தொகுப்பாளியின் இனிய குரல், ரசிகர்களின் ஆரவாரத்தில் தொலைந்து போனது சில நொடிகள். நிகழ்ச்சியின் முதல் அங்கமாக அர்ப்பணாவின் நடனம் என்று அறிவிப்பு வழங்கியதும் மீண்டும் கரகோஷங்கள் எழுந்தன. அரங்கில் ஒரு ஓரமாய் நின்றிருந்த ராகவனோ தன்னவளை சைட் அடிக்க தயாராகினான். சத்யனோ, இரு விழிகளையும் மேடையைவிட்டு விலக்கவில்லை.
அரங்கத்தில் நிசப்தம் தோன்றும்வரை, மேடையில் தோன்றாமல் இருந்தாள் அர்ப்பணா. மௌனம் தனது ஆட்சியை தொடங்கிய மறுநொடி, பிடோவனின் இசை ஒலிக்க, ஆகாய நீல நிற உடை அடைந்து மேடையில் நின்றாள் அவள்.
பெண் என்பவள் பிறந்ததில் இருந்து மரணிக்கும்வரை தனது வாழ்வில் சந்திக்கும் உணர்ச்சிகள் பல. அவற்றில் முக்கியமான ஏழு பரிமாணங்களை எடுத்துக் கொண்டாள் அவள். ஒவ்வொரு நிலைக்கும் ஒவ்வொரு வண்ணம்.. ஒவ்வொரு வித பின்னணி இசைக்கும் ஒவ்வொரு வித நடமென ஆடினாள். மாடர்ன் ஸ்டைலில் ஆரம்பித்தவள், கடைசியாய் பரதநாட்டியம் ஆடிக்கொண்டிருந்தாள். அவளது சலங்கை ஒலியைத் தவிர அரங்கில் எந்தவொரு சத்தமும் கேட்கவில்லை. தனது வேதனைகளை அதிருப்திகளை, லட்சியங்களை பின்னணி இசையின்றி தனது சலங்கை ஒலியாலும் அபிநயங்களினாலும் உணர்த்தினாள். அவளின் கன்னங்களை தீண்டிச் சென்ற கண்ணீர்த்துளிகள் கேமராக்களின் நூதனப்பார்வையினால் ரசிகர்களின் விழிகளிலும், உள்ளங்களிலும் சேர்ந்தன.
ஆடி முடித்திருந்தாள் அவள்! ஆட்டம் கட்டிருந்தது அவளை அவதூறு பேசியவர்களின் இதயங்கள். நீண்ட மௌனத்திற்கு பின் கரகோஷங்கள் செவிகளை துளைக்க தன் இறுக்கையிலிருந்து எழுந்தே விட்டிருந்தான் சத்யன். ஆர்வமாய் பார்த்த விழிகளை ஒதுக்கியவன் அவளை மட்டுமே பார்த்தான். அர்ப்பணாவும் அவனை மட்டும்தான் பார்த்தாள். தனது கட்டை விரலை உயர்த்தி அவன் வெற்றி சின்னத்தை காட்டிட அவளது இதழ்களில் வெற்றிப்புன்னகை உருவானது. அன்றைய நிகழ்வின் மறக்க முடியாத அங்கமாக அவளின் நடனம் அமைந்தது.
அதன்பின் நிரலுக்கேற்ப நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்க, நடன உடையிலிருந்து அழகான புடவைக்கு மாறிய அர்ப்பணா அவளது இறுக்கையில் அமர்ந்தாள். அர்ப்பணா, சத்யன் இருவருக்கும் நடுவில் சுலோட்சனா அமர்ந்திருந்தார். நிரூபணா பேச வார்த்தைகளின்றி அர்ப்பணாவை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள். கண்மணியும் தனது பாராட்டினை தெரிவிக்க, கண்மணியையும் வெற்றியையும் அவளுக்கு அறிமுகப்படுத்தினான் சத்யன். அங்கு ஒரு அழகான நட்பு உண்டானது. வெற்றியை பார்த்து ரகசியமாய் சிரித்து வைத்தாள் கண்மணி. அந்த புன்னகையின் காரணம் அவர்கள் இருவருக்கும் மட்டும்தான் தெரியும்.
கூடிய சீக்கிரம் தங்களது எண்ணம் ஈடேறிடும் என்ற எண்ணத்தில் இருவரும் இருக்க, அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த எண்ணம் சுக்குநூறானது! சிறந்த நடிகைகளுக்கான நியமனங்கள் என்று அறிவிக்கும்போதே தயாராகியிருந்தாள் அர்ப்பணா. இந்த ஆண்டும் அந்த விருது அவளுக்குத்தான்.
“சிறந்த நடிகைக்கான விருதை வெல்பவர், நடிகை அர்ப்பணா” என்று அவளின் பெயர் அறிவிக்கப்படவும், மேடையில் அழகு மயிலாய் ஏறினாள் அர்ப்பணா. முதலில் அவளது நடனத்திற்கான பாராட்டுகளை தெரிவித்த தொகுப்பாளினி, அவளின் கண்ணீரைப் பற்றி கேட்கவும்,
“ கண்ணீருக்கு காரணமானவங்க என் கண்பார்வையில் இல்லை.. என் சந்தோஷத்திற்கு காரணமானவங்க என் முன்னால் இருக்கீங்க” என்று அவள் கூறவும் ரசிகர்கள் மகிழ்ந்து விசிலடித்தனர்.
“ எனக்கு முதல் வாய்ப்பு கொடுத்த இயக்குனர், தொடர்ந்து வாய்ப்புகள் தந்த இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், சக நடிகர்கள், நான் நடித்த படங்களுக்கு நல்ல பாடல்களைத் தந்த இசையமைப்பாளர்கள், இப்படி அனைவரையும் தொடர்ந்து எப்போதும் அன்பு செலுத்தும் ரசிகர்களும் இருக்குற இந்த இடத்தில் நான் என் சந்தோஷத்தை மட்டுமே பகிர்ந்து கொள்ள விரும்புறேன்.. என் கண்ணீரின் காரணமும் ஆனந்த கண்ணீர்ன்னு எடுத்துக்கோங்க” என்றாள் தனக்கே உரிய பாணியில். பொதுவாகவே அர்ப்பணா பேசும் நேர்காணலிலோ அல்லது நிகழ்ச்சியிலோ அவளே அறியாமல் பேசிடும் வார்த்தைகள் பிறரை வசீகரித்து விடும். இப்போதும் புன்னகையுடன் அவள் பேசிய விதம் அனைவரையும் கவர்ந்தது. விருதினை புன்னகையுடன் ஏற்றுக் கொண்டவள், இதை நான் இன்னொருத்தர் கையால் வாங்கிக்கலாமா? என்று கேட்டாள். தொகுப்பாளினி குறும்பான குரலில்,
“அவர் பேரை நீங்களே சொல்லி கூப்பிடுறிங்களா? அல்லது நான் கூப்பிடவா?” என்று கேட்கவும், அர்ப்பணா சத்யனைப் பார்த்தாள். அடுத்த நொடியே தன் இறுக்கையில் இருந்து எழுந்திருந்தான் சத்யன். யாரும் அவன் பெயரை அழைக்கவில்லை..ஆனால் அவளது ஒரே பார்வையில் அவன் எழுந்திட மீண்டும் அரங்கம் ஆரவாரமானது.
அடுத்து என்ன நடந்துச்சுன்னு, அடுத்த எபிசோட்ல சொல்றேன்.
-வீணை இசைந்திடும்-
{kunena_discuss:1055}