“ என் பேச்சு உனக்கு இப்போ கோபத்தைக் கூட தரலாம்.. ஆனா நீயே தனியா யோசிச்சுப் பாரு.. நான் சொல்லவந்ததின் அர்த்தம் புரியும்!” என்றவள்,
“வெற்றி வெயிட் பண்ணுறான்.. நான் உன்கிட்ட அப்பறமா பேசுறேன்” என்றபடி ஃபோனை வைத்துவிட்டிருந்தாள் கண்மணி. விஹாஷினியை வேதனைபடுத்தி விட்டோமோ என்ற குழப்பம் அவளுக்கு எழவில்லை! அவளைப் பொறுத்தவரை அவள் எடுத்த முடிவு சரிதான். அந்த திருப்தியில் கிளம்பியவள் தனக்காக காத்திருந்த நண்பனிடம் வம்பளந்து கொண்டே பயணத்தை தொடங்கினாள்.
“வாவ்!!” தன்னெதிரில் நின்று கொண்டிருந்த அன்னையைப் பார்த்து வாயைப் பிளந்தான் சத்யன்.
“ என்ன அழகு எத்தனை அழகு” என்று அவன் பாடிட மகனைச் செல்லமாய் முறைத்தார் சுலோட்சனா.
“டேய் என்னைவிட்டால் இந்த உலகத்தில் வேறு யாரையும் பாராட்டவே தெரியாதா?” என்று அவர் அலுத்துக் கொண்டு திரும்ப சத்யனின் செல்ஃபோன் சிணுங்கியது. திரையில் அர்ப்பணாவின் பெயரைப் பார்த்ததுமே அவன் முகத்தில் ஒளி கூடியது.
“ ஹா ஹா இப்போத்தானே கேட்டீங்க, வேறு யாரையும் பாராட்ட மாட்டேனான்னு? இதோ” என்றவன் ஃபோனைக் காட்டவும், அர்ப்பணாவின் அழகுமுகம் அந்த ஃபோனில் தெரிந்தது.
“டேய் பாவம் பொண்ணு லைன்ல வெயிட் பண்ணுறால்ல? ஃபோனை எடு!” என்று சுலோட்சனா கூறவும் ஃபோனை அட்டென் செய்து அன்னையின் கைகளில் திணித்தான் சத்யன்.
“ஹலொ சத்யா”
“அர்ப்பணா, நான் சத்யாவோட அம்மா பேசுறேன்மா”. கனிவு நிறைந்த அவரது குரலைக் கேட்டதும் என்ன பேசுவது? என்றே தெரியாமல் மௌனமாகினாள் அர்ப்பணா.
“என்னம்மா பேச்சையே காணோம்? சத்யாக்கிட்ட மட்டும்தான் பேசுவியா? என்கூட பேச மாட்டியா?” என்று சுலோட்சனா உற்சாகமாய் கேட்கவும், கொஞ்சம் சகஜமாகினாள் அர்ப்பணா.
“ எப்படி இருக்கீங்கம்மா?”
“ நான் நல்லா இருக்கேன்மா! உன்னைப் பார்க்கத்தான் வந்துக்கிட்டே இருக்கேன், நீ வருவதானே?”
“அது விஷயமாகத்தான் ஃபோன் பண்ணேன்மா!”
“ ஏதும் ப்ரச்சனையா?”
“ ப்ரச்சனை இல்லை.. ஆனால்..”
“ஆனால் என்னம்மா?”
“ ஃபங்க்ஷன்ல எல்லாருக்கும் சீட் ரிசர்வ் பண்ணி வைப்பாங்கல்ல…”
“ஆமா ..அதற்கென்ன?”
“ எனக்கும் அவருக்கும் ஒரே டேபல் ரிசர்வ் பண்ணி இருக்காங்கம்மா.. ப்லான் பண்ணி பண்ணுறாங்களோன்னு தோணுது” தயக்கத்துடன் அர்ப்பணா கூறவும், தனது தாயின் பேச்சை செவிமடுத்து ஏதோ ப்ரச்சனை என்று உணர்ந்தவன், ஃபோனை ஸ்பீகரில் போட்டிருந்தான்.
“அதனாலென்ன அபி ?” உரிமையாய்க் கேட்டான் சத்யன். அவனது கணீர்குரலைக் கேட்டதும் அவளுக்குள் தைரியம் எனும் உணர்வு ரத்தத்தில் சீறிப் பாய்வது போல ப்ரம்மைக் கொண்டாள் அர்ப்பணா.
“ இதுல உனக்கு டவுட்டே வேணாம் அபி. ப்லான் பண்ணித்தான் டேபல் ரிசர்வ் பண்ணி இருப்பாங்க.. இந்த நிகழ்ச்சிக்கு சில விளம்பரங்கள் அவசியம் தானே ? அதற்கு நீயும் நானும்தான் பகடைக்காய். இதென்ன புதுசாகவா நடக்குது ? இதை நினைச்சு கவலைப்பட்டு நமது நேரத்தை நாம் வேஸ்ட் பண்ணிட வேணாம். நான் சொல்லுறது உனக்கு புரியுதா?” என்று கேட்டான் சத்யன். அவனது கூற்றில் மனம் தெளிந்தாள் அர்ப்பணா. அவளது மனதில் கொஞ்சமாய் குடியிருந்த ஐயமும் மறைந்தே போயிருந்தது. தான் அவனை அழைத்ததற்கான முக்கியக் காரணத்தைக் கூற ஆரம்பித்தாள் அவள்.
“ தேங்க்ஸ் சத்யா .. நீங்க இதைத்தான் சொல்லுவிங்கன்னு எனக்கும் தெரியும். இதை நினைச்சு கவலைப்படுறது எனக்கும் பிடிக்காது உங்களுக்கு தெரியுமே ! நான் இன்னொரு விஷயமாகத்தான் உங்களுக்கு ஃபோன் பண்ணேன்.”
“சொல்லும்மா.. உனக்காக எதையும் செய்ய சத்யா ரெடி” என்று சத்யன் கூறிட சுலோட்சனாவும் ஆமோதிப்பது போல புன்னகைத்தார்.
“ என்னுடைய ப்ரண்ட் நிரூபணா, இன்னைக்கு எனக்காக ஃபங்க்ஷனுக்கு வருவா. ஆனால் நான் அவளோடு வர முடியாது. நான் அங்கு முன்னாடியே போயிருவேன். இன்னைக்கு நான் டான்ஸ் பெர்ஃபார்மன்ஸ் பண்ணுறதுனால, சீக்கிரம் வந்திடுவேன்.” என்று அர்ப்பணா கூறிட,
“எனக்கு நிரூவோட ஃபோன் நம்பர் கொடு.. நான் பேசிக்கிறேன்” என்று கூறினான் சத்யன். அவள் சொல்லி முடிப்பதற்குள்ளேயே அவளது மனதை அறிந்திருந்தான் அவன். அதை உணர்ந்து மகிழ்ச்சி கொண்டாள் அர்ப்பணா. நிரூபணாவிற்கு பின், அவள் அதிகமாய் நம்புவது சத்யனைத் தான். அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாகவே திகழ்ந்தான் சத்யன். அபியிடம் பேசி முடித்தவன், சொன்னது போலவே நிரூபணாவிடமும் பேசிவிட்டிருந்தான். நீண்ட நாட்களுக்குப் பின் அவனிடம் இருந்த இறுக்கம் மறைந்திருந்தது.