27. நினைத்தாலே இனிக்கும்... - புவனேஸ்வரி
" அவள் வரவுக்காக காத்திருந்தேன் ..
அவள் பார்வைக்காக காத்திருந்தேன்..
அவள் புன்னகைக்காக காத்திருந்தேன்
அவள் காதலுக்காக காத்திருந்தேன் ..
இன்று அவளின்
வார்த்தைக்காக காத்திருக்கிறேன் " கவிதை என்ற பெயரில் உளறி கொண்டிருந்தான் கவீன் ..
" ஹும்கும் தல , இதுக்கு நீ நாசா மாதிரி காத்துட்டு இருக்கோம்ன்னு ஒரே வார்த்தையில் முடிச்சிருக்கலாம் " என்றான் அருண் ..
" அட நீ வேற ஏன்டா ?" என்று கவீன் நொந்து கொள்ளும்போதே அங்கு வந்து நின்றாள் ஜெனி ..
" ஜெலோ "
" என்னை அப்படி கூப்பிடாத நீ "
" .. "
"என்கூட வா "
" எங்க ஜெனி ?"
" சொன்னதான் வருவியா " என்பதை போல பார்த்து வைத்தாள் அவள் .. " இவ வேற எதுக்கு முட்டை கண்ணை உருட்டுறா தெரியலையே " லேசாய் அடிவயிறு கலங்கியது அவனுக்கு .. இருப்பினும் அதை காட்டிகொள்ளாமல்
" உங்கப்பாவோட உளவாலிங்க நம்ம சேர்த்து வெச்சு பார்த்தா வீண் பிரச்சனை ஆகிடும் ஜெனி .. அதான் யோசிக்கிறேன் " என்றான் கவீன் உண்மையாய் ..
" அப்படியா என்ன நடக்கும் கவீன் ?"
" உனக்கு தெரியாதா ?"
" நீ தீப்தியை அறைஞ்ச மாதிரி , எங்கப்பா என்னை அறைவார் அவ்வளவு தானே ?" என்றாள் ஜெனி.. " செத்தான்டா மாப்பிள்ளை " என்று செல்வம் முணுமுணுக்க ,
" மச்சி உங்க குடும்ப பிரச்சனையை தீர்த்துட்டு கூப்பிடுடா ..நாங்க வரோம் " என்று செல்வத்தை கூட்டிக்கொண்டு எஸ்கேப் ஆகினான் அருண் ..
" துரோகி , இப்படி மாட்டி விட்டுட்டு போறானுங்க! ஊர தெரிஞ்சுகிட்டேன் உலகம் புரிஞ்சுகிட்டேன் கண்மணி என் கண்மணி " மனசுக்குள் அவனுக்கு பாட்டெல்லாம் கேட்க தலையை உலுக்கி கொண்டான் கவீன் ..
" இப்போ வர போறியா இல்லையா நீ ?"
" ம்ம்ம் " என்றவன் , பார்த்திபன் கையில ஆடுபோல் சிக்கிய வைகைப்புயல் மாதிரி தன்னை கற்பனை செய்து கொண்டே அவளுடன் நடந்தான் ..
இருவரும் நடந்த வழியில் எதுவும் பேசிக்கொள்ளவில்லை .. கவீன் குழப்பத்தில் இருந்தான் .. இவளிடம் எப்படி தன்னிலை விளக்கம் அளிப்பது ? என்ன மனநிலையில் இருக்கிறாள் என்பதையே கணிக்க முடியவில்லை அவனால் .. உண்மையை புரிந்து கொள்ளும் பொறுமையில் அவள் இல்ல என்றால் தான் சொல்வதெல்லாம் பொய்யென்று ஆகிவிடாதா ? அதற்காக அவளிடம் சொல்லாமலும் இருக்க முடியாதே ! கால்கள் அவள் போன போக்கில் போய்கொண்டிருக்க ஆழ்ந்த சிந்தனையில் இருந்தவனை ஜெனியின் குரல் நடப்புக்கு கொண்டு வந்தது ..
" முண்டம் கண்ணை எங்க வெச்சு இருக்க நீ ? இந்நேரம் தடுக்கி விழுந்துருப்ப " என்றாள் அவள் .. அவள் கோபமாய் பேச, அவனுக்கோ அவளது அக்கறை மனதிற்கு இதத்தை தந்தது .. அப்போதுதான் அவர்கள் இருக்கும் இடத்தை கவனித்தான் ..
" நாம இப்போ எதுக்கு இங்க வந்துருக்கோம் "
" ஏன் ?"
" உங்க லேடிஸ் ஹாஸ்டல்ல நான் எப்படி ஜெனி வர முடியும் "
" இது பாரு கவீன் ஓவரா நடிக்காத .. இதுக்கு முன்னாடி நீ எங்களை பார்க்க வந்ததே இல்லையா ? வார்டன் கிட்ட நான் சொல்லிகிறேன் .. வா " என்று முன்னே நடக்க " எல்லாம் என் நேரம் " என்று நொந்தபடி பின் தொடர்ந்தான் அவன் .. "இங்கயே உட்காரு " என்று அவனை மரபெஞ்சில் அமர சொல்லிவிட்டு சில நிமிடங்களில் தீப்தியின் கையை பிடித்து கொண்டு வந்து நின்றாள் ஜெனி ..
" ஜெ... னி " சத்தமே வராமல் இதழ்களை அசைத்தான் கவீன் ..
"என்கிட்ட உனக்கு பேச எதுவும் இல்ல கவீன் தீப்தி கிட்ட பேசு ... நீ ஏன் அப்படி நடந்துகிட்ட ?"
" என்ன சீன் போடுறியா ?"- தீப்தி
" நீ கொஞ்சம் பேசாமல் இருக்கியா ? எனக்கு உன்னை எப்பவும் பிடிக்காதுதான் .. ஆனா, அதுக்காக இவன் செஞ்சதை நான் சரின்னு சொல்ல மாட்டேன் .. "- ஜெனி
" உனக்கென்ன வேணும் இப்போ ? " என்பது போல விநோதமாய் பார்த்தாள் தீப்தி ..ஆனால் மனதிற்குள் ஜெனியின் செய்கையினால் பரவும் நிம்மதியை அவளால் தடுக்க முடியவில்லை .. தனது கடமை முடிந்து விட்டது போல இருவரையும் பார்த்துக்கொண்டே ஜெனி நகர அவளை கை பிடித்து நிறுத்தினான் கவீன் ..