா போட்டோவா???' என்றபடி அருந்ததியை பார்த்தான் ரிஷி 'என் போட்டோ ஏதாவது அதிலே வெச்சிருக்கியா. இருந்தா கொடுத்திடேன் அவ கிட்டே. காலையிலிருந்து அதையே சொல்லிட்டு இருக்கா அவ.'
'ம்ஹூம்... அதெல்லாம் எதுவும் இல்லை வசி...' கைப்பையை அவள் தன் நெஞ்சோடு வைத்துக்கொண்டாள் அருந்ததி ,இப்போது அந்த புகைப்படம் வெளியே வந்தால் நிலைமை என்னவாகுமாம்????
'அதிலே தான் இருக்கு நான் பார்த்தேன்..' அழுகை இன்னமும் அதிகம் ஆனது.
'அருந்ததி... கிளம்பற .. நேரத்திலே... குழந்தையை அழவிடாதே குடும்மா...' என்றபடி அவள் அருகில் வந்தான் ரிஷி.
'நிஜமா என்கிட்டே இல்லை..' பேக்கை இறுக்கிக்கொண்டாள் அவள். அம்மாவும் அப்பாவும் அவளை வினோதமாக பார்க்க தலையில் அடித்துக்கொண்டான் அவன். 'ஏன்டி படுத்துறே???"
அவள் பேசாமல் வேறு பக்கம் திரும்பி நின்றுக்கொள்ள குழந்தையின் அருகில் சென்றான் அவன். 'உனக்கு அப்பா போட்டோதானே வேணும் நான் தரேன் வா' என்றபடி தனது பர்சை துழாவி தனது அதிலிருந்த தனது பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை எடுத்து குழந்தையின் கையில் கொடுக்க கன்னங்களில் வழிந்திருந்த கண்ணீரின் ஊடே சின்னதாக ஒரு குளிர் சிரிப்பு அதன் இதழ்களில்.
நிம்மதி பெருமூச்சு அருந்ததியிடம். கண்களை சில நொடிகள் மூடித்திறந்தாள். இந்த புகைப்படத்தை சஞ்சாவிடம் காட்டி என்ன செய்வதென தீர்மானிக்க வேண்டும் என்றுதான் நினைத்தாள் அவள். இப்போதைக்கு இந்த ரகசியத்தை காப்பாற்றி விட்ட திருப்தி. ஒரு வாராக குழந்தையை சமாதான படுத்தி அப்பா அம்மாவிடம் விட்டு விட்டு இருவரும் கிளம்பினர்.
மருத்துவமனையில் மயங்கிக்கிடந்தார் ஜானகி. நேற்று ரிஷியை சந்தித்த பிறகு அவர் மனம் ஒரு நிலையில் இல்லை. தனது இரண்டு மகன்களையும், நடந்தவைகளையும் நினைத்து நினைத்து அழுது ஒரு கட்டத்தில் மயங்கி சரிந்திருந்தார் அவர்.
அதே மருத்துவமனைக்குள் இயக்குனருடன் உள்ளே நுழைந்தனர் மேகலாவும் அஸ்வத்தும். அவர் மருத்துவமனையில் அனுமதிக்க பட..
'ஒண்ணும் இருக்காது. ஜெனரல் வீக்னெஸா இருக்கும் என்பது தான் மருத்துவரின் முதல் கணிப்பாக இருந்தது. அவள் சில பரிசோதனைகளை பரிந்துரைத்து இருந்தார். அந்த வகையில் இப்போதைக்கு மேகலாவுக்கு கொஞ்சம் நிம்மதி பிறந்திருந்தது.
'என் கணவருக்கு ஒன்றும் இருக்காது' சொல்லிகொண்டார் அவர்.
இயக்குனரை அறையில் விட்டுவிட்டு இருவரும் அந்த அறையை விட்டு வெளியே வந்த நேரம், எதிர்ப்பட்டான் சஞ்சா. சில நொடி பார்வை உரசல்கள். யாருக்கு என்ன என்ற உள்ளுக்குள் கேள்விகள் எழுந்த போதும் எதுவும் பேசாமல் அவரவர் திசையில் நகர்ந்தனர்.
மேகலாவின் உள்ளே நிறையவே குழப்பம். 'யாருக்கு என்னவாயிற்று???' யோசித்து யோசித்து பார்த்து விட்டு சஞ்சா இப்போது வெளியே வந்த அந்த அறைக்குள்ளே கொஞ்சம் எட்டிப்பார்க்க அங்கே இருந்தார் ஜானகி.
'யாரது?? இது சஞ்சாவின் சொந்தமா???' தெரியவில்லை மேகலாவுக்கு. சில நிமிடங்கள் ஜானகியின் முகத்தை பார்த்துக்கொண்டே நின்றவர், அதன் பின் வெளியே வந்து அஸ்வத்துடன் இந்திரஜித் இருந்த அறைக்கு சென்று விட்டிருந்தார்.
சில நிமடங்கள் கடக்க அங்கே வந்து சேர்ந்திருந்தனர் ரிஷியும் அருந்ததியும். தனது செக்யூரிட்டி காரட்டுடன் சென்று அவர்கள் இருவரையும் அறைக்குள் அழைத்து வந்தான் சஞ்சா. இல்லை என்றால் தேவை இல்லாமல் கூட்டம் சேரும், எங்கிருந்தாவது ஒரு மைக் நீளும்.
அங்கே அந்த அறைக்குள்ளே மூச்சு காற்றுக்கு சிரமப்பட்டுக்கொண்டு கிடந்தார் ஜானகி. அவ்வப்போது உதடுகள் மட்டும் ரிஷியின் பெயரை உச்சரித்து உச்சரித்து அடங்கிக்கொண்டிருந்தது. ஒரு ஆழமான மூச்சை எடுத்தாள் அருந்ததி.
'நேத்து நைட் திடீர்ன்னு மயங்கிட்டாங்க. பிபி ரொம்ப ஹை ஆயிடுச்சுடா. ஹார்ட் அட்டாக் வர கூட சான்ஸ் இருந்தது. எப்படியோ இப்போ கொஞ்சம் இறங்கிடுச்சு...'
'ரி...ஷி...' உச்சரித்து ஓய்ந்தன அம்மாவின் உதடுகள். 'இது மட்டும் ஏன்னு தெரியலைடா....' என்றான் சஞ்சா.. பதில் பேசாமல் அவரையே பார்த்திருந்தான் ரிஷி. உள்ளுக்குள் ஏனென்றே தெரியாத ஒரு வலி. ரிஷியின் முகத்தையே பார்த்திருந்தாள் அருந்ததி. தனிச்சையாக அவன் கரம் ஜானகி அம்மாவின் தலைகோத தவறவில்லை.
'இவங்க நம்ம வீட்டிலே சமையல் வேலை செய்யறவங்கதான்டா. அம்மா கூட கேட்டாங்க இதுக்கெல்லாம் நீ ஏன்டா அலையறே? மத்த வேலைக்காரங்ககிட்டே சொன்னா பார்த்துக்க மாட்டாங்களான்னு?